யாழ். மாவட்டச் செயலகம் முன் ஈ.பி.டி.பி போராட்டம்

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மக்கள் அபிவிருத்தித் திட்டங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“அரச சுற்றுநிருபங்களை முறையாக நடைமுறைப்படுத்து“, “மாவட்டச் செயலகம் அரசியல் கட்சி அலுவலகமா?” மற்றும் “மாவட்டச் செயலாளரே  அதிகாரியாக துணிந்து செயல்படுங்கள்”  போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை  மகேசனிடம் மகஜர் ஒன்றையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையளித்தனர்.

ஈழ மக்கள்  ஜனநாயகக் கட்சியை சார்ந்த நிர்வாக செயலாளர்களான இராமநாதன் ஐங்கரன், ஸ்ரீரங்கேஸ்வரன், சிவகுரு பாலகிருஷணன், வேலணை பிரதேச சபை தவிசாளர் நமசிவாயம் கருணாகர குருமூர்த்தி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் கட்சி சார்ந்தவர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.