தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! – இரா.சம்பந்தன்

தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட பெரும்பாலான தமிழ் கட்சிகள் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இணக்கப்பட்டிற்கு வந்துள்ளதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார். அத்துடன், தற்போது இலங்கையில் புதிய அரசியல் சாசனமொன்றை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட சம்பந்தன் இதில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை, தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.