பாராளுமன்றத்தில் பாலூட்டிய தாய் எம்.பி!

 

அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் இடது சாரி பசுமைக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் லாரிசா வாட்டர்ஸ். இவருக்கு சமீபத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கு கிழமை முக்கியமான ஒரு வாக்கெடுப்பு நடந்தது. இதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தில் லாரிசா இருந்தார். அதே சமயம் தன் பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு உணவை கொடுப்பதில் லாரிசாவுக்கு சிறிதும் விருப்பமில்லை.

எனவே, தன் குழந்தையையும் தன்னுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து சென்றுவிட்டார் லாரிசா. அங்கு பாராளுமன்ற நிகழ்வின்போதே தன் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றினார். இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில், “அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் தாய்ப்பால் குடித்த முதல் குழந்தை என் மகள் அலியா என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் பெண் எம்.பி ஒருவர் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இந்தச் செய்தி சர்வதேச அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி எந்த பாராளுமன்ற பெண் உறுப்பினரும் அவுஸ்திரேலிய வரலாற்றில் தன் குழந்தைக்கு பாராளுமன்றத்தினுள் வைத்துத் தாய்ப்பால் கொடுத்ததும் இல்லை.