வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது.
அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.