மீண்டும் சரிந்தது ரூபாய்

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றும் (27) வீழ்ச்சியடைந்தது. நேற்றைய நாளில், ஐ.அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய், 169.25 எனப் பதிவாகியது. நேற்று முன்தினம், 169.05 என்ற அதியுச்ச வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்த ரூபாய், இரண்டாவது தொடர்ச்சியான நாளாக, நேற்றும் வீழ்ச்சியடைந்தது. ரூபாயின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி, ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், இவ்வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 1.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய், இம்மாதத்தில் மாத்திரம், 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இவ்வாண்டில், 10.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி இன்னமும் இராணுவத்திடம்

வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள கூட்டுறவுச் சங்கக் காணி விடுவிக்கப்பட்டதாக, எழுத்துமூலமாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் தெரிவித்த இராணுவத்தினர், தொடர்ந்தும் அக்காணியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, காணியின் நில அளவை வரைபடத்தைக் கோருவதாகவும், கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

(“வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி இன்னமும் இராணுவத்திடம்” தொடர்ந்து வாசிக்க…)

விரிவுரையாளர் கொலைக்கு நீதிக்கோரி போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிக்கோரி, இன்று (28) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பதிலடி வழங்கப்படும் – ஈரானின் புரட்சிகர காவல்படை

ஈரானில், இராணுவ அணுவகுப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அத்தாக்குதலுக்கு, “பயங்கரமானதும் மறக்கமுடியாததுமான” பதிலடி வழங்கப்படும் என, ஈரானின் புரட்சிகர காவல்படையினர் எச்சரித்துள்ளனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் 12 பேர், புரட்சிகரக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையிலேயே, இவ்வெச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

(“பதிலடி வழங்கப்படும் – ஈரானின் புரட்சிகர காவல்படை” தொடர்ந்து வாசிக்க…)

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’

இலங்கையில், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை இராணுவத்தினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவெனக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாற்றங்களுடன் கூடிய இலங்கையை, புதிய கண்ணோட்டத்துடனும் புதிய சிந்தனையுடனும் பார்வையிடுமாறு, சர்வதேசத்திடம் கோரினார்.

(“எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’” தொடர்ந்து வாசிக்க…)

1990ம் ஆண்டு……………………

1990ம் ஆண்டு நான் ஒருவிபத்தாக வடக்குகிழக்குமாகாணசபை உறுப்பினராக இருந்த போது ஒரேநாளில் மூன்று பாடசாலைகளைத் திறந்தோம் .இதுமாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயம்…அதிபராக கணிதப்புலி அக்கரைப்பற்றைச்சேர்ந்த ஹயாத்து பாவா ஆசிரியரை நியமித்தோம் …

நண்பர் Y.அகமத் அவர்கள் கோட்டக்கல்வி அதிபராகவிருந்தார் அவரின் பங்களிப்பே அதிகம் ..நான் ஒரு டிரக்டரில் பிறைந்துரைச்சேனை அதிபரான SAS மகுமூத் அவர்களிடம் கதிரை மேசைகளை இரவலாக ஏற்றிவந்தேன் ..கோட்டக்கல்வி அதிகாரி அவர்களும் நானும் விருந்தினர் பதிவேட்டில் குறிப்புகளை எழுதி பாடசாலையை ஏழு மணிக்கெல்லாம்ஆரம்பித்து வைத்தோம்..
அன்று கற்குடா முஸ்லிம்களுக்கு ஒரேநாளில் மூன்று பாடசாலைகள் உருவாக ஒத்துழைத்த நல்ல உள்ளங்களை இந்தக்கணத்தில் நினைவுகொள்கிறேன்…
முதலமைச்சராகவும் கல்விஅமைச்சராகவுமிருந்த தோழர் வரதராஜப்பெருமாள் , செயலாளராகவிருந்த ஜனாப் மன்சூர் அவர்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் மறைந்த தியாகராசா அவர்கள்… பாடசாலைக்கான காணியைத்தந்துவிய அகமதுலெவ்வை அவர்கள் அனைவரையும் நினைவு கொள்வோம் நண்பர்களே

(Slm Hanifa)

‘தமிழர் தரப்பு நிராகரிக்கிறது’

போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவர்களை, அரசியல் கைதிகளுடன் இணைத்து, பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளில் முன்வைப்பாராயின், அந்த யோசனையை தமிழர் தரப்பு, அடியோடு நிராகரிப்பதாகத் தெரிவித்த, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), போர்க் குற்ற விசாரணை நடைபெற்று, நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களுடையதும் கூட்டமைப்பினதும் கோரிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளது.

(“‘தமிழர் தரப்பு நிராகரிக்கிறது’” தொடர்ந்து வாசிக்க…)

‘நினைவு நாளில் உரையாற்ற இடமில்லை’

தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வில், எவரது உரையும் அங்கு இடம்பொறாதென, முன்னாள் போராளி மனோகர் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவு நாள் ஏற்பாடுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த திலீபன், செப்டெம்பர் 26ஆம் திகதி, தன்னுயிரை இழந்திருந்தார். இதை முன்னிட்டு, புதன்கிழமை (26), நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ளன. (“‘நினைவு நாளில் உரையாற்ற இடமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)