‘பல்கலைக்கழகம் ஒரு தேசிய நிறுவனமாகும்’

“யுத்தம் முடிவடைந்தும் இன்னும் வடக்கு மக்களது நெஞ்சங்களில் அன்பு, கருணை, இரக்கம், ஐக்கியம் எழவில்லை. இன்னும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற நிலையிலேயே உள்ளனர்.  இந்த மனோநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர்,

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையின மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைதுசெய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த நாட்டில் பல்கழைக்கழகம் ஓர் இனத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது ஒரு தேசிய நிறுவனமாகும்.

இலங்கையில் உள்ள மூவின மாணவர்களுக்கும் இந்த நாட்டில் கல்வி, கலை, மதம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான உரிமை, வியாபாரம் செய்து சொத்துக்கள் சேர்ப்பதற்கான உரிமை உள்ளது. அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனோ கண்டிக்கவில்லை.

பேராதெனியா, கொழும்பு மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களில் 90 சதவீதமான பெரும்பான்மையின மாணவர்கள் தமிழ், முஸ்லிம் மாணவர்களது மத, கலை, கலாசாரத்துக்கு மதிப்பளித்து மிகவும் அந்நியோன்னியமாக பழகிவருகின்றனர்.

இந்நிலையில், இந்த பல்கலைக்கழக மாணவர்கள் முரண்பட்டால் இந்த நாடு மீண்டும் என்னவாகும்?’ எனக் கேள்வி எழுப்பினார்.