ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம்

(எம். காசிநாதன்)
தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

“ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க – பா.ம.க கூட்டணியை முதலில் முடிவு செய்து கொண்டார் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவும் தி.மு.கவும் 50 சதவீத இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்து, தேர்தலில் போட்டியிடுகின்றன.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளும், சட்டமன்றத்துக்கு இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளும் இப்போதைக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளன. இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது, அ.தி.மு.கவுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. அதேபோல் தி.மு.கவுக்குக் கௌரவப் பிரச்சினை.

2011க்குப் பிறகு தேர்தல் வெற்றியைச் சுவைக்க முடியாத ஏக்கத்தில் தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, கட்சியை ஸ்டாலின் கட்டுக்கோப்புடன் கொண்டு சென்று விட்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் தான், அவருடையை தலைமைக்கு ஓர் அடையாளத்தைக் கொடுக்கும்.

ஏனென்றால், தி.மு.க தலைவரான உடன் சந்திக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இது. 18 இடைத் தேர்தல் தொகுதிகளுமே பொதுவாக அ.தி.மு.கவுக்கு வலுவான தொகுதிகள். ஆனால், இப்போது இருப்பது பழைய அ.தி.மு.க அல்ல. டி.டி.வி தினகரன் பிரித்துக் கொண்டு போன பிறகு, எஞ்சியிருக்கும் அ.தி.மு.க, இப்போது முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இருக்கிறது.

ஆகவே, வருகின்ற தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், அதிக பட்சமாக எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஜூன் மூன்றாம் ​திகதிக்குப் பிறகும் அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சட்டமன்ற ரீதியாக வாக்குக் கேட்டுப் போகிறார்கள்.

பா.ஜ.கவையும் சுமக்க வேண்டியது, ஒரு பெரிய தலைவலியாக எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. என்றாலும், அந்தக் கட்சியைத் தவிர்த்து விட்டு, கூட்டணி அமைக்க இயலவில்லை. இரண்டு வருடங்களாக ஆட்சியில் நீடிக்க பா.ஜ.க கொடுத்த தார்மீக ரீதியிலான ஆதரவை, அவ்வளவு எளிதாக எடப்பாடி பழனிசாமியால் மறந்து விட முடியாது. ஆனாலும் அக்கட்சிக்குத் தொகுதிகளை அள்ளிக் கொடுக்காமல் கிள்ளிக் கொடுத்தார்.

தற்போதைக்கு 18 இடைத் தேர்தல் தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, அ.தி.மு.க திடமாக நம்புகிறது. அதை நோக்கித்தான் அதன் தேர்தல் பிரசாரங்கள் அமைந்திருக்கின்றன. “ஸ்டாலின் எதிர்ப்பு” பிரசாரம், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த யோகத்தைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியால் ஐந்து தொகுதிகளுக்கு மேல் பிடிப்பது என்பது இமாலய சாதனையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய அளவில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளும் சமீபத்தில் எடுக்கப்பட்ட, லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகளும் இப்படித்தான் சுட்டிக்காட்டுகின்றன.

இப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், அதில் 11 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரிடமிருந்து சில கோடிகள் பணம் பறிமுதல் போன்ற தேர்தல் ஆணையகத்தின் நடவடிக்கைகள், நெருக்கடியைக் கொடுக்கும் என்று அ.தி.மு.க நம்புகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைவோம் என்ற சோகத்தில், அ.தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வேகமாகவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தி.மு.க கூட்டணியைப் பொறுத்தமட்டில், மத்திய, மாநில அரசாங்கங்கள் மீது இருக்கும் அதிருப்தியை ஒரு மூலதனமாக வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அதற்குச் சற்று வலுச் சேர்த்துள்ளது.

