தெமட்டகொடயில் FBI சோதனை

தெமட்டகொட பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அமெரிக்காவின் எஃப்.பீ.ஐ விசாரணைப் பிரிவினர், இன்று (26) மாலை, குறித்த பகுதிக்குச் சென்றனர். குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரையில், அவ்விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குண்டுகளுடன், ‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டாவது தாக்குதல்?

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது குழு குண்டுத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவவதாக இந்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக “ ஹிந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நைஜீரியா பிரஜைகள் உட்பட 9 பேரிடம் விசாரணை

யாழ்ப்பாணத்தில், நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது நபர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ் நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்கள், இன்றைய தினம் மதியம் யாழ் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் நைஜீரியா நாட்டு பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

‘நியூசிலாந்துத் தாக்குதலுக்னே இலங்கையில் பதிலடி’

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட திடீர் வெடிகுண்டுத்தாக்குதல், கடந்த மாதம் நியூசிலாந்து, க்ரைஸ்சேர்ச் பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தண, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, 50 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்தது

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் வி​ஜேவர்தன தெரிவித்தார். இதன்படி உயிரழந்தவர்களில் வெளிநாட்டவர்கள் 38 பேர் உள்ளடங்குவ​தோடு, காயமடைந்தோர் 500 பேர் வரையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

40 பேர் இதுவரையில் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின் பேரில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஒரு தொகை தங்க ந​கைகளை, 300 இலட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 பாகிஸ்தானியர்கள் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எடிநியுஸ் வீதி பிரதேசம், பெரியமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்து 6 பாகிஸ்தானியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு- குடியகல்வு சட்டதிட்டங்களை மீறும் வகையில் இலங்கையில் தங்கியிருந்தவர்களே நேற்றைய தினம் (22) இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் 18, 23, 25, 24 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனரென்றும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு; 24 பேர் கைது- பின்னணி குறித்து புதிய தகவல்கள்

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.