அக்கரகந்த பகுதியில் கடந்த ஐந்து தசாப்தங்களாக (50 ஆண்டுகள்) இயங்கி வரும் மதுபானசாலையினால் தமது வாழ்வு சீரழிந்து போவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மகளிர் தினமான இன்று (08) காலை ஒன்று திரண்ட 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கைகளில் பதாகைகளை ஏந்தி தமது பலத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. “இந்த ஒரு மதுபானசாலையினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரழிகின்றனர்; குடும்பங்களில் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது” எனப் போராட்டக்காரர்கள் கண்ணீர் மல்கக் தெரிவித்தனர்.
குறித்த மதுபானசாலை அவ்வப்போது நவீனமயப்படுத்தப்பட்டு, இளைஞர்களையும் பெண்களையும் கவரும் வகையில் மாற்றியமைக்கப்படுவதால், பலரும் இதற்கு அடிமையாகி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் இந்த மதுபானசாலை அமைந்திருப்பது எவ்விதத்தில் நியாயம் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். “எமது எதிர்காலச் சந்ததியைக் காப்பாற்ற இந்த மதுபானசாலையை உடனடியாக இங்கிருந்து அகற்றுங்கள்” என கலால் திணைக்களத்திற்கும், பிரதேச செயலகத்திற்கும் அவர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.