நேற்று இரவு வரை
இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய
ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது
இன்றைக்கு அதன் பொருள்
அது மட்டுமல்ல
The Formula
Social Awakening
ஒருகட்டு கருப்பங்கழி
காய்வெட்டா வாங்கிவந்த
பூவன்பழம் நாலுசீப்பு
கூடவே
ரெண்டண்ணம்
இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து
கடன்சொல்லி வாங்கிவந்த
பூணம் பொடவை ஒண்ணும்
பூப்போட்ட கைலி ஒண்ணும்
வரிசைப்பணம் அம்பதும்
வடக உருண்டை பொட்டலமும்
என
அம்மா அனுப்பிவைப்பாள்
அக்காவுக்கு
பொங்கல் சீர்
உந்திப் பெடல்மிதித்து
சந்தோஷமாய்
சைக்கிளேறிப்போகும்
என்னை
தெருமுனையில் திரும்பும்வரை
கையசைத்து
பின்மறைவாள்
ஆறுமைலுக்கு
அப்பாலிருக்கும்
அக்காவீடு போவதற்குள்
தெப்பலாய் நனைந்திருப்பேன்
தேகமெல்லாம்
வியர்த்திருப்பேன்
தெருமுக்கு கடைநிறுத்தி
தின்பண்டம் கொஞ்சம்
மயிலாத்தாவிடம்
பேரம்பேசி
மல்லிப்பூ ரெண்டுமுழம்
என
என்பங்குக்கு கொஞ்சம்
சீர்வரிசைப்பைக்குள்ளே
சேர்த்தே
எடுத்துப்போவேன்
” வாடா” தம்பியென
வாஞ்சையோடு அழைக்கும்
அக்காவின் வீட்டுக்குள்
வெரால்மீனு கொழம்பும்
மசால்வடையும்
மணக்கும்
எப்படியும் வருவான்
தம்பியென
கெவுளிச்சத்தத்தை வைத்தே
கணித்துசெய்திருப்பாள்
அக்கா
பனைவிசிறி தந்துவிட்டு
மோரெடுத்துவர
உள்ளறைநோக்கி ஓடும்
அக்காவுக்கு
பிறந்தவீட்டு சீரைக் கண்டு
பெருமை
பிடிபடாது.
பாக்கு இடிக்கும்
மாமியாக்காரி
பார்க்கட்டும் என்பதற்காகவே
தெருத்திண்ணையிலேயே
பரத்திவைப்பாள்
பிறந்த வீட்டு
சீதனத்தை.
“இந்த
இத்துப்போன வாழைக்காயத்
தூக்கிட்டுத்தான்
இம்புட்டுத்தூரம்
வந்தானாக்கும்”
என்னும்
நக்கலுக்கு வெகுண்டு
நாசிவிடைக்க
கிளம்புகையில்
பதறிஓடிவந்து
பாதையை மறிப்பாள்
அக்கா.
வரிசைப்பணத்தைக்
கையில்திணித்துவிட்டு
“வர்றேன்க்கா” என்ற
ஒற்றைச்சொல்லுக்கு
ஓலமிட்டு
அழுவாள்
அழுகை அடக்கி
சிரிக்கமுயன்று
கண்ணீர்மறைத்து
கவலை விழுங்கும் அக்காவை
இன்றுநேற்றா
பார்க்கிறேன்
வரிசை குறித்த
வாக்குவாதங்கள்
வருடந்தோறும்
அரங்கேறியபடிதான் இருக்கும்
அக்காவின்
புகுந்தவீட்டில்
சைக்கிள்தள்ளி
விருட்டென ஏறிமிதிக்கையில்
“வெறும்பயக் குடும்பத்துக்கு
வீறாப்புக்கு கொறச்சலில்லே”
என்னும்
குத்தல் வாசகம் கேட்டு
உச்சிவெயில்கணக்காய்
உள்ளம்
கொதிக்கும்
வெரால்மீனுகொழம்பும்
மசால்வடைவாசமும்
தெருமுனைவரை
என்னை
துரத்திவந்து
பின்மறையும்
உச்சிவெயிலில்
ஆவேசங்கொப்பளிக்க
பசித்தவயிறோடு
திரும்பும் நான்
எப்படிக் கேட்கமுடியும்
அக்காவிடம்
அம்மா கேட்டனுப்பிய
சாயம்போன இரவிக்கை
இரண்டும்
கட்டிப் பழசான
சேலை ஒன்றும் ?
