குருந்தூர்மலையை அண்டி பௌத்தக் கட்டுமானம்; மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்

குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுககூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச்சென்ற மக்கள் அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022அன்று குருந்தூர்மலைக்கு விஜயம்செய்து, இதற்குமேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இருப்பினும் தற்போதும் அங்கு நீதிமன்றத்தின் கட்ளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அங்கு மேலதிக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் காணப்படுவதுடன், அங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் கலவைசெய்யப்பட்ட சீமெந்து, மற்றும் கட்டுமானப் பணிகளுக்குரிய பொருட்களும் அங்கு காணப்பட்டன.

அத்தோடு அங்கு மீண்டும் பௌத்த கண்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்களால் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களாடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது அங்கு சற்று சலசலப்பும் தோன்றியது.

இந் நிலையில் அங்கு பாரிய அளவில் ஆயுதங்கள் தாங்கிய பொலீசார் குவிக்கப்பட்டடதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்றவகையில் போலீசார் புகைப்படங்களையும் எடுத்திருந்தனர்.

பொலிசாரின் இத்தகைய நடடிக்கையைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும் பொலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை  உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.