முன்னாள் போராளிகள் ஐக்கியப்பட்டு தமிழ் மக்களுக்கான தலமையை தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக கொடுப்பார்களா….?

(சாகரன்)

டிரிஎன்ஏ(DTNA), தமிழ் மக்கள் அரங்கம் போன்ற முயற்சிகள் நடைபெற்றதையும் இங்கு கவனத்தில் எடுக்கவேண்டும். இவை பலமான ஐக்கிய முன்னணிகளாக முன்னேறாதற்குரிய காரணங்களையும் இங்கு நாம் இதயசுத்தியுடன் ஆராயவேண்டும் இவை பெரும்பாலும் முன்னாள் விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வளர்ந்து வரக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற தோழமை தின நிகழ்வுகளும் இதற்கான சில சுழிகளே. ஏன் 2009 மே இற்கு பின்னரான காலகட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலை அமைப்புக்களின் ஆளுமைக்குள் வருவதற்கானவாய்புக்கள் நிறையவே இருந்தன.

வெற்றிகள்… கதிரைகள்… பேச்சாளர் கௌரவம்… தங்களிடம் இருந்தபோது அல்லது வருங்காலத்தில் இருக்கவேண்டும் என்ற காய் நகர்த்தல்களிலேயே இதில் உள்ள விடுதலை அமைப்புக்களின் கட்சிகள் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ், என்பன இயங்கின. மாறாக முன்னாள் விடுதலை அமைப்புக்கள் தமக்குள் ஒரு பலமான ஐக்கிய முன்னணியை அமைக்க முயலவில்லை…… வெற்றி பெறவில்லை….. இன்னமும் தமிழ் மக்கள் பேரவை என்று புறப்பட்டாலும் இரு தோணிக்குள் கால் என்ற வகையிலேயே செயற்படுகின்றன. தமிழரசுக் கட்சியைவிட்டால் தமக்கு ஆசனம் இல்லை என்றே நம்புகின்றன.

இத்தனைக்கும் இந்த முன்னாள் விடுதலை அமைப்புக்களின் கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணி என்றிருந்து ஆலவிருட்சத்தை விமர்சித்து(1978 களில்) மக்களிடம் அம்பலம்படுத்தி தமது அரசியல் பாதையில் பயணித்தவர்கள். தற்போது ‘வீடு’ இற்குள் படுத்துக்கிடக்கின்றனர். குறைந்த பட்சம் 2009 இற்கு பின்ரான இந்த 8 வருடத்தில் தமது விடுதலை அமைப்பில் முன்னின்று செயற்பட்டவர்களையாவது தமது வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கலாம். மாறாக சிறீதரன், ஐங்கரநேசன், சிவமோகன் போன்றவர்களுக்கு பதிலாக ‘தேசிகன்’ போன்றவர்களை முன் நிறுத்தியருக்கலாம்.

தேசிகன் எல்லாவிதத்திலும் தகுதியானவர் என்பது என்கணிப்பு சர்வேஸ்வரனை கடைசித் தெரிவாக வைத்திருக்கவேண்டும் அல்லது முழுமையாக தவிர்க்கவேண்டும் இதற்கான வலுவான காரணங்கள் என்னிடம் உள்ளன. குமரேசை முன்னிறுத்துவதற்கு பதிலாக இன்னும் முகம் அறியாத பல முன்னாள் போராளிகளை நிறுத்தியிருக்கலாம். சிவசக்தி ஆனந்தன் இன்று வன்னியின் பண்ணையாராக மாறி இருந்தாலும் இவரின் தெரிவு இரா துரைரத்தினத்தின் தெரிவில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

புளொட்டைப் பொறுத்தவரையில் அமல் விளாந்திரனைத் தவிர்த்து மட்டக்களப்பில் முன்னாள் போராளியை முன்னிறுத்தியிருக்க வேண்டும். திருப்தியான தெரிவு பவான், லிங்கநாதன் போன்றவர்கள். சித்தார்த்தன் தந்தைவழி அரசியலை தொடர விரும்புபவர். இவரிடம் இருக்கும் நம்பிக்கையைவிட பவான் லிங்கநாதன் போன்றவர்களின் செயற்பாடுகள் நம்பிக்கை தருபவை. சித்தார்த்தன் ‘வீடு’ இற்குள் படுத்திருக்கவே விரும்புவார்.

டெலோவிடம் அதிக அரசிலை எதிர்பார்கவேண்டுமாயின் அடைக்கலநாதன் வழிவிட்டு நல்லவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும். இது இலகுவில்சாத்தியம் இல்லை. ஆனந்திக்கு வாய்பளிக்க முற்பட்ட சுரேஷ் இவரைவிட சிறந்த ஆயிரம் பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க கருத்தில் எடுத்திருக்கவேண்டும். டக்ளஸ் கமலேந்திரன் போன்றவர்களைவிட சீவரத்தினம் வேலும்மயிலும், இராஜ்குமார் சிவகுமார் போன்றவர்களை வெல்வதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்…. சுயநலன்கள் இருந்தாலும்…. டக்கள் ஞானசக்தி சிறீதரன் இற்கு தேர்தலில் வாய்பளித்தது வரவேற்றகத்தக்கது. திருமதி பற்றகுணத்தின் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவிருப்ப வெறுப்பும் இல்லை ஆனால் டக்ளஸ் தனது இயக்கத்தில் இருந்த போராளி ஒருவருக்கு (தவராசா போன்ற தகுதியுள்ளவருக்கு) மாநகரசபை வாய்ப்பை வழங்கியிருக்கு வேண்டும்.

இவற்றையெல்லாம் நான் மீள்வாசிப்பிற்கு உள்ளாக்குவதற்கு காரணம் இது நடைபெற்றிருந்தால் இன்று தமிழரசுக்கட்சியின் வீட்டிற்குள் வாலைச்சுருட்டிக்கொண்டு படுத்திருக்கவேண்டியநிலமை முன்னாள் போராளிகளுக்கு ஏற்பட்டிருக்காது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு வந்த போது எனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாய் இல்லை எங்களில் ஒருவனுக்கு கிடைக்க கூடாது என்ற ஈகோ… இதனால் எற்பட்ட விளைவுகளுக்கு மன்னிப்பே இல்லை. இன்று இவரின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குவதற்கும் ஒருகாலத்தில் பிரேமதாசாவின் வலைப் பிடித்துக்கொண்டு தொங்கியவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் அதிகம் வித்தியாசம் இல்லை(இதனை சற்று ஆழமாக பார்க்கவும்)… இன்னும் எழுதுவேன்.

(மே 18 2009 இற்கு பின்னராநிலமைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது விடுதலை அமைப்புகள் இடையே போராட்டகாலத்தில் ஏற்பட்ட ஐக்கிய முன்னணிபற்றி இங்கு நான் எழுத முற்படவில்லை)

(முன்னாள் விடுதலை இயக்க கட்சிகள் எல்லாம் தமிழரசுக்கட்சியை ஓரங்கட்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்……… – யோகா வளவன் தியா என்ற முகப் புத்தக பதிவிற்கு பதிலளிக்கு முகமாக எழுதப்பட்டது)