குடத்தனை பகுதியில் அமைந்துள்ள குறித்த காணியானது தனக்கு சொந்தமானது என கூறி நபர் ஒருவர், எவ்வித சட்டபூர்வ ஆவணங்களும் இன்றி அங்கு கட்டிடம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக கருதப்படும் இக்காணியில், அத்துமீறி கட்டிடம் கட்டப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
பொதுமக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை பிரதேச சபை அதிகாரிகள், குறித்த கட்டிடம் முறையான அனுமதியின்றி செய்யப்படுவதை உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, குறித்த நிர்மாண பணியை இடைநிறுத்துமாறு கோரி, சட்டவிரோத கட்டிடம் என அடையாளப்படுத்தும் ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) கடிதத்தை அவ்விடத்தில் ஒட்டினர்.
அதிகாரிகள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, காணி உரிமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், பிரதேச சபையினால் ஒட்டப்பட்ட எச்சரிக்கை கடிதத்தை கிழித்து எறிந்துள்ளார்.
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள், அரச அதிகாரிகளின் உத்தரவை மீறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.
“அரச சபையின் உத்தரவை மதிக்காமல், ஆவணங்களும் இன்றி அத்துமீறி செயற்படுவதை அனுமதிக்க முடியாது” என அங்கிருந்த இளைஞர்கள் விசனம் தெரிவித்தனர்.
தற்போது குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதுடன், சட்டவிரோத நிர்மாணம் மற்றும் அரச அறிவித்தலை சேதப்படுத்தியமை தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபை மற்றும் பொலிஸார் ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.