வைகோ, கொம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் போன்றோர் இருப்பதால் ‘மோடி எதிர்ப்பு அலை’யின் புண்ணியத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35இல் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, திடமாக நம்புகிறது. அதனால்தான் சட்டமன்றத் தொகுதியாக பிரசாரம் செல்லாமல், பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

இந்த ‘மோடி எதிர்ப்பு அலை’யைத் திசை திருப்ப, “தி.மு.க இந்துகளுக்கு விரோதி” என்ற பிரசாரத்தை பா.ஜ.க தரப்பில் முன்னெடுத்துச் செல்கிறது. கடந்த காலங்களில், இந்தப் பிரசாரம் வெற்றி பெற்றதில்லை.

ஆனால் இப்போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லா களத்தில் இதை வைத்து, மோடி எதிர்ப்பு அலையை திசை திருப்பினால், பா.ஜ.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மேலும் சில வெற்றிகள் கிடைக்கும் என்று திட்டமிடப்படுகிறது.

இதை உணர்ந்துதான், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், “தி.மு.க இந்துக்களுக்கு எதிரியல்ல; அது பொய்ப்பிரசாரம். என் மனைவியே கோவிலுக்குப் போகிறார். அதை நான் தடுத்ததில்லை” என்று பதிலடி கொடுத்தார் திராவிட இயக்கத் தலைவர் கி. வீரமணி. கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் பேசி விட்டார் என்று, பூதாகரமாகப் போராட்டங்கள், சமூக வளைதளங்கள் மூலமாகப் பரப்பிட பா.ஜ.கவும் அதன் துணை அமைப்புகளும் வீரியத்துடன் களத்தில் நிற்கிறார்கள்.

ஆண்டாள் சர்ச்சை போல், இந்தக் கிருஷ்ணர் சர்ச்சையை, ஊதிப் பெரிதாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதற்குப் பின்னனி இல்லாமல் இல்லை. வீரமணி எப்போதுமே அப்படிப் பேசுபவர்தான். ஏனென்றால், அவர் கட்சித் தேர்தல் பாதையில் பயணிக்கவில்லை. “கடவுள் இல்லை” என்ற பெரியாரின் வழியில், அக்கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.

வீரமணி எப்போதுமே தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் அடிக்கடி காட்சியளிக்க மாட்டார். தி.மு.க தலைவராக, கருணாநிதி இருக்கும் வரை அது நீடித்தது. ஆனால், இப்போது ஸ்டாலின் தலைவரான பிறகு, வீரமணி தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் காட்சியளிக்கிறார்.

குறிப்பாக ராகுல் காந்தி – ஸ்டாலின் கலந்து கொண்ட நாகர்கோவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட பங்கேற்றார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, வீரமணி பேசினால் தி.மு.க பேசியதுதான் என்பது போன்ற பிரசாரத்தை பா.ஜ.க.வில் உள்ளவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் அது, தமிழகத்தில் எடுபடுமா என்பது, இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இது தவிர, தி.மு.க நிர்வாகிகள், வேட்பாளர்கள் மத்தியில் “நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்” என்ற அதீத நம்பிக்கை தென்படுகிறது. அதுவே, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குத் தடைக்கல்லாக முடிந்து விடக்கூடாது என்பதே, தி.மு.கவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், மோடி எதிர்ப்பு அலை, தி.மு.க வெற்றிக்கு வித்திடும் ஒரு காரணியாக இருக்கப் போகிறது. இடைத் தேர்தல்கள் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றே அக்கட்சி நம்புகிறது. மீதியுள்ள ஐந்து தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்று, இப்போதுள்ள அ.தி.மு.க அரசாங்கத்தை வீழ்த்திவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. ஆகவே தி.மு.க கூட்டணி நாடாளுமன்றத்தில் 35 சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 என்ற இலக்கை நோக்கி இப்போதைக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஜூன் மூன்றாம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். அன்றைய தினத்தில் தமிழக தேர்தல் முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியா அல்லது ஸ்டாலினுக்கு தலைவலியா என்பது தெரிந்து விடும்.

