விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கன்னியாகுமரி கடல் பாலம்

தமிழகத்தில் சாலை வசதிகளை பெருக்குவதில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி வரும் நிலையில், சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் 4,984 கோடி ரூபாய் மதிப்பில், 577 கி.மீ., நீள சாலைகளை, நான்குவழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை, 2,608 கோடி ரூபாய் செலவில், 215 கி.மீ., நீள சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதுடன், மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல், 2,465 கோடி ரூபாயில், 1,710 கி.மீ., சாலைகளை, இருவழிச் சாலைகளாக மாற்றும் பணி எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை, 1,860 கோடி ரூபாயில், 1,407 கி.மீ., சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில், 109 புறவழிச்சாலை பணிகள் எடுக்கப்பட்டு, 18 பணிகள் முடிக்கப்பட்டு உள்ள அதேசமயம், 21 பணிகள் நடந்து வருகின்றன. 27 பணிகள் நில எடுப்பு நிலையிலும், 38 பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலும் உள்ளன.

அதேசமயம், குமரி முனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம், 37 கோடி ரூபாயில் அமைக்கப்படுகின்ற நிலையில், இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது