திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம்

எதிர்பார்ப்புகள், விளைவுகள்

அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிடக் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது; ஏனெனில், அந்தக் கட்சி தொடர்ந்து வந்த இரண்டு தலைவர்களின் (எம்ஜிஆர், ஜெயலலிதா) ஆளுமைக் கவர்ச்சியையே சார்ந்திருந்தது, கருணாநிதி தனக்குப் பிறகு ஒரு தொடர்ச்சியை விட்டுச்சென்றதுபோல் ஜெயலலிதா தனக்குப் பிறகு கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கவில்லை. மேலும், கட்சியின் கட்டமைப்பும் பலவீனமாக இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைவர்கள் பெரிதும் ஒன்றிய அரசையே சார்ந்திருந்தார்கள். மாநிலத்தின் மிதமான மக்கள்நல பாணியை அவர்களால் போதிய அளவுக்குத் தக்கவைக்க முடியவில்லை. ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரத்தனத்தை, இந்துப் பெரும்பான்மைவாதத்தை, முழுமையான நவதாராளமயக் கொள்கைகளை அவர்கள் ஆதரித்தார்கள் அல்லது கிட்டத்தட்ட எதிர்க்கவே இல்லை. குடியுரிமை (திருத்தச்) சட்டம், ஜம்மு காஷ்மீரை ஒன்றியப் பிரதேசங்களாக ஆக்கியது, பள்ளிக்கல்வியின் வெவ்வேறு தேர்வுகளை மையப்படுத்தியது, விவசாய மானியங்களைக் குறைத்தது, வேளாண்மையைப் பெருநிறுவனமயத்தை நோக்கி முடுக்கிவிட்டது போன்றவைதான் இந்தக் கொள்கைகள்.

அதிமுகவை திமுக வெற்றிகொண்டது என்றாலும் அதை மிகப் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. 3.1% வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வென்றிருக்கிறது. திமுகவுக்கு 35.1% வாக்குகளும் அதிமுகவுக்கு 32% வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. 2016 தேர்தலைவிட திமுக தற்போது 3.2% வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறது, அதிமுக 9.1% வாக்குகளை இழந்திருக்கிறது. பிரதானக் கட்சிகளுக்கு இடையிலான 12.3% வாக்குகள் நகர்வு என்பது முக்கியமானது. இரண்டு பெரிய கூட்டணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 5.7%. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 45.4% வாக்குகளைப் பெற்றது; அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39.7% வாக்குகளைப் பெற்றது. இரண்டையும் கூட்டினால் கிடைக்கும் 85.1% வாக்கு வீதமானது தேர்தல்களில் திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம் தொடர்வதைக் காட்டுகிறது. வட தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் திமுக ஆதிக்கம் நிலவிய அதே சமயத்தில் மேற்குப் பகுதியில் அதிமுக வலுவாகக் காணப்பட்டது; ஆனால், தெற்கில் அதன் ஆதிக்கம் குறைந்துவிட்டது.

இதற்கு மாறாக, உறுதியற்ற தலைமை மாற்றத்தால் பலனடையலாம் என்று நம்பிய அரசியல் கட்சிகள் பெரிதும் வளரவில்லை. பழைய தேசியக் கட்சிகள் தேங்கிப்போயின. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வீதம் 6.5%-லிருந்து 4.3%-ஆகக் குறைந்தது, முன்பைவிடக் குறைந்த தொகுதிகளில் (2016 தேர்தலில் 41 இடங்கள், 2021-ல் 25) போட்டியிட்டது இதற்குக் காரணம். 1989-ல் 20.2% வாக்குகள் பெற்றதிலிருந்து சீராகக் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. பாஜக 2.9%-லிருந்து 2.6%-ஆகக் குறைந்திருக்கிறது; ஏனெனில் 2016-ல் எல்லாத் தொகுதிகளிலும் நின்ற அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் 20 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. இதுவே 2001 தேர்தலில் அதிகபட்சமாக 3.2% வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. மக்கள்தொகையில் எல்லாப் பெரிய பிரிவினர்களையும் உள்ளடக்கும் கட்சிகள் தற்போது 13.0% வாக்குகள் பெற்றிருக்கின்றன.

2016-ல் 4.4% வாக்குகள் மட்டுமே பெற்றன; 2006-ல் 14.4% வாக்குகள் பெற்றதுதான் அதிகம். குறிப்பிட்ட சாதிகள், மதக் குழுக்கள் அல்லது பிராந்தியங்கள் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகள் 2011-ல் 8.1% வாக்குகளும், தற்போது 6.7% வாக்குகளும் பெற்றிருக்கின்றன.