(Rajinikanthan Kanthan)
(சாகரன்)
மூச்சை நிறுத்தி…… புத்தகத்தை காக்க உயர்ந்த கரங்கள்…
(செய்தி: குறிஞ்சாங்கேணி/கிண்ணியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி பலர் மரணம்)
சின்னஞ் சிறு
கரங்களினிலே
சிறு புத்தகம்
காவி
பெருங்கனவு சமைக்க
பள்ளி சென்ற
என் பாலகனே
உன் கால்கள்
துள்ளி ஓடா
இடமுண்டோ
துரு துருவென்றிருந்த
உன் கண்கள்
உறங்காதோ
நீச்சலிலும் நீ
சூரன் அன்றோ
அந்த கொடிய
சுழி நீர்
உன்னை காவு கொண்டதோ
கரம் கொடுத்து
கல்வி கொடுக்கும்
ஆசிரியரும்
தத்தளிக்கும் உன்னைக்
காப்பாற்ற
ஆவலக் குரல் எழுபியதோ
வாப்பாவும் உம்மாவும்
கரையில் நின்று…
கடலில் பாய்ந்து
உனைக்காப்பாற்ற
முனைந்தனவோ
மூன்று நிமிட
மூச்சடக்கும் திறன்
மூளையை
சாவடையச் செய்தனவோ
என் பிள்ளையே
என் கால்களும் கரங்களும்
துடிக்கின்றது
அருகில் இருந்தால்
நான் அந்த ஆழியில்
பாய்ந்து
காத்து இருக்க மாட்டேனோ
என் காலம்
முடிவை நோக்கி
வந்து கொண்டிருக்கின்றது
அந்த முடிவை
உன் உயிர்காப்பதில்
விடுதல் ஒன்று இழப்பு இல்லையே
இது என் குரலின் குரலல்ல
பலரின் குரல்
கடல் வண்டி கட்டி
சுழி ஓடி
சுற்றிச்சுற்றி ஓடி
காப்பாற்றிய
அந்த பெருமக்கள்
பெருமானாரின் அவதாரங்களே
இனி ஒரு வள்ளம்
இது போல் வேண்டாம்
இருக்கும் பாதையை
செப்பனிட முன்பு
கடல் வழிப் பாதை
சரி செய்திருக்க வேண்டாமோ
அதிகாரம் கண்ணை மூடிவிட்டதோ
கிழக்கின் அடையாளம்
காத்தான் குடி என்பார்
நான் சொல்வேன்
அது கிண்ணியா என்று
பால்ய வயதில்
கடல் கடந்து
அங்கு வந்த போது
நான் பரிதவித்ததும்
நினைவில் வந்து போனதே
கூட வந்த
தாத்தாவும்
தன்னுயிர் பிரிய முன்பு
பல கரம் பற்றி
உன்னை காப்பாற்ற
நீச்சல்தான் அடித்திருப்பார்
கால்களிலும் கைகளிலும்
வலுக் குறைக இருந்திருந்தாலும்
அந்த வாப்பாவிடம்
இருந்திருக்குமல்லோ
மனவலிமை
தன் பேராண்டியை
காப்பாற்ற
இறுதி மூச்சு வரை
இரைஞ்சிருப்பாரல்லவோ
அந்த கோணேசர்
குமரனுக்கும்
இந்த அவலக் குரல்
கேட்கவில்லையோ
மயிலில் பறந்து வந்து
தன் சிறகில் இருத்து
உன்னை காத்தருளி
மத நல்லிணத்தை
காத்திடவில்லையே
அந்த வகையில்
அந்த குமரன் மீது
எனக்கு
தீராத கோவம்தான்
உன் சன்னதியிற்கு
அடுத்த முறை
வரும் போது
இதற்கு நியாயம் கேட்க
எனது காக்க தோழருடன்
இணைந்தே வருவேன்
புராணம் பாடி
என்னை சமாதானப்படுத்தலாம் என்று
நினைக்காதே
எமது கண்ணீருக்கு
கதை சொல்வதை விடுத்து
காரியத்தை ஆற்று
எம் பிள்ளைகள்
பாதுகாத்து கடல் கடந்து
கற்பதற்கு
அடுக்கி வைத்த புத்தகங்களாக
வெள்ளைத் துணியால்
உங்கள் வெள்ளை ஆடை
உடலம் மறைத்த
அந்த புகைப்படம்
ம்…… வேறு என்ன சொல்ல
இறுதி மூச்சிலும்
உன் புத்தகத்தை
காப்பாற்ற
நீ உயர்த்திய கரத்தை
நான் அறிவேன்
என் செல்வங்களே…….!
(பதிவுகள்.காம்)