சபாலிங்கத்தின் கொலை பற்றி

இக்கட்டுரை 20 மே 1994 இல் தாயகம் இதழில் பிரசுரமானது. வரலாறுகளை பிரசாரங்களாகவும் கேள்விச் செவி வழிச் செய்திகளாகவும் நம்புவோருக்கு சில நேரம் இது அதிர்ச்சியைக் கூடத் தரலாம். அத்துடன் மறைக்கப்படும் ‘தாயகத்தின்’ வரலாறும் பங்களிப்பும் பற்றித் தெரியாதவர்களுக்கு இது பிரமிப்பாகவும் இருக்கலாம்.)
ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது. அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை. இதுதான் அவரது இருப்பின் மையமே.
1991 இல் நான் ஐலண்ட ஞாயிற்றுப்பதிப்புக்காக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை(The Eluding Peace) சபாலிங்கம் அழகாகவெளியிட்டிருந்தார். அதிலிருந்து ஈழ இயக்கங்களின் ஆரம்பம் வளர்ச்சி பற்றி நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டதுமான நூல் ஒன்றை எழுதும்படி பல தடவைகள் என்னை வற்புறுத்தியிருந்தார். தமிழ் அரசியல் ஈழப் போர் போன்றவற்றில் ஏற்பட்ட வாராந்த தடங்கலினல் அந்த வேண்டுகோளுக்கு உடன்பட முடியவில்லை. பின்னர் அவர் தானாகவே அதைச் செய்ய முன்வந்ததாக கேள்விப்பட்டேன். ஈழ இயக்கத்தின் ஆரம்ப வரலாற்றின் பயங்கரமான பகுதிகள் பற்றிய அவரது விசாரணைகளே அவரது உயிருக்கு உலையாய் அமைந்ததை அறியக் கூடியதாக உள்ளது.
தமிழ் அரசியல் தங்கள் ஏகபோக சொத்து என்று கருதும் புலிகளுக்கு தமிழ் இயக்க வரலாறும் அவர்களுக்கே உரியது. பிரபாகரன் காலத்தை சேர்ந்த ஒருவர் முதன் முதலாக பேனாவைத் தூக்கினார் என்றால் அது சபாலிங்கம் தான். இப்போது அவர் இறந்து விட்டார். லண்டனில் செல்வாக்கு மிக்க குழு ஒன்று இந்தக் கொலைக்கு புலிகளே காரணம் என்று ஐரோப்பிய அரசுகளிடம் புலிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருப்பதாக அறிகிறேன். இதற்கு காரணம் ஐரோப்பா, இந்தியா, இலங்கை,வட அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், சமூக சேவையாளர், பத்திரிகையாளர் போன்றோருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களில் சபாலிங்கம் ஒருவர். அவர்களின் பார்வையில் சபாலிங்கம் ஒரு நேர்மையான மனிதர். தனது செயற்பாடுகளுக்காக தன்னை கடனில் அமிழ்த்திக் கொண்டவர்.
பிரான்சில் உள்ள அவரது சகபாடிகள் அவரது மரணத்திற்கு காரணமாக பின்வருவதைக் கூறுகின்றனர். ”தாயகத்திற்கு” எழுதிய கட்டுரை ஒன்றில் ஈழ இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் பிரபாகரன் சம்பந்தப்பட்ட இரண்டு விடயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார். ஒன்று குட்டிமணி,தங்கத்துரை கைது. மற்றது நீர்வேலி வங்கிக் கொள்ளை. இந்த விடயங்கள் பற்றி தற்போது கூறப்படுகின்ற விடயங்களை கேள்விக்குள்ளாக்கி தான் விரைவில் உண்மையை வெளிக் கொணர்வதாகக் கூறியிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் மேற்படி இரு சம்பவங்களிலும் பிரபாகரன் துரோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
