வன்னியின் ஆறுகள்.

இந்த ஆறுகள் மாரியில் நீரையும் கோடையில் மணலையும் தருகின்றன. நீரும் மணலும் செல்வமே. இந்தச் செல்வத்தைப் பக்குவமாகப் பாதுகாத்து, தேவைக்கு அளவாகப் பயன்படுத்தி வந்தனர் வன்னி மக்கள். நீரும் மணலும் மட்டுமல்ல, ஆறுகளின் தீரமெல்லாம் ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களும் செல்வம்தான். வன்னியெங்கும் ஆறுகள் என்பதால் வன்னிக் காடு எப்போதும் செழித்தேயிருக்கும். காடு செழித்தால் நாடு செழிக்கும். காடு செழித்தால் மழை பொழியும். மழை பொழிந்தால் ஊர்கள் செழிக்கும். ஊர்கள் செழித்தால் நாடு செழிப்புறும்.

பலநூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் ஆறுகளைச் சீண்டாமல், தாயும் பிள்ளையுமான உறவில் அவற்றோடு கூடி வாழ்ந்த வன்னிச் சனங்களுக்கு வந்தது சோதனை.

ஈழப்போரோடு வன்னிக் காடுகள் வேட்டைக்களங்களாகின. வன்னியின் ஆற்றுத் தீரமெங்கும் கலவரமாகியது. இந்திய அமைதிப்படை, இலங்கைப் படைகள், இயக்கங்கள் என்று ஒவ்வொரு தரப்பினாலும் காடும் ஆறுகளும் யுத்த களங்களாகின.

அதிலும் வன்னியின் இறுதிப்போர்க்காலம் என்பது ஆறுகளின் அமைதியை, அழகை, அவற்றின் வழித்தடங்களை, அவை கொண்டிருந்த நிலைபேறான செல்வங்களை எல்லாம் அழித்தன.

அங்கிருந்த முதுமரங்கள் பல வேரோடு சாய்ந்தன.

ஆற்றையும் காட்டையும் தங்கள் வாழ்வோடு கொண்டிருந்த வன்னிச் சனங்கள் சிறகுகள் அறுக்கப்பட்ட பறவைகளைப்போலானார்கள்.
ஆனாலும் என்ன செய்ய முடியும்? வெல்ல முடியாத விதியின் முன்னே கைகட்டித் தலை கவிழ்ந்து நின்றனர்.

இந்த விதி எப்போது முடியுமென்று எவருக்கும் தெரியவில்லை. யுத்தம் முடிந்த கையோடு காடுகளில் நிரம்பியது படை. அப்படியே ஆறுகளும் படைகளின் வசமாயிற்று. ஆறும் காடும் படைகளின் வசமென்றால் சனங்களிடம் என்னதான் உண்டு? வன்னியில் என்னதான் மிச்சம்?

படை கொண்ட காட்டின் செல்வமெல்லாம் களவு போகிறது. மரங்களும் மணலும் இரவு பகலாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதில் எல்லாக் கைகளுக்கும் பங்குண்டு.

கனிய வளத்திணைக்களம் தொடக்கம் மாவட்டச் செயலகங்கள், காவல்துறை, பிரதேச செயலகங்கள், வன இலாகா என்று எல்லா அதிகாரத் தரப்பும் காட்டையும் ஆற்றை தின்று முடிக்கின்றன.

அளவுக்கதிகமாக மணல் அகழப்படுகிறது. தேவைக்கதிகமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் ஆறும் அழிகிறது. காடும் அழிகிறது. ஆறும் காடும் இல்லையென்றால் குளங்களில்லை. குளங்களுக்குத் தண்ணீர் வராது. குளங்கள் இல்லை என்றால் வன்னி இல்லை.

ஆனால், இதைப்பற்றி யாருமே கணக்கிற் கொள்வதில்லை. கடன்பட்டு டிப்பரை, ட்ரக்ரரை எடுத்திருக்கிறேன். மண்ணை ஏற்றினால்தான் லீஸிங்கைக் கட்டலாம் என்று அழுது புலம்புகிறார்கள் பலரும்.

அதற்காக ஆற்றையும் காட்டையும் அழிக்கலாமா என்றால், பதிலுக்கு நாங்கள் என்ன செய்கிறது என்று கேட்கிறார்கள்.

ஆற்றை அழித்து வாழ்கின்ற துணிச்சல் இவர்களுக்கு எப்படி வந்தது?

இது நின்றால் பால். செத்தால் இறைச்சி என்ற தத்துவத்துக்கு நிகரானது.

ஆறில்லா ஊரின் அழகு பாழ் என்று முன்னோர் சொன்னார்கள். ஆறில்லாக் காடு பாழ் என்பது இயற்கை விதி. இயற்கையியலாளர்களின் எச்சரிக்கையும் இதுதான்.

ஆனால், இதைச் செவி கொள்ளவும் மனங்கொள்ளவும் யாருமில்லை.

வன்னி இன்று பாதுகாப்பற்ற நிலமாகி விட்டது. அதனுடைய வேர்கள் வெட்டப்படுகின்றன. அது கொள்ளையிடப்படுகிறது. அந்தக் கொள்ளையில் எல்லாக் கைகளும் இணைந்திருக்கின்றன.

இது வன்னிக்கு அபாய காலம்.