தானாக தரையிறங்கியது புஷ்பக்

மறுபயன்பாட்டு ராக்கெட்டின் (RLV) தரையிறங்கும் திறனை நிரூபிப்பதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஏரோனாட்டிக்கல் சோதனை தளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட ஓடுபாதையில் மாதிரி ராக்கெட் (RLV-LEX-01) வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்று காலையில் அதே சோதனை தளத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இரண்டாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் மூலம் மறுபயன்பாட்டு செலுத்து வாகன தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புஷ்பக் என பெயரிடப்பட்டுள்ள இறக்கையுடன் கூடிய இந்த மாதிரி ராக்கெட் (RLV-LEX-02), விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் உயரே கொண்டு செல்லப்பட்டு, 4.5 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. 4 கிமீ தொலைவில் இருந்தபோது தானாக ஓடுபாதையை அணுகிய புஷ்பக், துல்லியமாக ஓடுபாதையில் தரையிறங்கியது. பின்னர் அதன் பிரேக் பாராசூட், லேண்டிங் கியர் பிரேக்குகள் மற்றும் முன்பக்க ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை பயன்படுத்தி ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டது. மறுபயன்பாட்டு ராக்கெட்டின் (RLV) தானியங்கி தரையிறங்கும் திறனை RLV-LEX-02 நிரூபித்துள்ளது.

விண்வெளியில் இருந்து திரும்பும் மறுபயன்பாட்டு ராக்கெட்டின் அணுகுமுறை மற்றும் அதிவேகத்தில் தரையிறங்கும் நிலைமைகளை, இன்றைய பரிசோதனை தெளிவுபடுத்தியிருக்கிறது.

இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மிகவும் சவாலான இந்த திட்டத்தை சிறிய குறையும் இல்லாமல் செயல்படுத்திய விஞ்ஞானிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டியுள்ளார்.