மேற்படி அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (03) அன்று சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அவர் அறிக்கை கோரியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
‘சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது.
அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்பவம் கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கி சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.