குட்டிமணி தமிழ் நாடு செல்ல படகுக்கு காத்து நின்ற போது கைது செய்யப்பட்டார். அவர் தப்பிச் செல்வது பற்றிய விபரங்களை யாரோ தகவல் கொடுத்ததாக பரவலாக நம்பபட்டது. குட்டிமணி மீது கோபம் கொண்ட படகுகாரரால் தகவல் கொடுத்ததாக ஒரு தகவல். மற்றது குட்டிமணியைத் தொலைத்துக் கட்ட பிரபாகரனே செய்தி கொடுத்ததாக தகவல். டெலோ இயக்கம் இதையே வலியுறுத்தி வந்தது. ஆனால் 86இல் படகுக்காரன் இரக்கமின்றி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். யாரும் இது பற்றி சரியாக கூறமுடியாது. அத்துடன் குட்டிமணியும் வெலிக்கடையில் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தார். நீர்வேலி வங்கிக் கொள்ளை பற்றி சபாலிங்கம் எழுப்பிய கேள்வியும் அதன் விளக்கமும் ஆச்சரியமானவை. 79 இல் புலிகள் இயக்கம் பிரிந்த போது பிரபாகரன் எந்த வளங்களும் இன்றி நண்பர்களுடன் குட்டிமணி,தங்கதுரை தலைமயிலான டெலோவில் சேர்ந்து அவர்களுக்காக கொஞ்ச காலம் வேலை செய்தார். அந்த நேரத்தில் அவர் நீர்வேலி வங்கிக் கொள்ளையில் பங்கு கொண்டார். டெலா இயக்கம் தொடங்கிய ஒபரோய் தேவனும் இதில் பங்கு கொண்டார். தாயகத்தில் வெளிவந்த கட்டுரையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அனைவரும் இறந்து விட்டார்கள் என்பதை சபாலிங்கம் சுட்டிகாட்டினார். ஓன்றில் அரச படைகளாலோ,அல்லது புலிகளாலோ அவர்கள் கொல்லப்பட்டனர். ஏனவே இதில் சம்பந்தபட்டவர்கள் அனைவரும் இந்த உலகில் இருந்து அழிக்கப்படுவதில் பிரபாகரனுக்கு பயன் இருந்தது என்பதை சபாலிங்கம் கருத்துக் கூற முயன்றிருக்கிறார். நீர்வேலி வங்கி கொள்ளை பிரபாகரனின் வாழ்வில் ஒரு கறையாகும். புலிகளின் இயக்க விதிப்படி வேறியக்கங்களில் சேர்பவர்களுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. தனது சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் பலரை அந்தக் காரணத்துக்காகவே பிரபாகரன் கொன்றிருக்கிறார்.
இங்கே சபாலிங்கம் அவ்வாறான விடயங்களுக்கு சான்று சேர்த்து புத்தகம் எழுத முயல்வதைக் காண்கிறோம்.
அதற்கு முன்னர் தாயகம் பற்றி…… இரண்டு யுத்தகாலங்களிலும் வெளிவந்த கடுமையான புலிகள் இயக்க எதிர்ப்பு வெளியீடு இதுவாகும். தாயகம் புலிகள் மீது விமர்சனங்கள் ஏற்படுத்திய தரத்துடன் ஒப்பிடுகையில் இராணுவத்தின் ”உளவியல் நடவடிக்கை ” சூரர்கள் பாலர் பாடசாலைப் பிள்ளைகள் போன்றே தோன்றுவர். இரண்டு வருடங்கள் பத்திரிகையாக வெளிவந்த பின்னர் 92 இல் புலிகள் தாயகம் விற்கும் கடைகளை மிரட்டி போட்டிப் பத்திரிகையான செந்தாமரைக்கு சார்பாக அதன் விற்பணையை குலைத்த போது அது சஞ்சிகையாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்போது ரொறன்ரோவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான ஜோர்ஜ் குருஷ்சேவினால் வெளியிடப்படுகிறது. புலிகளை கடுமையாக விமசிக்கும் குருஷ்சேவ் போன்றவர்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்போது ஏன் சபாலிங்கத்தை கொல்வதற்கு யாரும் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆவர்வமுள்ள புலிகள் பற்றிய விமர்சகர்கள் போலன்றி ஈழ இயக்கத்தின் ஆரம்பமுன்னோடிகளில் தற்போது எஞ்சியிருப்பவர்களில் ஒருவரான சபாலிங்கத்தால் இந்த விடயங்கள் கூறப்படுவது அவரைக் கொன்றவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கவேண்டும்.
