2002 குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறும் பிபிசி ஆவணப்படம்!

இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ (India: The Modi Question) என்ற தலைப்பில் 2 பகுதிகளாக தயாரித்த ஆவணப்படத்தின், முதல் பகுதியை கடந்த ஜனவரி 17 அன்று வெளியிட்டது. இந்த ஆவணப் படம், குஜராத் மத வன்முறையோடு, அன்றைய முதல்வர் நரேந்திர மோடிக்கு நேரடியாக தொடர்பு இருந்தது என்பதை உரிய ஆதாரங்களோடு எடுத்துக் காட்டும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆவணப்படம் பல்வேறு வலைதளங்களில் வெளியாகி, குஜராத் மதவன்முறை தொடர்பான விவாதங்களை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வந்தது.

இதனை எதிர்பாராத பாஜக-வினர் பதற்றம் அடைந்தனர். வழக்கம்போல எதிர்ப்பு தெரிவிக்கவும் ஆரம்பித்தனர். மோடி குறித்து அவதூறு செய்யும் வகையில் இருக்கும் இந்தப் படத்தை யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மிரட்டல் நடவடிக்கைகளிலும் இறங்கினர். ஒன்றிய பாஜக அரசு பிபிசி-யின் ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதித்தது. இதனால், இந்த ஆவணப்படம் சில வலைதளங்களில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டது.

இவை ஒருபுறமிருக்க, ‘இந்தியா: மோடிக் கான கேள்விகள்’ – ஆவணப்படத்தில் மோடி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது மட்டுமல்லாமல், குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கி லாந்து அரசுக்கும் தெரியும் என்றும் கூறப்பட்டு இருந்ததால், பிபிசி-யின் இந்த ஆவணப்படம் இங்கிலாந்து அரசுக்கும் நெருக்கடியாக மாறியது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து எம்.பி. இம்ரான் உசேன், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இதுதொடர் பான விவகாரத்தைக் கிளப்பிய நிலையில், இம்ரான் உசேனின் கேள்விக்கு அந்நாட் டின் பிரதமரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

“குஜராத் வன்முறை தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் மரியாதைக்குரிய ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை’’ என்று வேக வேகமாக மோடிக்கு ஆதரவுநிலையெடுத்தார். இதனிடையே, மோடி பிபிசி ஆவணப் படத்தின் 2-ஆவது பகுதி ஜனவரி 23-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள நிலையில், ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ ஆவ ணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிபிசி ஆவணப்படம் அடிப்படை யற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரச்சாரப் படம். அதில் பார பட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரி கிறது. இது கண்ணியமானதாக இல்லை. இந்தப் பிரச்சனையை (குஜராத் மத வன்முறையை) மீண்டும் கிளற விரும்பு பவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

(Maniam Shanmugam)