டெல்லியில் ஆட்சி மாற்றம் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு திருகுவலியாக அமையும். தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் நரேந்திரமோடி ஆட்சி என்றால் ஸ்டாலினுக்கு எதிர்கால அரசியல் பெரும் தலைவலியாக மாறும்.

ஒருவேளை அ.தி.மு.கவுக்குப் பத்து நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாமல் வேறோர் ஆட்சி என்றாலும், இந்தப் பத்து எம்.பி.க்களின் தயவில் மீதியுள்ள இரு வருடங்களை, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் கடத்தி விடும். ஏனென்றால், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், 10 எம்.பி வைத்துள்ளவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு டெல்லியில் கிடைக்கும் என்பதே இந்திய அரசியலின் கடந்த கால வரலாறு.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் எதிர்கால அரசியல், இப்போதைக்கு வாக்களிக்கப் போகும் ஆறு கோடி தமிழக வாக்காளர்கள் கையில் இருக்கிறது.

கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம்

இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை.

இந்திய மக்களவைத் தேர்தல் – 2019

இந்தியாவின் 29 மாநிலங்களிலும் 7 யூனியன் பிரதேசத்திலுமுள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்குமான 17வது மக்களவைத் தேர்தல் (பாராளுமன்றத் தேர்தல்) எதிர்வரும் ஏப்ரல் 11ந் திகதி தொடங்கி, மே 19ந் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் எண்ணும் வேலைகள் மே 23ந் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

மாலி: இஸ்லாமிய பயங்கரவாதத்தின் புதிய களம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின் களங்கள், போராட்டக் களங்கள் மட்டுமல்ல, பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும், இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகி இருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. அதன்மூலம், தமக்கான ஆதரவுத்தளத்தை, இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது; ஓன்றில் ஒன்று தங்கி வளர்கின்றன.

The LTTE were not destroyed in may2009, they were destroyed in 1986.

(Sutharsan Saravanamuthu)
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் போல்தான் இந்த கந்தன் கருணையும், பெயரோ கந்தன் கருணை இல்லம் ஆனால் அங்கு நடந்தது ஒரு துளி கூட கருணை இல்லாத ஒட்டு மொத்த கொலை .

தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்

(அ.அகரன்)

தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன.

‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா?

(எம். காசிநாதன்)
‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது.

