‘எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது’

“என்னை முழங்காலிட நிர்ப்பந்தித்தமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு, கல்வியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கியமையானது எனது பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளது.” என பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார்.

ஊவா மாகாண முதலமைச்சருக்கு, ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவி, மீண்டும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவியை, ஊவா மாகாண முதலமைச்சருக்கே மீண்டும் வழங்கியமை, நீதிக்கிடைக்குமென இத்தனை நாட்கள் காத்திருந்த எனக்கும், எனக்காகக் குரல் கொடுத்திருந்த அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“எனக்கு கடந்த காலங்களில், கடிதங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன், உயிர் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மீண்டும் கல்வியமைச்சு பதவியை வழங்கியமை, எனது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவர், “எனக்கு ஏற்பட்டிருந்த அநீதி வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் கோரிக்கை விடுத்தார்.