எல்லாத் தரப்புகளுக்குமான புதிய கட்சிகளில் பெரியது நாம் தமிழர் கட்சிதான். அதற்கு 6.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதற்கு அடுத்ததாக அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தலா 2.3% வாக்குகள் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்சிகள் 0.4% வாக்குகள் பெற்ற தேமுதிகவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன. தேமுதிக 2016-ல் பெற்ற 2.4% வாக்குகளோடும், 2006-ல் பெற்ற 8.4% வாக்குகளுடனும் இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். பாமகவை உள்ளடக்கிய சாதி கட்சிகள் ஒட்டுமொத்தமாகத் தற்போதைய தேர்தலில் 6.0% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. இந்தக் கட்சிகள் 2016-ல் 7.7% வாக்குகளும், அதிகபட்சமாக 2011-ல் 8.4% வாக்குகளும் பெற்றிருக்கின்றன. பாமக தற்போது 3.8% வாக்குகளே பெற்றிருக்கிறது. அந்தக் கட்சி அதிகபட்சமாக 1991-ல் 5.9% பெற்றது. மதரீதியிலான கட்சிகள் ஒட்டுமொத்தமாக 3.6% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன; இவற்றுள் பாஜக 2.6% வாக்குகளுடன் பெரிய கட்சியாக உள்ளது. இவ்வாறாக, 1990-களிலிருந்து திராவிடக் கட்சிகளின் சமூகப் பங்கேற்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவந்தாலும் அந்தக் கட்சிகள்தான் தேர்தல்ரீதியாக ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தத் தேர்தல் போக்குகளைத் தீர்மானித்தது எது? இது எதற்குக் கட்டியம் கூறுகிறது? இந்தியாவின் வேறு இடங்களுடன் அதை எப்படி ஒப்பிட முடியும்? இந்திய அரசியல் களத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தப் போக்குகள் எதை உணர்த்துகின்றன?

நீடித்த வெற்றிக்கான அடித்தளம்

இடைநிலை சாதிகளையும் தாழ்த்தப்பட்ட சாதிகளையும் பிற கட்சிகளும் அரசாங்கங்களும் குறைவாகவே கணக்கில் எடுத்துக்கொண்டன.

1950-களில் வளர ஆரம்பித்த திராவிடக் கட்சிகள் அந்தப் பிரிவினர்களை அணிதிரட்டுவதன் மூலம் வளர்ந்தன. சாதி, மொழி, வட்டார வழக்கு, தொழில் போன்றவற்றின் அடிப்படையில் வெகுமக்களையும் மேல்தட்டினரையும் பிரித்துக் காட்டும் வெகுஜன சொல்லாடல்களைக் கொண்டு திராவிடக் கட்சியினர் இதைச் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களின் ஆதிக்கம் நீடித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. கட்சியின் கட்டமைப்புகளை வலுவாக ஆக்கியதும், ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் வகையில் உட்குழுக்களை உருவக்கியதும்தான்; இவையெல்லாம் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக் கொள்கைகளின் மூலம் தக்கவைக்கப்பட்டன.

1990-களில் ஒன்றிய அரசின் நவதாராளமயப் போக்கை சுவீகரித்துக்கொண்ட பிறகும் அந்தக் கொள்கைகளைத் திராவிடக் கட்சிகள் தக்கவைத்துக்கொண்டன. இவற்றுள் மிக முக்கியமானவை உயர் கல்வியிலும் அரசு வேலைகளிலும் இடஒதுக்கீடு (69%), ஏழைகளிடையே ஊட்டச்சத்து, உடல்நலம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்திய மதிய உணவுத் திட்டம், கல்வியிலும் ஆரம்பச் சுகாதாரத்திலும் செய்யப்பட்ட அதிக அளவிலான முதலீடுகள், 2016 வரை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்றான கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை.

திராவிடக் கட்சிகளின் பிற கொள்கைகளும் திட்டங்களும் சமுக அடுக்கில் மேல்நோக்கிய நகர்வுக்குத் தேவையானவற்றை வழங்கின. நிலவுடைமையும் குத்தகைச் சீர்திருத்தங்களும் பெரிதும் இடைநிலைச் சாதிகளைச் சார்ந்தவர்களுக்கே உதவின; மிகவும் சிறிய அளவிலேயே தலித்களுக்கு அவை உதவின. இந்தப் பிரிவினர், பாசனமும் மண்வளமும் குறைந்து போனதால் நிலவுடைமையாளர்கள் விற்ற நிலங்களை வாங்கினார்கள். மானிய விலையில் வழங்கப்பட்ட இடுபொருட்கள், கடன்கள், கடன் தள்ளுபடி போன்ற வற்றால் பலனடைந்தார்கள். இதுபோன்ற கொள்கைகள் சமூக அடுக்கின் கீழ் நடுத்தரப் பிரிவினரும் இடைப்பட்ட நிலையினரும் மேலே வருவதற்கு உதவின. இவை யெல்லாம் சேர்ந்து திராவிடக் கட்சிகள் தங்கள் தேர்தல் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவின.

  • நரேந்திர சுப்பிரமணியன், அரசறிவியல் பேராசிரியர், மேக்கில் பல்கலைக்கழகம்.
    © ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை