சீதன சீரழிவுகள்!!!

அன்புள்ள மருமகனுக்கு,

எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன். ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமார எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நேரம் இரவு பத்து மணி. அதிகாலையிலேயே நானும் உங்கள் மாமியாரும் இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவோம். ஏனெனில் இனி இது எங்கள் வீடல்ல.உங்கள் வீடு. பரம்பரையாக வாழ்ந்த வீட்டை பாதியில் விட்டுப் போக நேர்ந்ததில் பெட்டி படுக்கைகளைக் கட்டும் கயிறெல்லாம் உங்கள் மாமியாரின் கண்ணீராலேயே கழுவப்படுகிறது.

நானும் உங்கள் மாமியாரும் இன்னும் எட்டு மணி நேரங்கள்தான் இந்த வீட்டில் இருப்போம். உள்ளம் அமைதியில்லாமல் உலாவிக்கொண்டிருக்கிறது. இனம் தெரியாத ஏதோ ஒன்று இதயத்தைப் பிசைந்து எடுக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் நான் எழுத ஆரம்பிக்கின்றேன். வேகா வெயிலில் வியர்வை சிந்தி நான் கட்டிய இந்த இரண்டு அடுக்கு மாடியின் பிரமாண்டமான படுக்கையறையின் பஞ்சு மெத்தையில் நீங்கள் உல்லாசமாய் உறங்கிக் கொண்டிருக்க அதே வீட்டில் யாருமில்லாத ஒரு மூலையில் பழைய பாயில் கிழிந்த தலையணையில் என்னைத் தூங்க வைத்திருக்கும் இந்த சமூக நீதியைப் பார்த்து நான் சிரித்துக் கொள்கிறேன். வீட்டின் சொந்தக்காரனே விருந்தாளியாய்ப் போன நிலையை எண்ணி வெட்கப்படுகிறேன். தான் கட்டிய சொர்க்கத்தில் தானே வாழமுடியாத திருசங்குவை விட என்னைக் கேவலமாக்கிவிட்ட இந்த சமூகத்தை எண்ணி நான் சிரித்துக் கொள்கிறேன்.

அன்பின் மருமகனே, இந்த வீட்டின் ஒவ்வொரு கல்லுக்குப் பின்னாலும் ஒரு கதையும். ஒரு வேதனையும்,ஒரு வியர்வையும் இருப்பது உங்களுக்கு விளங்காது. உங்களுக்கு வெயில் படாது செய்த இந்த கூரைக்குப் பின்னால் நான் வெயிலில் நின்று வெட்டிய வேளாண்மை இருக்கிறது. நீங்கள் காலாற நடக்கும் இந்த “டைல்” தரைக்குப் பின்னால் எனது மனைவிக்கு நான் செய்த நகைகள் இருக்கிறது. நீங்கள் தூங்கி விழும் அந்தத் தேக்குமரக்கட்டிலுக்குப் பின்னால் நான் எனது மகனுக்கென்று மிச்சம் வைத்த வளவொன்று விற்றகதை இருக்கிறது. நீங்கள் சுகமாகக் கழிக்கும் கழிப்பறைக்குப் பின்னால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் கரைந்து கிடக்கிறது. நீங்கள் உண்டு பருக குளிர் சாதனப் பெட்டி,கண்டு களிக்க கலர் டீவி,கழுவித் துடைக்க வோஷின் மெஷின். இவற்றிற்குப் பின்னால் இந்த ஏழையின் கடன் இருக்கிறது.மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லாத சமூகமா இது மருமகனே?

முதுமையின் பலவீனமும், தனிமையின் மறதியும் என்னை முடியாதவனாய் ஆக்குகின்றன. மூலையில் இருந்து முழங்கால் வலியால் முனகிக்கொண்டிருக்கும் உங்கள் மாமியாரோடும், இருந்தால் எழும்பமுடியாத இடுப்பு வலியோடும் எனது காலங்கள் மெதுவாய்க் கழிகின்றன. எனக்கு அதிகமான நாட்கள் எதிரில் இல்லை என்பதை எனது உடம்பு எனக்கு அடிக்கடி ஞ்சாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாளை ஒரு வருத்தம் வாதம் வந்தாலும் கடன் பட்டுக் காலம் கழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். நான் செய்த தவறு என்ன என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஒரு பெண்ணைப் பெற்றதா? எனது மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கனவு கண்டதா? படித்தவர் கையில் பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும் என நினைத்ததா? சந்தோஷமாய் வாழ்வதற்கு அடுக்கு மாடி எதற்கு மருமகனே? ஒரு ஓலைக் குடிசை போதுமே?

