பங்காளிகள் ஜனாதிபதியை சந்திக்க மும்முரம்

கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலையில் 40 சதவீதமானவற்றை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டமை தொடர்பில் இந்தப் ​பேச்சுவார்த்தை நடைபெற்றது.

யுகதனவ் மின் ஆலை ​தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, இந்த முதலீட்டில் 250 ​அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இதனால் நாட்டுக்கு நன்மைக்கிடைக்கும் என எடுத்துரைத்தார்.
எனினும், அவருடைய பதிலில் பங்காளிகள் திருப்தியடையவில்லை.

அதனால், இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துவிட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஒப்பந்தத்தை சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினருக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு சுமார் இரண்டரை மணி​நேரம் நடைபெற்றது.
சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் விமல் வீரவன்ச,
கெரவலப்பிட்டிய யுகதனவ் மின் ஆலை தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்‌ஷ, நாடு திரும்பியதும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
என்றார்.

இதேவேளை, அரசாங்கத்தில் இருக்கும் பங்காளி கட்சிகளில் 10 கட்சிகளின் தலைவர்கள், மேற்படி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமெழுதி, ஜனாதிபதிக்கு ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை

இந்நிலையில், மேற்படி சந்திப்பு தொடர்பில் பிரதமர் ஊடகப் பிரிவு
அனுப்பிவைத்துள்ள அறிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் 23ஆம் திகதி
இடம்பெற்றது.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லல், 2021ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தல் மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்களை அவ்வாறு சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டமொன்றை
தயார்ப்படுத்தல் தொடர்பில் இதன்போது பிரதானமாக கவனம்
செலுத்தப்பட்டது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டின் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.