எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைவு!

சமூக, அரசியல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளீவான, உறுதியான கருத்துகளைக் கொண்டிருந்தார்.அண்மைக்காலமாக அவராற்றிய இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது.

தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல் செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர் எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள்.

ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப்படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.அவரது முகநூற் குறிப்புகளும் முக்கியமானவை. அவற்றினூடு அவரது சினிமா, இலக்கியம், அரசியல் பற்றிய எண்ண ஊட்டங்களை அறிய முடியும். அவை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவுகள்.

அவரது இறுதிக்கால முகநூற் குறிப்புகள்:செப்டம்பர் 11, 2021: “Sinopharm – 2nd dose. தடுப்பூசி கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்தி விட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடிவில்லை.

மீண்டு எழுவேன். வருவேன்எழுதுவேன்”செப்டம்பர் 9, 2021: “இனிப்போதும்! எனக்கே சலிக்குது!! எழுத இன்னும் பலது உண்டு”அவரது இழப்பு என்னைப்போல் பலருக்கும் அதிர்ச்சியுடன் கூடிய துயரம். அவரது இழப்பால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உற்றார் , உறவினர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(ந. கிரிதரன்)