32வவது கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்

1987ம் ஆண்டு பங்குனி 30 இல் யாழ்ப்பாணத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறைப்படுகொலையே கந்தன்கருணை படுகொலை. 1983 யூலை மாதத்தில் இல் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர், பாதுகாப்பு தரப்புக்களின் ஒத்துழைப்புடன் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகினர். இலங்கை தமிழ் மக்களும் இன்னும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த நாளையே கறுப்பு யூலை என வருடம் தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதனை ஒத்த ஒரு படுகொலையை புலிகள் 1987 பங்குனி 30 இல் நிகழ்த்தினார்கள். அவர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த 60 இற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது கொல்லப்பட்டார்கள். இந்த படுகொலைகள் இடம்பெறுவதற்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக 1986 மார்கழி 13 இல் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது தாக்குதல் நடாத்தி கைது செய்து தடுத்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அநேகருடன், ரெலோ இயக்கப் போராளிகள் சிலரும் பொதுமக்களும் கூட இந்த படுகொலை சம்பவத்தில் பலியாகினர். பணத்திற்காக கடத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் இருவரும் இதில் பலியானது பலரும் அறிந்த சங்கதியாகும்.
நல்லூர் கோவிலுக்கு பின் புறமாக கோவில் வீதியில் கந்தன் கருணை என்ற பெயரை கொண்டிருந்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சம்பவம் நடப்பதற்கு முன்னரே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சமீபமாக ஒரு வீட்டிற்கு இடம் மாற்றப்பட்டிருந்தனர். அங்கேயே இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற போதும் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தன் கருணை இல்லத்தின் பெயரே இந்த படுகொலையுடன் ஒட்டிக்கொண்டது.
புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு என்கின்ற சதாசிவம் கிருஷ்ணகுமார் யாழ்ப்பாணம், 2ம் குறுக்குத் தெருவில் வழங்கமாக சென்றுவரும் தனது பெண் சிநேகிதி ஒருவரது வீட்டிற்கு சென்று திரும்பும் வேளையில் அவரது காருக்கு கைக்குண்டு வீசப்பட்டு படுகாயமடைந்தார். தம்மால் தடைசெய்யப்பட்ட மேற்படி இயக்கங்களை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த இந்த கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால், தமது தடுப்புக்காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் 18 பேர் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு கட்டுக்கதையை ஊடகங்களுக்குத் தெரிவித்து வெலிக்கடை படுகொலையை போன்றே மிருகத்தனமான இந்தப் படுகொலையை புலிகள் மூடி மறைத்தனர்.
இந்த கொடூரச் செயலை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ யாரும் முன்வரவில்லை. அத்தகைய வல்லமையுடைய மனித உரிமை செயற்பாட்டாளர்களையோ, ஊடகவியலாளர்களையோ அக்காலத்தில் காணமுடியவில்லை. புலிகளின் துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்கள் குரல் ஒடுங்கிப் போனது விளங்கிக் கொள்ளப்படக் கூடியதே. 
புலிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த “கந்தன் கருணை” சிறைப்படுகொலையின் போது உயிரிழந்தவர்களில் பலர் புலிகளிடம் சரணடைந்தவர்கள். அவர்களை சுட்டுக்கொன்ற புலிகள் முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடையச் சென்றார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது, யுத்தக் குற்றம் இழைத்திருக்கிறது என்று கூறி நீதி கேட்பவர்கள் சரணடைந்தவர்களை புலிகள் சுட்டுக்கொன்றதையிட்டு எந்தக்காலத்திலும் வாய் பேசவில்லை.
கந்தன் கருணை படுகொலை இடம்பெற்று 32 வருடங்கள் கடந்திருக்கிறது. இதன் பின்னரும் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் பல இடங்களில் தனித்தனியாகவும், கூட்டாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை தடுத்துவைக்கப்பட்ட யாரையும் எந்த இடத்திலும் புலிகள் விடுவிக்கவில்லை. ஸ்ரீலங்கா இராணுவமும் யாரையும் மீட்கவில்லை. ஆனால் விதம் விதமான சிறைக் கூண்டுகளுடன் புலிகளின் பல சிறைச்சாலைகளை இராணுவம் கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். எனவே, இதன் மறு பகுதியை ஊகிக்க முடியாதவர்கள் யாருமிருக்க முடியாது.
புலிகளால், ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் அதற்கெதிராகப் பேசப்பட்டிருந்தால் இன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்திற்காக காத்திருக்கும் நிலை தோன்றியிருக்காது. இந்தப் படிப்பினைகள் தமிழ் மக்களின் எதிர்காலம் செம்மையுறப் பயன்பட வேண்டும். தமது உயிர்களை அர்ப்பணித்து எமக்குக் கற்றுத்தந்தவர்களின் வரிசையில் “கந்தன் கருணை” சிறைப்படுகொலையில் மாண்டவர்களும் அடங்குவர். அவர்களை இந் நாளில் நினைவு கூர்வோம். இதில் மரணித்த அனைவருக்கும் எமது அஞ்சலிகள்.

ஜெகனின் விஸ்வரூபம்: ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆவாரா? தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண்

பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு: கோப்புப்படம்

(போத்திராஜ்)

ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் சந்திரபாபு நாயுடு காய்களை நகர்த்த, அரசியல் களத்தில் அவரின் முதல்வர் கனவுக்கு கடும் போட்டியாக ஒய் எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி வளர்ந்து கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் ஆந்திராவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக பவன் கல்யாண் எழுச்சி பெற்று வருகிறார். இந்த 3 பேருக்கும் இடையில்தான் ஆந்திராவில் நடக்கும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் போட்டி இருக்கும்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம்

(இலட்சுமணன்)

போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள். அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம்.