சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள Wang Junzheng, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த Wang Junzheng, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டார்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேச திணைக்கள தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர்
நாயகம் Peng Xiubin பிராந்திய வெளியுறவு அலுவலக பணிப்பாளர் நாயகம் Bao Ting, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பிரதிப் பணிப்பாளர் Wang Siqi மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதிஅனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.