நாளை மாமாவுக்கு ஏதாவது கடன் இருக்கிறதா என்று அன்புருகக் கேட்பீர்கள்? மச்சான் எத்தனை கருணையுள்ளவர் என்று எனது மகளும் உங்களில் மயங்கி விடுவாள். அறைந்துவிட்டு வலிக்கிறதா? தடவிவிடவா? எனக் கேட்பது போல்தான் இது இருக்கிறது. இதற்கு நீங்கள் அறையாமலே இருந்திருக்கலாமே. இந்த வேதனையில் நான் விழுவேன் என்று தெரிந்த பின்னும் நீங்கள் என்னைத் தள்ளிவிட்டுவிட்டு கைகொடுத்து காப்பாற்ற நினைப்பது எத்தனை கபடத்தனம். இத்தனை அதிருப்தி இருந்தும் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா?அந்த ஏலத்தில் இலகுவாகக் கிடைத்தது நீங்கள் மாத்திரம்தான். அப்துஸ்ஸமதின் மகன் ஐந்து மாடி வீடும் ஆறு கோடிப்பணமும் கேட்டார். கூரைக்கும் டைல் போடச் சொன்னார் குத்தூஸின் மகன். கௌரவமான குடும்பமாம் கார் ஒன்று வேண்டும் என்றார் காதரின் பேரன்.

வெளிநாட்டு டிகிரியாம் வேனொன்று இருந்தால் நல்லம் என்றார் நபீலின் தம்பி. கட்டாரில் எஞ்சினியராம் கை நிறைய சம்பளமாம் காணி நாலு ஏக்கர் தந்தா குறைஞ்சா போகும் என்றார் சொழுக்கரின் சின்ன மகன். கொம்பியூட்டர் ஸ்பெசலிஸ்டாம்,கொழுத்த சம்பளமாம் கொழும்பில் ஒரு வீடு தாருங்கள் என்றார் தம்பிலெப்பையின் மூத்த மகன். மார்க்கமான பொடியனாம் வீடு மட்டும் போதுமாம் என்று நீங்கள் வந்தீர்கள். லாபமாக வருகிறது உடனடியாக வாங்கிப் போட்டுவிடுங்கள் என்றார் உங்கள் மாமியார். உங்கள் வீட்டாரிடம் விலை பேசினேன்.உங்களை வாங்கிவிட்டேன். என்றாலும் மருமகனே, இதைப் போன்ற வியாபாரத்தில் எனக்கு இஷ்டம் இல்லை. வந்த இடத்தில் வாழ்ந்தவனை விரட்டி ஓரத்தில் வைத்து ஒய்யாரமாக உறங்கும் உங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வேறுபாடு தெரியவில்லை. அடிமை உள்வீட்டுக்குள், எஜமான் அரச மரத்தடியில்.இந்த சகவாசம் எனக்குச் சரிவராது.

உங்களை யார் விரட்டியது? நீங்களாகப் போக விரும்பிவிட்டு என்னை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள். எனது நியாயம் என்னோடு. வெளியில் இருந்து வியர்வையோடு வருவேன்.எனது சாய்மணையில் நீங்கள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள். என்னைக் கண்டதும் அரைவாசி எழும்பி “இருக்கப்போகிறீர்களா” என்று கேட்பீர்கள்.நான் “இல்லை நீங்கள் இருங்கள்” என்று சொல்லப் போவது உங்களுக்குத் தெரியும். அந்த நிலை எனக்கு வேண்டாம். உங்களைத் தேடி யாரும் வரும்போது உள்ளே இருக்கும் என்னைத் தேடிவந்தவர்களை எழுப்பிக்கொண்டு நான் வாங்கிய ‘குஷன் செட்டை’ உங்கள் நண்பருக்குக் கொடுத்துவிட்டு வெளிவிராந்தையில் ரப்பர் கதிரை போட்டு பேசிக்கொள்ளும் கேவலம் எனக்கு வேண்டாம்.

சொந்த வீட்டில் சற்று சத்தமாகப் பேசினாலும் மருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள் என்ற உங்கள் மாமியாரின் அதட்டலின் அசிங்கம் எனக்கு வேண்டாம்.
நான் வாங்கிய டீவியில் செய்தி பார்த்துக்கொண்டிருப்பேன். ”அவர் மெச் பார்க்கவேண்டுமாம்” என்று எனது மகளை தூது அனுப்புவீர்கள். எழும்பிச்செல்லும் ஏமாற்றம் எனக்கு வேண்டாம். வீட்டுவாசலில் உங்கள் சைக்கில் சத்தத்தைக் கேட்டு எனது சாரனைச் சரிசெய்யும் சுதந்திரம் இல்லாத கோழைத்தனம் எனக்கு வேண்டாம். 25 வயது உங்களோடு தோற்றுப் போவதற்கு 65 வயது சுதர்மம் இடம் தரவில்லை. ஒரு மகளைப் பெற்ற பாவத்திற்காக இந்த வீட்டில் நான் அடிமையாய் இருப்பதை விட ஒரு வாடகை குடிசையில் ராஜாவாய் இருந்து விட்டுப் போகிறேன்.

