லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

  2011 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினப் போராட்டத்தை ஒருங்கிணைக்க முயன்றபோது லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர். இது தொடர்பாக அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கின் சாட்சியாளர்கள் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி யாழ்ப்பாணத்திற்கு நேரில் வந்து சாட்சியமளிக்க அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்திற்கு வர முடியாவிடின் அது குறித்த சத்தியக் கடதாசியைத் தாக்கல் செய்யுமாறு கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் தமது எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியத்தைப் பெறுவது தொடர்பான இறுதி நடைமுறைக் கட்டளை ஏப்ரல் 28 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் வௌ்ளிக்கிழமை(06)  அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.கே. புரந்திரன் மற்றும் லக்சயன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.