இந்த ஈழ இயக்கத்திலிருந்துதான் பிரபாகரன் என்ற சிறுவன் ஒரு கெரில்லாவாக உருவாக்கப்பட்டான். 71 இல் ஜே.வி.பி ஒடுக்கப்பட்ட பின்னர் தமிழ் மாணவர் பேரவையை ஆரம்பித்த சத்தியசீலனுக்கு சபாலிங்கம் சகபாடியாவர். இந்த அமைப்பு சுதந்திர கட்சி காலத்தில் தரப்படுத்தலை எதிர்த்து தொடங்கப்பட்டதாகும். இந்த அமைப்பு ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தியது. 1972 இல் பிரபாகரன் சத்தியசீலனின் இரகசிய அமைப்பில் சேர்ந்து கொண்டார். கட்டுபெத்தையில் மாணவராக இருந்த சபாலிங்கம், சத்தயசீலன், பூபதி மற்றும் பலர் மார்ச் 73 இல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இயக்கம் இந்த நிலையில் சிதைக்கப்பட்ட போதிலும் பிரபாகரன் தப்பித்துக் கொண்டார். அநுராதபுரம் புதிய சிறையில் சபாலிங்கம் சிறைவைக்கப்பட்டிருந்த போது. பிரபாகரனுடன் புதிய தமிழ் புலிகள் அமைப்பை ஆரம்பித்த செட்டி தனபாலசிங்கம், கண்ணாடி பத்தன், ரத்தினகுமார் ஆகியோர் சிறையுடைத்து தப்பிச் சென்றனர். இதன் பின்னர் சபாலிங்கமும் மற்றவர்களும் போகம்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஓருநாள் இரண்டாம் மாடியிலிருந்து தவறிவிழுந்தார். இந்த விபத்தில் இவரது இடக்கை நிரந்தரமாக பாதிக்கப்பட்டது.
75 மாசி மாதம் விடுவிக்கப்பட்ட சபாலிங்கம் பரந்தன் உப்பளத்தில் வேலை செய்தார். வரதராஐப்பெருமாள் முக்கியமானவராக இருந்த ஈழவிடுதலை இயக்கத்தில் இருந்த இன்னோரு உறுப்பினர் புஷ்பராஜா. இரவரும் பெருமாள் போல ஈ.பி.ஆர்.எல்.எப்ஃல் சேர்ந்து கொண்டார். சபாலிங்கத்தின் சமீபத்திய வேலையில் புஷ்பராஜா நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததால் அவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்தவர் என்று பலர் அவசரப்பட்டு கூறினர்கள். ஓருநாள் இரவு அவர் உப்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது கதவையாரோ தட்டினர். அது சத்தியசீலனின் குழுவில் இருந்த சிறுவன் பிரபாகரன். அவர் அங்கே அடைக்கலம் தேடினார். தனது வதிவிடத்தில் பல வாரங்கள் பாதுகாப்பான சூழ்நிலை வரும் வரை சபாலிங்கம் மறைத்து வைத்திருந்தார்.
புலிகள் தான் இந்தக் கொலையைச் செய்தார்கள் என்றால் எழுபதுகளில் தொடங்கிய ஈழ இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்து தற்போது மேற்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது தரும் செய்தி இதுதான். வரலாற்று வெற்றிவீரன் பிரபாகரன் சொல்வதன்படி தான் எழுதப்படும். சத்தியசீலன், இணுவிலில் வைத்து பிரபாகரன் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பற்றிய சோட் பாலா இருவரும் ஜேர்மனியில் வாழ்கிறார்கள். ஐயர் என்ற யாழ்ப்பாண பிராமணர் புலிகளின் ஆரம்பகால பொருளாளராக இருந்து தற்போது ஐரோப்பாவில் வாழ்கிறார். 85 ல் பிரபாகரனுடன் மோதல் ஏற்படும்வரை பிரபாகரனுக்கு சமமாக இருந்த ராகவன் தற்போது லண்டனில் வசிக்கிறார். ஆனால் எல்லோரும் இன்றுவரை மௌனமாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சந்திக்க சபாலிங்கம் திட்டமிட்டிருந்தார் அதன் மூலம் இன்னோரு வரலாற்றைச் சொல்ல அவர் முயன்றார். ஈழ இயக்கத்தின் இறுதி வெற்றி வீரனாக தன்னைக் கருதிக்கொள்ளும் பிரபாகரனுக்கு வரலாறு அவருக்கு மட்டுமே சொந்தமானது. அது எத்தனை உயிர்களைப் பலி கொண்டாலும் பரவாயில்லை. இதுதான் அவரது இருப்பின் மையமே.