காலில் விழுந்து கதறிய உறவினர்கள்

கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து, தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுதனர். இன்றுடன் 28 நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, இன்று காலை 7.45 மணியளவில், முதலமைச்சர் சந்தித்தார்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபடுவோரின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இதன்போது, முதலமைச்சரின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுத உறவினர்கள், தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடுதலைக்கு முயற்சி எடுக்க வேண்டும். தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவரின் காலில் விழுந்தும் கும்பிட்டும் கதறி அழுதுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர், “உங்களின் போராட்டம் நியாயமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில், நான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன். விரைவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பேன்” என, தெரிவித்தார்.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஜங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ப.அரியரட்னம், பசுபதிபிள்ளை ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.