வாழ்க்கையில் சொந்தக் காலில் வாழப் பழகிக்கொள்ளுங்கள். சொந்தக்காரர்களிடமே சுரண்டி வாழாதீர்கள்.ஒற்றைப் பெண்ணைப் பெற்ற ஓரளவு வசதியுள்ள நானே ஓட்டாண்டியாகிவிட்டேன் என்றால் நாலு பெண்ணைப் பெற்ற ஏழையின் நிலையை என்னவென்று சொல்வது. ஒரு தந்தையின் பாசத்தை துரும்பாகப் பயன்படுத்தி எங்களைத் துவைத்து துருவி எடுக்கிறீர்கள். பெண்ணைப் பெறுவது பரகத் என்பதைப் பொய்யாக்கிய பாவம் உங்களோடுதான். கடையில் இருந்ததையெல்லாம் உங்களுக்கு இறைத்துவிட்டு கடனாளியாய் கைவிரித்தபடி செல்கிறேன்.இது ஆயுள் கடனல்ல,பரம்பரைக் கடன்.எப்போது கழிக்கப்போகிறேனோ தெரியாது.

ஆனால் பயப்படாதீர்கள் மருமகனே, இதை யாரிடமும் சொல்லமாட்டேன். எனது உள்ளத்தில் உறுமும் எதையும் உங்களுக்கு காட்டமாட்டேன். உங்களைப் பார்க்கும் போதெல்லாம் பரவசமாவதுபோல் பல்லிழித்துக்கொள்வேன். சொந்தக்காலில் நிற்கத்தெரியாத சோம்பேறி என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். உங்கள் வீட்டார் வந்தால் விழுந்து விழுந்து கவனிப்பேன். என்னை வங்குறோத்தாக்கியவர்கள் வெட்கமில்லாமல் வருகிறார்கள் என்று உள்ளே நினைத்துக்கொள்வேன். எனது மருமகன் போல் உலகில் யாருமில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்வேன். ஒரு பெண்ணை வைத்து வாழ வழியில்லாதவன் என்று வாய்க்குள் முனகிக்கொள்வேன். வெள்ளாமை நெல் அனுப்பிவைத்தால் என்ன கவனிப்பு எனது மருமகன் என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிடுவேன். எனது விளைச்சலில் எனக்கே நெல் அனுப்புகிறான் என்று எனக்குள் நானே எண்ணிக்கொள்வேன்.

எனது மகளோடு மருமகனுக்குத்தான் எத்தனை இரக்கம் என்று அயல் வீட்டுக்காரர்களிடம் கூறி வைப்பேன். வீடு கொடுக்காவிட்டால் வந்திருப்பானா என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். நான் உங்களோடே இருப்பேன். உங்களோடே சிரிப்பேன். கடைசிவரைக்கும் எனது வெறுப்பை நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் இவ்வாறுதானே ஒவ்வொரு மாமனாரும் உலகத்தில் வாழ்கிறார்கள். இக்கடிதத்தை உங்களிடம் நான் காட்டவும்மாட்டேன். கிழித்துப்போட்டும் விடுவேன். வாசித்த கையோடு எனது மகளை விட்டுவிட்டு ஓடிவிடுவீர்களே. எனது மகள்தானே எனது பலவீன்மும் உங்கள் பலமும். சரி மருமகனே நேரமாகிவிட்டது. செல்லவேண்டும்.நான் கட்டிய வீட்டை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாளை முதல் அழுத உள்ளத்தோடும் சிரித்த முகத்தோடும் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். வாழ்கையே ஒரு தற்காலிக நாடகம்தானே.

மதிப்புக்குரிய மாமனார்?!

[ சுபீட்சம் இணையம் ]

13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க சு.க அனுமதிக்காது

அரசியலமைப்பு திருத்தப்படுகிற போதும் அதனூடாக 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு போதும் இணங்காது என சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளர் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.அரசியலமைப்பு திருத்தத்தினூடாக நாட்டின் ஜக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவோ வடக்கு கிழக்கை இணைக்கவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழான சுதந்திர கட்சி அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

(“13 க்கு அப்பால் அதிகாரம் வழங்க சு.க அனுமதிக்காது” தொடர்ந்து வாசிக்க…)

