ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!

பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன்.

நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை. கீழே வாசித்து பாருங்கள்.

* அவர்களுக்கு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெருந்தோட்டங்களில் சுமார் 9.5 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

* கம்பனி உரிமையாளர்கள், தோட்ட உயர் அதிகாரிகள், தேயிலை ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களின் வீடுகளையும் தொழிலாளர்களுடைய வீடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
நாளாந்தம் 450 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கின்றது. உங்களுடைய வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது 450 ரூபாவால் என்ன செய்ய முடியும்?

* இலங்கையில் 40% சிறுவர் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களை சேர்ந்தவர்கள்.

* 14 310 தற்காலிக வீடுகள் இருக்கின்றன. 83 960 பேர் வீடுகள் எதும் இல்லாது வாழ்கிறார்கள் (உறவினர்கள் வீடுகளில்).

* பெருந்தோட்ட மாணவர்களில் 29% மாத்திரமே க.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாடங்கள் சித்தியடைகின்றார்கள். எவ்வித பயிற்சி, கல்வி தகைமை இல்லாமல் ஆண்டுக்கு 5000 – 6000 மாணவர்கள் தொழிற்சந்தைக்கு உள்வாங்கப்படுகின்றார்கள்.

* சாதாரணமாக நகரத்தில் வசிக்கும் குடும்பத்தினர் மாதாந்தம் 1.7kg கோதுமை மாவை உட்கொள்கின்றனர். கிராமங்களில் அது 1.8 kg ஆக இருக்கின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் ஒரு குடும்பம் 12 kg கோதுமை மாவை உட்கொள்கின்றது. குறிப்பாக தேங்காய் இல்லாத ரொட்டியும் வெங்காய சம்பலையுமே உட்கொள்கின்றார்கள்.

* பெருந்தோட்டங்களில் பிறக்கும் குழந்தைகளில் 36% குறைந்த எடையுடனே பிறக்கின்றன.

* குறிப்பிட்ட வயதில் தேவையான உயரமோ எடையோ இல்லாமல் 25% வாழ்கின்றனர். 5 வயதுக்கு குறைவானோரில் 25% மானோருக்கு மந்தபோசனம் உள்ளது.

* கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 64% கணித பாடத்திலும் 74% ஆங்கில பாடத்திலும் 67% விஞ்ஞான பாடத்திலும் 34% தாய்மொழி தமிழிலும் சித்தியடைவதில்லை.

* நாடு முழுவதும் 28 900 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குகின்றபோதிலும் பெருந்தோட்டப்பகுதியை சேர்ந்தோர் 120-150 பேர் வரை மாத்திரமே உள்வாங்கப்படுகின்றனர். அவர்களில் 65% லயன்களில் வாழ்வோர் அல்லர்.

* இரத்தினபுரி மாவட்டத்தில் உயர் தரத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்ட ஒரு தமிழ் பாடசாலைக்கூட இல்லை.

* பெருந்தோட்ட மக்களின் கலை கலாசாரங்களை பேணக்கூடிய அல்லது பாதுகாக்கக்கூடிய வகையில் எந்தவொரு புத்துருவாக்கமும் இடம்பெறுவதில்லை. தமிழ் மக்கள் என்பதால் அல்லது சிறுபான்மை மக்கள் என்பதால் அரசாங்கம் இவற்றை முடக்குகின்றதா?

* கடந்த காலங்களில் தொண்டமானின் சுயநலத்திற்காக தனிப்பட்ட தேவைகளுக்காக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திகள் எதுமே இடம்பெறவில்லை. தொண்டமான் பவுண்டேஷன் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அது எதற்காக? அது அரசாங்க நிறுவனமா? அரசாங்க அதிகார சபையா? அல்லது திணைக்களமா? அந்த நிறுவனத்தில் தொழில்புரிவோர் கட்சி நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனர். வருடாந்தம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது. கடந்த 9 வருடங்களில் ஒதுக்கப்பட் 1800 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது?இங்கே தொழிலாளி 450 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டு இருக்கும்போது, தொண்டமானால் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண்மணிக்கு 3.5 இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது.