இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியுண்டா!(கடிதத் தொடர் – 3)

அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே! எனது நண்பர்களாகவும் என் மீது நல்லபிப்பிராயமும் கொண்டவர்களாகவும் பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மட்டத்திலும் ஏனைய மட்டங்களிலும் உள்ளனர். அவர்களிற் சிலரோடு நான் பேசியதில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்கிறார்கள்? எவ்வாறு செயற்படுகிறார்கள்? அவர்கள் மக்களுக்காகச் செய்ய வேண்டியவைகளில் எதையாவது செய்கிறார்களா? அல்லது எதுவுமே செய்ய முடியாமல் இருக்கிறார்களா? அவ்வாறு செய்ய முடியாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன காரணம் கூறுகிறார்கள் போன்ற கேள்விகளுக்கான தகவல்களைத் திரட்டுவதில் அந்த நண்பர்கள் எனக்கு உதவியாக உள்ளனர்.

அவர்களிற் சிலர் எனது கடந்த இரண்டு கடிதங்களிலுமுள்ள சில வசனங்களை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு இந்தக் கடிதத் தொடர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டது என ஓர் அபிப்பிராயம் கொள்வதாக அறிகிறேன். அவர்களுக்கும் ஏனையோருக்கும் நான் கூறக்கூடியது என்னவெனில் எனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பான அரசியல் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதிலுள்ள எவர் தொடர்பாகவும் தனிப்பட்டரீதியில் கோபதாபம் எதுவும் கிடையாது. இக்கடிதத் தொடர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏளனம் செய்யும் நோக்கமும் கொண்டதல்ல. நான் எழுதும் இந்தத் தொடரின் மூலம் இப்போதிருக்கும் மாகாண சபைகளை மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயற்படுத்துவது தொடர்பான ஒரு காத்திரமான கருத்தாடலை முன்னிலைக்குக் கொண்டுவரவே முயல்கிறேன். அஃது ஒருபுறமிருக்க,


இந்தக் கடிதத் தொடரிலுள்ள கேள்விகளும் அந்தக் கேள்விகளுக்கான அடிப்படைகளும் யாருக்காக? என்பது பற்றிய தெளிவை இங்கு வரையறுப்பது அவசியம் என்று கருதுகிறேன். இந்தக் கடிதத் தொடரை வாசித்து புரிந்து கொள்ள முற்படும் ஒவ்வொருவரும் இந்தக் கடிதத் தொடர்pல் உள்ள கேள்விகள் யாரை நோக்கியது என்பது மிக அவசியமாகும். இலங்கையிலுள்ள மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பைப் பற்றியும், அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்கிர்வு பற்றியும், அதற்கும் இலங்கை மத்திய அரசுக்கும் இடையேயுள்ள நிதி மற்றும் நிர்வாக உறவுகள் பற்றியும் பல்வேறுபட்ட – மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே..


இலங்கையில் சிங்களவர்களில் கணிசமானவர்கள் அவரவர்களுக்கேயுரிய காரணங்களைக் காட்டி இலங்கைக்கு மாகாணசபை கூடாது தேவையில்லை பிரயோசனமற்றது – பாதகமானது எனும் அபிப்பிராயம் கொண்டுள்ளனர். அவ்வாறானவர்களின் அபிப்பிராயங்களை நான் இங்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனது கேள்விகள் அவர்களை நோக்கியதல்ல.


சுதந்திரத் தமிழீழமே தீர்வென்போர் ஒரே இலங்கைக்குள் சிங்களவர்களோடு எந்தவகையிலும், எந்த வகையான அதிகாரப் பகிர்வு முறையினாலும் தமிழர்கள் ஒரு தனித்துவமான, பாதுகாப்பான, சம அபிவிருத்தியை அடையக் கூடியதான ஒரு தேசிய இனமாக வாழ முடியாது என தமிழர்களில் ஒரு பகுதியினர் அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தனித்தமிழீழம் அமைவது மட்டுமே தமிழர்களுக்கான அரசியற் தீர்;வாக அமைய முடியும் என இன்னமும் நம்புகின்றனர் – வாதிடுகின்றனர். அவ்வாறானவர்களை நோக்கியும் நான் எந்தவொரு கேள்வியையும் இங்கு எழுப்பவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன்.


அவர்களது நிலைப்பாடு சரியா? பிழையா? அல்லது அவர்களது கருத்துக்களில் ஏதும் அர்த்தமிருக்கிறதா? இல்லையா? என்ற விவாதங்களுக்குள்ளும் நான் செல்ல விரும்பவில்லை. சுயநிர்ணய இணைப்பாட்சி அல்லது முழுமையான சமஷ்டியே தீர்வென்போர் அதேவேளை,; இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் உள்ள மாகாண சபைகளால் பயனில்லை: அதற்கான தேர்தல்களில் பங்குபற்றுவது கூட மக்களுக்கு உதவாதது. அவை எந்தவகையிலும் தமிழர்களின் அபிலாஷைகளுக்குப் பயனுடையவை அல்ல என்பதோடு அவை தமிழர்களின் அடிப்படையான அரசியல் அபிலாஷைகளுக்குப் பொருத்தமான அரசியற் தீர்வு பற்றிய கோரிக்கைகளைத் திசை திருப்புவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

ஆகவே இந்த மாகாண சபைகளை எந்தவகையிலும் ஏற்கக் கூடாது – அதற்கான தேர்தல்களில் எக்காரணம் கொண்டும் பங்குபற்றுவது தவறானது இந்த அமைப்பு தமிழர்களின் நலன்களுக்கு எதிரானது எனக் கூறுகின்ற இன்னொரு பகுதியினர் இங்கே கணிசமாக உள்ளனர். அவர்கள் தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமைகள் கொண்ட – குறைந்த பட்சம் உள்ளகமாகவாவது பூரண சுயநிர்ணய அதிகாரங்களையும் உரிமைகளையும் திட்டவட்டமாகக் கொண்ட முழுமையான இணைப்பாட்சி முறை அல்லது சமஷ்டி முறையைத் தவிர வேறெந்த ஆட்சி அமைப்பு முறையும் சரியான தீர்வாகாது – அது எந்தளவு அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் தமிழர்கள் அதனை ஏற்கக் கூடாது என்று கூறுகிறார்;கள். அப்படிப்பட்ட தர்க்கம் கொண்டவர்களை நோக்கியும் நான் இங்கே கேள்வி எழுப்பவில்லை. கருத்துச் சொல்லவில்லை. அவர்கள் எனது இந்தக் கடிதத் தொடரில் உள்ள கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்களோடு கலந்துரையாடப்பட வேண்டிய விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களும் அடிப்படைகளும் வேறொரு தளத்துக்கு உரியவையாகும்.


இந்திய மாநில ஆட்சி முறையே இங்குள்ள தமிழருக்கும் தீர்வென்போர் மேலும் மற்றொரு பகுதியினர், 13வது திருத்தத்தின் மூலம் அமைந்துள்ள மாகாண சபைகள் போதிய அளவு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவில்லை என்றும், ஆகவே இந்தியாவில் மாநில அரசுகளுக்கு எந்த அளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளனவோ அவ்வளவு அதிகாரங்கள் இலங்கையின் மாகாண சபைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்குக் குறைவான எதுவும் தமிழர்களுக்கான அரசியற் தீர்வாக அமைய முடியாது என்றவாறான நிலைப்பாடுகளை – கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். அத்தோடு அவர்கள் இலங்கையின் அரச கட்டமைப்பு ஓர் ஒற்றையாட்சி அமைப்பு என அரசியல் யாப்பில் வரையறுத்திருப்பதை சட்டபூர்வமாக நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கப்படாவிட்டால் இலங்கையில் எந்தவொரு அதிகாரப் பகிர்வு முறையும் செயற்பட மாட்டாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறானவர்களை நோக்கியும் இந்தக் கடிதத் தொடரில் நான் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


மாகாண சபையின் கதிரைகளில் இருப்போரும் அவர்களை அதிகாரத்தில் அமர்த்திய பிரமுகர்களும் அப்படியானால் இந்தக் கடிதத் தொடர் எவ்வகையினரை நோக்கியது என நீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். இங்கு எனது கேள்விகளெல்லாம்: ஒன்று – இப்போது இலங்கையிலுள்ள மாகாண சபைகளை ஏற்று அதில் மந்திரிகளாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பவர்களை நோக்கியவை! மற்றது, தமது ஆதரவான கட்சி – கூட்டமைப்பைப் சேர்ந்தவர்கள் இந்த மாகாண சபைகளைக் கைப்பற்ற வேண்டும் – ஆள வேண்டும் என்று கருதி செயற்பட்ட – வாக்களித்த மக்களை வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்ட சமூகப் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் ஊடகவாளர்கள், சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் போன்றேரை நோக்கியவை!


மேலும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட மாகாண சபைகளைத் தவிர இப்போதைக்கு வேறெதுவும் தமிழர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் குறுகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இப்போதைக்குக் கையிலிருக்கும் மாகாண சபைகளை பயனுள்ளதாக்க முடியவே முடியாதா? – இந்த மாகாண சபைகள் இயங்குவதில் இருக்கும் சிரமங்கள் எதனால் ஏற்படுகின்றன?. அந்தச் சிரமங்களை நீக்க என்னென்ன முயற்சிகளை எடுத்துப் பார்க்கலாம்? என ஆர்வம் கொண்டிருப்போரின் சிந்தனைக்கு சில விடயங்களைக் கொண்டு செலுத்தவுமே இங்கு முயற்சிக்கிறேன்.


தமிழர்களின் அரசியல் சமூக அபிலாஷைகளுக்குச் சார்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வதாயினும் அது எவ்வளவு சிரமமானது என்பதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கின்றீர்கள். அதற்காக இலகுவாகக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பேராசையால் இந்த தமிழ்ச் சமூகம் நழுவ விட்டு விட்டது. இது பஸ் அல்ல ஓடிப்போய் பிடிப்பதற்கு -.இழந்த வாய்ப்புக்கள் கடந்தகால வரலாறாகிவிட்டன.

அது எப்படியாவது சுழன்று மீண்டும் எம்மை நோக்கி வராதா என்று இருக்கும் காலத்தை ஓட்ட முடியாது. அதிலும் இங்கேயுள்ள கடைசித் தமிழனும் வானமேறியோ கடலோடியோ ஏதாவதொரு பொருளாதார வல்லமை படைத்த நாட்டைச்; சென்றடையும் வரை ஓய மாட்டான் என்ற போக்கைக் கொண்டிருக்கும் நிலையில் அது இன்னமும் சிரமமாகிக் கொண்டே போகும். இல்லாத இடம் தேடி கைலாசம் போவது சந்நியாசம் இருக்கும் இடத்தை உழுது உடமையாக்குவதே சமூகம் இப்போதிருக்கும் மாகாண சபைகள் தமிழர்களின் இன்றைய கால கட்ட நிலைமையில் குறைந்த பட்சமாயினும் அவற்றின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்;தின் அபிவிருத்திக்கும் அப்பிரதேசத்தில் இருக்கும் மக்களின் வாழ்வில் முன்னேற்றங்களை ஆக்குவதற்கும் உரிய அதிகாரங்கள் கொண்ட நிறுவன அமைப்பாக இருக்க முடியாத ஒரு அமைப்பா? அல்லது அவை எந்தவகையிலும் பயனற்றவையாக இருக்கும் வகையிற்தான் அதன் கட்டமைப்பும் சட்டங்களும் ஆக்கப்பட்டிருக்கின்றனவா? அல்லது, சட்டப்படி அவை குறைந்த பட்ச அதிகாரங்கள் கொண்டவையாயினும் இவை முன்னர் எக்காலத்திலும் இருந்த மாவட்ட மற்றும் மாகாண அமைப்புக்கள் எதனையும் விட ஒரு முன்னேற்றகரமான பயன்பாட்டைத் தரக் கூடியனவாக இருந்தும் இலங்கையின் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தினாற்தான் அது பயனற்றதொரு நிறுவனமாக ஆக்கப்பட்டிருக்கிறதா? அல்லது, இந்த மாகாண சபைகளுக்கு மக்களால் பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கட்சிக்காரர்கள் அல்லது கூட்டமைப்புக்காரர்கள் தங்களை நம்பிக்கைகளோடு தெரிவு செய்த மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்வதற்குத் தேவையான திறமை ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றனரா? அல்லது அறவே விருப்பம் அற்றவர்களாக இருக்கின்றனரா? அல்லது, மாகாண சபைகள் பயனுடையவோ அல்லவோ, இப்போதிருக்கும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கமும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு எப்பாடுபட்டாயினும் இந்த மாகாண சபைகளை எந்தவகையிலும் பயனற்றவையே என்று உலகத்துக்கு நிரூபிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பதால்த்தான் இந்த பரிதாப நிலையா? ஏனைய மாகாண சபைகளைப் பற்றி இங்கே பேசவில்லை.

வடக்கு மாகாண சபையை மையமாக வைத்தே இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பான கேள்விகளை எழுப்புவது பொருத்தமானது எனக் கருதுகிறேன். ஏனைய மாகாண சபைகளின் ஆளுங்கட்சிக்காரர்கள் மாகாண சபையிலிருந்தாலென்ன அல்லது தமது கட்சிக்காரியாலயத்தில் இருந்தாலென்ன அவர்கள் தாம் செய்ய வேண்டியவற்றை – தமக்கு வேண்டியவற்றை இருந்த இடத்தில் இருந்தே அவர்களாற் செய்;ய முடியும் – பெற முடியும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தமது மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என நாம் கருதிக்கொள்ள இங்கு இடமுண்டு.

வெவ்வேறுபட்ட அனுபவங்களை கற்க கசடற கற்பவை கற்றபின் ஆற்றுக அதற்குத் தக உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வாறான மாகாண அரசாங்கங்கள் வெவ்வேறு பெயர்களில் சிறப்பாகவே இயங்கி வருகின்றன. இலங்கையின் சட்டங்களும் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளும் பிரித்தானிய பாரம்பரியத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாகி அமைந்தவை – வளர்ந்தவைதான்.

1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் இலங்கையின் நாடாளுமன்றம், சட்டவாக்க முறைகள், நிறைவேற்று நிர்வாக அமைப்புகள், நீதித்துறை போன்ற எல்லாம் பிரித்தானியப் பாரம்பரியத்திலிருந்து விலகாமலேயே இன்னமும் உள்ளன. பிரதமரைத் தலைமையாகக் கொண்ட அமைச்சரவைக்குப் பதிலாக நாடாளுமன்றத்துக்கு வெளியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே அமைச்சரவைக்குத் தலைவராக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர அடிப்படையில் இங்கு வேறு எந்த வேறுபாடும் ஏற்பட்டு விடவில்லை.

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகளும் பிரித்தானியப் பாராளுமன்ற பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வழியாகவே இந்தியாவின் அரச கட்டமைப்பும் உள்ளது. மத்திய அரச அமைப்பின் ஒரு பிராந்திய வடிவமாகவே இந்தியாவிலுள்ள மாநில அரச அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. அதே வகையான மாகாண அரச வடிவ அமைப்புகளையே அவுஸ்த்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளும் கொண்டிருக்கின்றன.

இந்த நாடுகளில் லட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் ஆட்சியமைப்பு முறைகளோடு இலங்கையின் மாகாண சபைகளையும் ஒப்பிட்டுப்பார்த்து ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் காண்பதோடு, இந்தியா, கனடா மற்றும் அவுஸ்த்;திரேலியா ஆகிய நாடுகளில் மாகாண ஆட்சிமுறை வெற்றிகரமாக செயற்படுவதற்கும் இலங்கையில் அது முடங்கிப்போய் ஒரு விவாதப் பொருளாக ஆகியிருப்பதற்குமான காரணங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.


நான் இங்கே நாடுகளுக்கிடையில் அதிகாரப் பகிர்வில் உள்ள அளவுகளைப்பற்றிக் குறிப்பிடவில்லை. மத்திய மாநில அரச அமைப்புகளுக்கிடையிலான உறவுமுறைகளை – தொடர்புகளைப் பற்றி புரிந்து கொள்வதையே குறிப்பிடுகிறேன். இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்கு இந்தியத் தலைவர்கள் இடையாட்களாக செயற்பட்டமை அனைவரும் அறிந்ததே. 13வது திருத்த அரசியல் யாப்பு இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் தன்மையை ஒத்தே உருவாக்கப்பட்டது. எனவே இந்தியாவின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் இலங்கையின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது இங்கு பிரதானமாகும். இந்தியாவில் வெற்றிகரமாக உள்ள ஓர் அரசியல் அதிகாரக் கட்டமைப்பு இலங்கையில் மட்டும் தோல்வியடைந்து போவதற்கு செயற்பட முடியாதபடி குழப்பங்களுக்கு உள்ளாகுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன என அடையாளம் காணப்பட வேண்டும்.

இந்தியாவில் பல நூற்றுக்கணக்கான முரண்பாடுகள் மத்திய ஆட்சிக்கும் மாநில ஆட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்றன, அதேபோல, மத்திய மாநில அரசுகளுக்கிடையான சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான பல நூற்றுக்கணக்கான வழக்குகளும் நீதிமன்றங்களில் எடுக்கப்பட்டன. அவைகள் அனைத்தும் இந்திய உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அவ்வாறான அனுபவங்களைக் கொண்டு இலங்கையின் மாகாண சபைகளை வலுவுள்ளதாக பயனுள்ளதாக ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுவும் அவசியமானதே.


அடுத்த கடிதத்தில் தொடருவோம்


இப்படிக்கு உங்கள் அன்பிற்குரிய தோழமைக்குரிய
வரதராஜபெருமாள்