ஊடக அறிக்கை – தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு
மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
அரசியல் கைதிகளின் விடுதலை
எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் தைப்பொங்கல் விழாவில் தாங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக எடுத்த முடிவு இன ஒற்றுமையை விரும்புகின்றவர்களுக்கு நல்லதொரு செய்தியாக அமைந்துள்ளது. இது தங்களால் விடப்படும் நல்லதொரு சமிக்ஞையாகும். மேலும் எமது நாட்டில் விளங்கும் பல்வேறு மதஙகளால் கொண்டாடப்படும் சமய நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்து அவற்றை தேசிய விழாவாக அனைவரும் அனுஸ்டிக்க அல்லது கௌரவிக்கக்கூடிய வகையில் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென நான் தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இன்றுகூட புதுவருடம், வெசாக், நத்தார் போன்ற கொண்டாட்டங்கள் சமய ரீதியாக அல்லாமல் அனைவரும் கொண்டாடும் நிகழ்வுகளாகும். சில வருடங்களுக்கு முன் இத்தகையவொரு நடைமுறையை அமுலுக்கு கொண்டுவர வேண்டுமென நான் கேட்டுக்கொண்டிருந்தும் துரதிஸ்டவசமாக அன்றைய அதிகாரிகள் அதை பொருட்படுத்தவில்லை. இந்த ஆலோசனையை கூறுவதன் எனது நோக்கம் இது நாட்டில் இன, மத ஒற்றுமையை வளர்க்கும் ஒரு செயலாக இதனை நான் கருதுகின்றேன். தைப்பொங்கல் இந்துக்களால் கொண்டாடப்படும் பெரும் கொண்டாட்டமாகும். சூரிய பகவானின் அனுகிரகத்தை பெறுவதற்கும் புதிய வாழ்வுக்கு குறிப்பாக பிரச்சனை உள்ளவர்கள் புதிய வழிவகையை காண்பதற்கும் இக்கொண்டாட்டம் உதவுகிறது. தடுப்புக் காவலிலும், சிறைக்கைதிகளாகவும் தொடர்ந்து சிறைகளில் இருக்கின்றவர்களின் உறவுகள் படும் துன்பங்களை பற்றி தாங்கள் அறியாததல்ல. தங்களை கொலை செய்ய முயற்சித்து தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு கைதியை தாங்கள் விடுதலை செய்தது இவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது. மனைவி மக்கள் உறவுகள் முழு நம்பிக்கையோடு பொங்கலை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
ஓரளவு பொறுப்புணர்வோடு தங்களை தவறாக வழிநடத்தவோ அல்லது பிரமாண்டமாக பாராட்டவோ இதனை கூறவில்லை ஆனால் முன்பு போலல்லாமல் இம்முறை பொங்கல் விழாவில் தமது உறவுகள் கலந்துகொள்ள கூடிய வகையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற முழு நம்பிக்கையோடு மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். நான் தங்களை வற்புறுத்தி கேட்டுக்கொள்வது யாதெனில் இம்முறை இவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் அவர்கள் அடையப்போகின்ற ஏமாற்றம் முன்பு என்றும் இல்லாதவாறு மிகப்பெரும் ஏமாற்றமாகவே இருக்கும். இது சம்பந்தமாக நான் அதிகம் கூறத் தேவையில்லை. ஏனெனில் இடம்பெயர்ந்தவர்களின் வீடுகளுக்கு தாங்கள் நேரடியாக விஜயம் செய்தபோது தாங்கள் அங்கு நேரில் பார்த்த துயர சம்பவங்கள் அகதிகளின் வீடுகளிலும், சிறைக்கைதிகளின் வீடுகளிலும் பெருமளவில் காணப்படுகின்றது.
ஜனாதிபதி அவர்களே! மிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்ற இக் கொண்டாட்டத்தில் தங்களின் பங்களிப்பு மிகப்பெருமளவில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு நான் கோருவது நியாயமாக இருக்குமோவென எனக்குத் தெரியாது ஆனால் எனது வேண்டுகோள் மிகவும் நியாயமானதாகும் என்பதாக எண்ணி திருப்தியடைகின்றேன். இன்றைய சூழ்நிலையில் கடந்த காலத்தைப் போலல்லாமல் இத்தகைய வேண்டுகோள் பலரிடம் இருந்து மட்டுமல்ல நம்ப முடியாதவர்களிடம் இருந்தும் வந்திருக்கின்றதென்பதை உணருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள

வீ.ஆனந்தசங்கரி- செயலாளர் நாயகம், த.வி.கூ