ஒரே குரலில் பேசுதல் ! வினைத்திறன் மிக்க நிர்வாகம் ! முதல்வரிடம் கோரிக்கை !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல், வினைத்திறன் மிக்க மாகாண நிர்வாகம் இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. என முதல்வரிடம் தெரிவித்தனர் வட மாகாணசபை உறுப்பினர்கள். வட மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும், வட மாகாணசபையின் முதலமைச்சர் கௌரவ.நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று [11-01-2016] முற்பகல் 10:00 மணிமுதல் முதலமைச்சர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வட மாகாணசபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்களின் கூட்டான வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சர் அவர்கள் இந்த சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கித்தந்திருந்தார். மேற்படி சந்திப்பில் 18 ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

(“ஒரே குரலில் பேசுதல் ! வினைத்திறன் மிக்க நிர்வாகம் ! முதல்வரிடம் கோரிக்கை !” தொடர்ந்து வாசிக்க…)

நவீன சீதை புலம்பல் [கற்பனை கலந்த நிஜம்]

ஹே ராமா! உப்பரிகையில் நின்ற என்னை நீ நோக்க நானும் நோக்கியபோது நம்பினேன் சிவதனுசை உடைத்து என்னை மணம் முடித்து அயோத்தி அழைத்து சென்று வாழவைப்பாய் என. அனால் நடந்தது என்ன? நால்வகை படைகண்டு பாரெல்லாம் புகழ்பரப்பி தமிழ் ஈழம் மலரும் நாள் நெருங்குவதால் தேவை ஆளணி என பெற்றோர் சம்மதம் இன்றியே பலவந்தமாய் பிள்ளைகளை பிடித்து சென்று மாவிலாறில் நீரை தடுத்து மோதலை தொடங்கி நந்திகடலில் ஈழ தமிழரை முள்வேலிக்குள் சிக்கவைத்த பிரபாகரன் போலவே நீயும் என்னை மரவுரி தரித்து கானகம் ஏகச்செய்தாய்.

(“நவீன சீதை புலம்பல் [கற்பனை கலந்த நிஜம்]” தொடர்ந்து வாசிக்க…)

புது அரசியலமைப்பு; நாடு முழுதும் மக்கள் கருத்து

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் கருத்துக்களை அறியும் பணி நாளை மறுதினம் (13)ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்களை அறியும் நோக்கில் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவொன்றை பிரதமர் நியமித்திருந்தார். இந்தக் குழுவினர் இன்று (11)கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர்.

(“புது அரசியலமைப்பு; நாடு முழுதும் மக்கள் கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் கடும்போக்குடைய தமிழ் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ள விடயத்திலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும், தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பாக பேரவை எடுத்துள்ள நிலைப்பாடு குறித்தும், சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(“வடக்கு முதல்வருக்கு அழுத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஊடக அறிக்கை – தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு
மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
அரசியல் கைதிகளின் விடுதலை
எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் தைப்பொங்கல் விழாவில் தாங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக எடுத்த முடிவு இன ஒற்றுமையை விரும்புகின்றவர்களுக்கு நல்லதொரு செய்தியாக அமைந்துள்ளது. இது தங்களால் விடப்படும் நல்லதொரு சமிக்ஞையாகும். மேலும் எமது நாட்டில் விளங்கும் பல்வேறு மதஙகளால் கொண்டாடப்படும் சமய நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்து அவற்றை தேசிய விழாவாக அனைவரும் அனுஸ்டிக்க அல்லது கௌரவிக்கக்கூடிய வகையில் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென நான் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

(“ஊடக அறிக்கை – தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)

கறுப்பு கொடி எதிர்ப்பு தீர்வை தருமா? வெறுப்பை வளர்க்குமா?

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று வட மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் உள்ள தமிழர்களின் பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என்பதை ஆட்சேபித்தே கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

(“கறுப்பு கொடி எதிர்ப்பு தீர்வை தருமா? வெறுப்பை வளர்க்குமா?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்புப் பேரவை: நாடாளுமன்றை நசுக்கும் செயல் – JVP

நாடாளுமன்றத்தை, அரசியலமைப்புப் பேரவையாக மாற்றும் தீர்மானமானது, நிலையியல் கட்டளைகளை மீறுகின்ற செயலாகுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தை நசுக்கி, ஓர் அரசியலமைப்பைக் கொண்டுவர அரசாங்கம் முயல்கின்றது என, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, குற்றம் சாட்டினார். தனது கட்சி, இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிடும் என அவர் கூறினார்.

(“அரசியலமைப்புப் பேரவை: நாடாளுமன்றை நசுக்கும் செயல் – JVP” தொடர்ந்து வாசிக்க…)

நீண்டகாலம் நிலைத்திருக்கும் அரசியல் தீர்வுக்கு ஐ. நா ஒத்துழைக்கத் தயார்

நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(08) நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஐ.நா இலங்கைக்கு உதவி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(“நீண்டகாலம் நிலைத்திருக்கும் அரசியல் தீர்வுக்கு ஐ. நா ஒத்துழைக்கத் தயார்” தொடர்ந்து வாசிக்க…)