நீண்ட காலத்திற்குப்பின் தமிழ் மக்களிக் காணிகள் விடுவிப்பு

பலாலி – அந்தனிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணனா் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளாா். 

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கா் / மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கா் / தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கா்/ பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கா்/ நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கா், மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாக  இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி  மிக நீண்ட காலத்தின் பின்னா் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. 

மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 

மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐனாதிபதி பணித்துள்ளார்.

 நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா,  பாராளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன்,  பிரதம செயலாளா், யாழ்.மாவட்டச் செயலா், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபா், மேலதிக அரசாங்க அதிபா் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலா் மற்றும் பொதுமக்கள், படையினா, பொலிஸாா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.