தாளத்துக்கு ஆடுவதை தவிர்க்க முடியாது

பெற்றோர் வீட்டில் இருக்கும் போது, சிறுசிறு விபத்துகள் ஏற்படுமாயின் அவசர சிகிச்சையளித்துக்  காப்பாற்றிவிடுவர். பெற்றோர் இல்லாத நேரங்களில் விபரீதங்கள் ஏற்பட்டால், இறுதியில் மரணத்தை தழுவும் நிலைமையும் ஏற்படும். ஆக, வீட்டை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பு பெற்றோருக்கே உண்டு.

நமது நாட்டைப் பொறுத்தவரையில், ‘நிர்வாகம் ஒன்று இருக்கிறதா’ எனும் சந்தேகத்தை, அன்றாடம் இடம்பெறும் சம்பவங்கள் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கு கட்டுப்பாடு இல்லை; ஒவ்வொரு வர்த்தகரும் தாங்கள் நினைத்தால் போல் விலைகளைத் தீர்மானிக்கின்றனர். தரக்குறைவான பொருட்கள் மலிந்து கிடக்கின்றன.

தரம், விலை நிர்ணயம் உள்ளிட்டவற்றில் கடுமையாக இருந்து, நுகர்வோரைப் பாதுகாக்கவேண்டிய நுகர்வோர் அதிகார சபை, இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதும் வெட்கக்கேடான விடயமாகும். அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும், தரக்குறைவாக பொருட்கள் விற்பனையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

சில வீடுகளில், ஒருநேரத்தில் சமைத்துவைத்து, மூவேளைகளும் உண்பர். தற்போதைய நிலையில், காலையில் சமைத்த சோற்றை, பகலில் உண்ணமுடிவதில்லை. ஒரு வகையான வழுவழுப்புத் தன்மையுடன் நீர்கோர்த்து விடுகின்றது. நாட்டில் நிலவும் கடும் வெயிலுடன் கூடிய வானிலையால், இவ்வாறு சோறு கெட்டுப்போயிருக்கலாமென, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்கள் ஆறுதல் கூறிக்கொள்வர்.

ஆனால், சந்தைகளில் கிடைக்கும் சில வகையான அரிசி, தரமற்றதாக இருப்பதால், மூவேளைகளும் வைத்து உண்ண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வாயைப் பிளந்துகொண்டிருக்கும் ‘முதலை’களை, நுகர்வோர் அதிகார சபையினர் வலைவீசிப் பிடித்திருந்தால், தரமான, நிர்ணயவிலையில் பொருட்களை, நுகர்வோர் கொள்வனவு செய்திருப்பர்.

பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டுமாயின், நுகர்வோர் அதிகார சபைக்கு விண்ணப்பம் செய்யவேண்டும். அதன்பின்னர், வாழ்க்கைச் செலவு குழுவில் கலந்துரையாடப்படும். ஏதுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே, நுகர்வோரும் பாதிக்காத வகையில், விலை அதிகரிப்புக்கு அனுமதியளிக்கப்படும்.

தற்போதைய நிலைமையில், இவ்வாறான முறைமையொன்று பின்பற்றப்படுகின்றதா என்பதே தெரியாமல் இருக்கின்றது. இறுதியில், இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி, தான் நினைத்தாற்போல, எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துக் கொண்டுள்ளது.

மின்னுற்பத்திக்காகத் தங்களிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு, அரசாங்கம் மறுத்துவிட்டது என்றும், அதனாலே, எரிபொருளை ஐ.ஓ.சி அதிகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நெருக்கடியில் இருக்கும் போது துன்புறுத்தக்கூடாது. அதேபோல, கடனைப் பெற்றுக்கொண்டால், அந்நிறுவனத்தின் தாளத்துக்கே ஆடவேண்டும்.

முறையான நிர்வாகமொன்று இன்மையால், போடும் தாளத்துக்கெல்லாம் ஆடவேண்டிய நிலைமையிலேயே இவ்வரசாங்கம் இருக்கிறது. இதன் பெறுபேற்றையெல்லாம் சாதாரண மக்களே அனுபவிக்கின்றார்கள் என்பதே கவலையாகும்.

(Tamil Mirror)