32வவது கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்

1987ம் ஆண்டு பங்குனி 30 இல் யாழ்ப்பாணத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறைப்படுகொலையே கந்தன்கருணை படுகொலை. 1983 யூலை மாதத்தில் இல் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர், பாதுகாப்பு தரப்புக்களின் ஒத்துழைப்புடன் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகினர். இலங்கை தமிழ் மக்களும் இன்னும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த நாளையே கறுப்பு யூலை என வருடம் தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதனை ஒத்த ஒரு படுகொலையை புலிகள் 1987 பங்குனி 30 இல் நிகழ்த்தினார்கள். அவர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த 60 இற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது கொல்லப்பட்டார்கள். இந்த படுகொலைகள் இடம்பெறுவதற்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக 1986 மார்கழி 13 இல் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது தாக்குதல் நடாத்தி கைது செய்து தடுத்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அநேகருடன், ரெலோ இயக்கப் போராளிகள் சிலரும் பொதுமக்களும் கூட இந்த படுகொலை சம்பவத்தில் பலியாகினர். பணத்திற்காக கடத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் இருவரும் இதில் பலியானது பலரும் அறிந்த சங்கதியாகும்.
நல்லூர் கோவிலுக்கு பின் புறமாக கோவில் வீதியில் கந்தன் கருணை என்ற பெயரை கொண்டிருந்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சம்பவம் நடப்பதற்கு முன்னரே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சமீபமாக ஒரு வீட்டிற்கு இடம் மாற்றப்பட்டிருந்தனர். அங்கேயே இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற போதும் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தன் கருணை இல்லத்தின் பெயரே இந்த படுகொலையுடன் ஒட்டிக்கொண்டது.
புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு என்கின்ற சதாசிவம் கிருஷ்ணகுமார் யாழ்ப்பாணம், 2ம் குறுக்குத் தெருவில் வழங்கமாக சென்றுவரும் தனது பெண் சிநேகிதி ஒருவரது வீட்டிற்கு சென்று திரும்பும் வேளையில் அவரது காருக்கு கைக்குண்டு வீசப்பட்டு படுகாயமடைந்தார். தம்மால் தடைசெய்யப்பட்ட மேற்படி இயக்கங்களை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த இந்த கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால், தமது தடுப்புக்காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் 18 பேர் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு கட்டுக்கதையை ஊடகங்களுக்குத் தெரிவித்து வெலிக்கடை படுகொலையை போன்றே மிருகத்தனமான இந்தப் படுகொலையை புலிகள் மூடி மறைத்தனர்.
இந்த கொடூரச் செயலை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ யாரும் முன்வரவில்லை. அத்தகைய வல்லமையுடைய மனித உரிமை செயற்பாட்டாளர்களையோ, ஊடகவியலாளர்களையோ அக்காலத்தில் காணமுடியவில்லை. புலிகளின் துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்கள் குரல் ஒடுங்கிப் போனது விளங்கிக் கொள்ளப்படக் கூடியதே. 
புலிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த “கந்தன் கருணை” சிறைப்படுகொலையின் போது உயிரிழந்தவர்களில் பலர் புலிகளிடம் சரணடைந்தவர்கள். அவர்களை சுட்டுக்கொன்ற புலிகள் முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடையச் சென்றார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது, யுத்தக் குற்றம் இழைத்திருக்கிறது என்று கூறி நீதி கேட்பவர்கள் சரணடைந்தவர்களை புலிகள் சுட்டுக்கொன்றதையிட்டு எந்தக்காலத்திலும் வாய் பேசவில்லை.
கந்தன் கருணை படுகொலை இடம்பெற்று 32 வருடங்கள் கடந்திருக்கிறது. இதன் பின்னரும் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் பல இடங்களில் தனித்தனியாகவும், கூட்டாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை தடுத்துவைக்கப்பட்ட யாரையும் எந்த இடத்திலும் புலிகள் விடுவிக்கவில்லை. ஸ்ரீலங்கா இராணுவமும் யாரையும் மீட்கவில்லை. ஆனால் விதம் விதமான சிறைக் கூண்டுகளுடன் புலிகளின் பல சிறைச்சாலைகளை இராணுவம் கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். எனவே, இதன் மறு பகுதியை ஊகிக்க முடியாதவர்கள் யாருமிருக்க முடியாது.
புலிகளால், ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் அதற்கெதிராகப் பேசப்பட்டிருந்தால் இன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்திற்காக காத்திருக்கும் நிலை தோன்றியிருக்காது. இந்தப் படிப்பினைகள் தமிழ் மக்களின் எதிர்காலம் செம்மையுறப் பயன்பட வேண்டும். தமது உயிர்களை அர்ப்பணித்து எமக்குக் கற்றுத்தந்தவர்களின் வரிசையில் “கந்தன் கருணை” சிறைப்படுகொலையில் மாண்டவர்களும் அடங்குவர். அவர்களை இந் நாளில் நினைவு கூர்வோம். இதில் மரணித்த அனைவருக்கும் எமது அஞ்சலிகள்.