இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

அது ஒருபுறமிருக்க, மாகாண ஆட்சி அமைப்பானது அரசியல் யாப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும கொண்டதாக ஆளுநர் ஆட்சியின் போதும் செயற்பட முடியும் – செயற்பட வேண்டும். இங்கே அது பற்றி சில விடயங்களை அவதானிக்கலாம்.  

ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவராயிருப்பினும் அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது எந்தக் கட்சியினதும் பிரதிநிதியாக, எந்தக் கட்சிக்கும் சார்பானவராக, எந்தக் கட்சியினது நலன்களையும் பிரதிபலிப்பவராக அல்லது எந்தக் கட்சியினதும் செல்வாக்குக்கு வெளிப்படையாக உட்பட்டவராக இருக்க முடியாது – இருக்கக் கூடாது. மாகாண ஆட்சியின் ஆளுநராக இருக்கும் ஒருவர் அந்தப் பதவியைப் பெறுவதற்கு முதலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தார் என்பதோ அரசாங்கத்தின் எந்த உத்தியோக பதவியில் இருந்தார் என்பதோ முக்கியமில்லை. ஆளுநராக அமர்ந்திருக்கும் காலகட்டத்தில் அவர் எந்தக் கட்சியையும் சாராதவரராக இருக்க வேண்டும்.– எந்தக் கட்சிக்கும் சார்பானவராக இருக்க கூடாது.

1978ம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் உருவாக்கிய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை என்பது அமெரிக்க அரசியல் முறையையும் பிரெஞ்சு அரசியல் முறையையும் கலந்து ஆக்கப்பட்ட கலவையே என அரசியல் விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இலங்கையின் அரசியற் கட்டமைப்பில் உள்ள மாகாண ஆட்சி முறை அவ்வாறானதல்ல இந்திய அரசியலமைப்பு முறைப்படி – இங்கிலாந்து பாராளுமன்ற ஆட்சிமுறையின் அடிப்படையில் செயற்பட வகுக்கப்பட்டதாகும். இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் இருக்கும்போது ஆளுநர் என்பவர் மாகாண ஆட்சியின் பெயரளவிலான தலைவரே.  

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டத்தை தவறான முறையிலும் தீய நோக்கங்களோடும் பிரயோகித்து மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் அரசாங்கத்தைக் கொண்டதான மாகாண ஆட்சிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைக்கு வர முடியாமல் ஆக்கப்பட்டிருப்பதோடு, மத்திய அரசாங்கத்தினர் தங்களது அரசாங்கத்தின் ஆட்சியின் கீழானதாக மாகாண ஆட்சிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மாகாணங்களின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இல்லாத போது மாகாண ஆட்சிக்கான அரசாங்கமாக இருக்கும் ஆளுநர் ஜனாதிபதியின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்று மாகாண ஆட்சிக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இங்கு மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியை கபளீகரம் செய்து விட்டதாகவே உள்ளது. மாகாண ஆட்சியின் அமைச்சு நிர்வாக கட்டமைப்புகளை மத்திய அமைச்சர்கள் தமது அமைச்சுகளின் நிர்வாக கட்டமைப்புகளின் பகுதிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆளுநர் என்பவர் மாவட்டச் செயலாளர்களுக்கு சற்று மேலான தரம் கொண்ட ஓர் அரச அதிகாரியாகவே ஆக்கப்பட்டிருக்கிறார். 

இது மாகாண ஆட்சி முறையையே சிறுமைப் படுத்திவிடுகிற – அர்த்தமிழக்கச் செய்கிற வேலையே. இதனையே ராஜபக்சாக்களும், விக்கிரமசிங்காக்களும் செய்தார்கள் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரும் அதனையே செய்கிறார்கள். மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலும், பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் அமைச்சர்களே முதற் பிரஜைகளாக – தலைவர்களாக அமர்கிறார்கள். எந்தவொரு மாவட்டத்தினதும் ஒட்டுமொத்த அபிவிருத்தி தொடர்பாக உறுதி செய்யவோ, உத்தரவாதம் வழங்கவோ அல்லது ஆணையிடவோ எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் சட்டரீதியான அதிகாரம் கிடையாது. இப்போதுள்ள விதமான மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் எந்தவகையிலும் உருப்படியான செயற்பாடுகளுக்கான அரச கட்டமைப்பாக அமைய மாட்டாது என்பதோடு,  இவ்வகையான கூட்டங்கள் ஆளுநர்களின் தராதரங்களை குறைக்கின்றன -அவர்களின் பெறுமதிகளையும் அர்த்தமற்றதாக்குகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களின் கீழ்:-

● சுமார் 80000 அரச உத்தியேகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சேவை செய்கிறார்கள்,

● இதை விட 1800 க்கு மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் என கல்வி நிலையங்கள் உள்ளன,

● போதனா வைத்திய சாலைகள் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கைகள் கொண்ட விசேட வைத்திய சாலைகள் என்பவை தவிர ஏனைய வகைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அத்தனை வைத்திய சாலைகளினதும் ஆட்சி மாகாண ஆட்சியிடமே  உள்ளன.

● அரசியல் யாப்பின்படி மாகாணத்திலுள்ள பொலிஸ் அமைப்பானது ஆளுநருக்கு கட்டுப்பட்டது – மாகாண பொலிஸ் மாகாண ஆளுநருக்கு பொறுப்புக் கூற வேண்டியது:

● தனியார் உடைமைகளாக உள்ள காணிகள் அனைத்தினதும் மீதான அனைத்து அதிகாரங்களும் மாகாண ஆட்சிக்கே உண்டு:

● மது விற்பனைகளை, போக்குவரத்துக்களை நெறிப்படுத்தவும் கட்டுப்படுத்தவுமான அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு.

● அத்தனை கூட்டுறவு அமைப்புகளையும்

அத்தனை உள்ளுராட்சி சபைகளையும் நெறிப்படுத்தவும் வழிப்படுத்தவும் அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு.

இப்படியாக மாகாணங்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ள அதிகாரங்களை அடுக்கினால் நீண்டு போகும். ஆனால் இவ்வளவு விடயங்கள் இப்போதும் நடைமுறையில் மாகாண ஆட்சியின் கீழ் – ஆளுநரின் கீழ் உள்ளனவா? தமக்குரிய அதிகாரங்களை பிரயோகித்து தமது பொறுப்புகளையும் கடமைகளையும் ஆளுநர்கள் நிறைவேற்றுகிறார்களா?  நிறைவேற்றுவதை ஜனாதிபதி உறுதிபபடுத்துகிறாரா?

ஆளுநருக்கு என்ன தடை? அமைச்சர்கள் தடையா? அதிகாரங்கள் இல்லாமை தடையா? இலங்கையின் அரசமைப்பில் ஜனாதிபதிதானே அனைத்துமாக இருக்கிறார். அப்படியிருக்கையில் அவரது விருப்பத்துக்கும் அரவணைப்புக்கும் உரிய ஆளுநருக்கு ஏது பிரச்சினைகள்? அபிவிருத்திக் கூட்டங்கள் நடக்கின்றன! ஆலோசனைக் கூட்டங்கள் நாழும் பொழுதும் நடக்கின்றன! அரசாங்கத்தால் அடிக்கல் நாட்டல்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. ஆனால் உருப்படியாக நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகளின் பட்டியலை இன்னமும் காணமுடியவில்லை. அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்துக்கும் ஒரே கால அளவு தேவைப்படுபவதில்லை. ஒரே வாரத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன ஒரே மாதத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன! ஒரே வருடத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன.

மாகாண ஆட்சிகளை ஜனாதிபதியே நேரடியாக வழிகாட்டி ஆளுநரைக் கொண்டு செயற்படுத்துகின்ற போதிலும் மாகாண ஆட்சி முறை மக்களுக்கு பயனற்றவை – அவற்றால் காத்திரமாக செயற்பட முடியாது – அவை வெள்ளை யானைகள் என முன்னிருந்தவர்களைப் போல இப்போதுள்ள ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நிரூபிக்க முயலுகிறார்களா என்ற கேள்வி இங்கு நியாயமாகவே எழுகிறது. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் இலக்காக இருந்தால் இது இலங்கையில் ஜனநாயக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்கு தடையாகவே அமையும் – அதிகாரங்கள் அனைத்தும் குவிந்த மத்திய ஆட்சியின் எதேச்சாதிகாதிகாரம் தொடரும் இலக்கையே வெளிப்படுத்தும். இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளில் முன்னேற்றகரமான வளர்ச்சிக்குத் தடையாகும்.

இலங்கைவாழ் சிறுபான்மையான தேசிய இனங்களின் அடிப்படையான அரசியல் பொருளாதார அபிலாஸைகள் தொடர்பான குறைந்த பட்ச அரசியல் ஏற்பாடாக இந்த மாகாண ஆட்சி முறையே சாத்தியமாக உள்ளது. சிங்கள பேரினவாத சகதியில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி வெளியே வந்துவிட்டதா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கு இந்த மாகாண ஆட்சி முறையில் ஏற்படக்கூடிய  முன்னேற்றங்களே சாட்சியாகும்.

ஏ பல்லினங்கள் வாழும் இலங்கை ஒரு நாடாக – அழகான நாடாக – வளமான நாடாக வளர்ச்சி அடைவதை உண்மையாக்குவதற்கு மாகாண ஆட்சி அமைப்பின் பயன்பாட்டையும், அதன் காத்திரமான செயற் திறன்களையும் உறுதிப்படுத்துவதும் மேம்படுத்துவதும், இலங்கையின் மத்திய ஆட்சி அமைப்பில் அமர்ந்திருக்கும் தலைவர்களின் குறிப்பாக ஜனாதிபதியின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

Leave a Reply