ஒரு பழங்கதை சொல்கிறேன் கேளுங்கள்…..

தலைவர் என்ற மிதப்பு கண்களில் இல்லை. உடல்மொழியில் எந்த அதிகாரத் தோரணையும் தென்படவில்லை. குரல் சாந்தமும் மென்மையுமாயிருந்தது. புன்னகை ததும்பும் இதழ்கள் தோழமைக்கு அழைப்பு விடுப்பன போன்றிருந்தன.

அங்கு சூழ்ந்து வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும், அவருக்கும் அவர் குழுவினருக்கும் அணுக்கமாயிருந்தார்கள்.

போராளிக்குழுத் தலைவன் என்றாலும் பாதுகாப்புக்கான எந்த ஆயுதமும், பாராவும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அங்கு வளைய வந்து கொண்டிருந்தார் அவர். சென்னைத் தெருகளில் மொபட்டிலும் சைக்கிளிலும் மோட்டார் பைக்கிலும் எளிமையாகப் பயணித்துக்கொண்டிருந்த அவரை, அறிந்தோர் ஓர் அதிசயமாகத்தான் பார்த்தார்கள்.

கோடம்பாக்கம் பாலத்தினருகே இருந்த ஒரு தொழில்நுட்பப் பயிற்சியகத்தில் படித்துக்கொண்டிருந்த அந்த மீசை முதிராத பையன் ஒருநாள் அவரிடம் வலியவந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“அடே, இலங்கைப் பொடியனா நீ?”

கூடுதல் மகிழ்ச்சியுடன் அவனைத் தழுவிக் கொண்டார்.

தெருவில் சந்திப்பதும் வணங்குவதும் உரையாடுவதும் தொடர்கதையாகி விட…. அவனைத் தம் தோழர்களோடு தங்கள் இருப்பிடத்திலேயே தங்க வைத்துக்கொண்டார் தலைவர்.

அவனும் குழுவில் ஒருவனாகிப் போனான். அவனுக்கும் சேர்த்து சமைத்தார்கள் குழுத் தோழர்கள். சிறுவன் என்பதால் அவனுக்கு இரண்டு அகப்பைச் சோறு அதிக அன்புடன் பரிமாறப்பட்டது.

“என்னடா கப்பல் கவிழ்ந்ததோ? தாடைக்கு முட்டுக்கொடுத்து உட்கார்ந்திருக்காய் ?” என்பார் தலைவர்.

“அண்ணை, இன்ஸ்ட்யூட்டில் பீஸ் தொகை அடைக்கவில்லை! கோவிக்கிறாங்கள்…”

அவன் மேற்கொண்டு படிப்பதற்கான கட்டணத்தையும் செலுத்தி அவனைப் படிக்க வைக்கிற பொறுப்பையும் தனதாக்கிக் கொள்கிறார் தலைவர்.

அத்தனை அன்புடன் – அவனை ஒரு மான்குட்டிபோல் தன் வலிய இரு கரங்களில் ஏந்தி அவர் நடப்பதை – அந்தத் தெரு மக்களும் குழுத் தோழர்களும் பலமுறை பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

  1. ஜூன் 17.
    உளவுத் துறை போலீஸ் வந்து அந்தக் குழுவினரின் இருப்பிடத்தை சோதனையிட்டு அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிச் செல்லுகிறார்கள். தலைவரிடமிருந்த பிஸ்டல் ஒன்றை மட்டும் பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ள அனுமதித்துவிட்டு , மற்ற ஆயுதங்கள் அனைத்தையும் அள்ளிச் செல்லுகிறார்கள்.

மறுநாள் ஒரு ரகசியப் பொழுதில்….

அவர்களிடம் அடைக்கலமாகி அன்பைப் பெற்றிருந்த அந்த சிறுவன், ரகசிய ட்ரான்ஸ்மீட்டரில் யாரிடமோ தொடர்பு கொள்கிறான். ஆயுதங்கள் அகற்றப்பட்ட சேதியைச் சொல்லுகிறான். யார் யார் எந்த அறைகளில் தங்கியிருக்கிறார்கள், தலைவரின் அறை எது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட அந்த ஒற்றை பிஸ்டல் யாரிடமிருக்கிறது என்கிற எல்லாத் தகவல்களையும் பரிமாறுகிறான்.

மறுநாள் ஜூன் 19. மாலைக் கருக்கல். இருள் கவியும் முன்பாக ….

விழுப்புரத்தில் திருடப்பட்ட ஓர் அம்பாஸடர் காரில் வந்த ஆயுதம் தாங்கிய இரண்டுபேர் – போராளிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து தலைவர் உள்ளிட்ட பதின்மூன்று பேரையும் சல்லடைக் கண்களாக, துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தெடுக்கிறார்கள். வழிந்தோடும் குருதியில், அனைவரும் உயிரற்ற சதைப் பிண்டங்களாகக் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

துப்பாக்கிச்சூட்டின் ஓசை கேட்டு என்னவோ ஏதோவென்று பதறியடித்து வந்த உள்ளூர் மக்கள்மீதும் கொலையாளிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்துகிறார்கள். ரெண்டுபேர் அங்கேயே செத்து வீழுகிறான்.

வந்த காரியத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் காரில் தப்பியோடியவர்கள், மறவாமல், காட்டிக்கொடுத்த அந்த இளம் எட்டப்பனையும் தங்களோடு அழைத்துச் செல்லுகிறார்கள். அந்தக் காரிலேயே வேதாரண்யம் வரை சாலை வழியாகப் பயணித்த கொலையாளிகள், ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த படகின்மூலம் வட இலங்கைக்கு தப்பிச் சென்றுவிடுகிறார்கள்.

அதுநாள்வரை கண்டிராத, கதைகளில்கூட வாசித்தறியாத அந்தக் கூட்டுப் படுகொலைகளால் தமிழகமே அதிர்ந்து நின்றது.

கொடுங்கதை இத்தோடு முடியவில்லை.

அந்த இளம் எட்டப்பன் ஆண்டுகள் கழித்து, இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகம் வருகிறான்.

இம்முறை அவன் வந்தது இந்தியாவின் பிரதமர் ராஜீவகாந்தியை படுகொலை செய்ய!

அவன் பெயர் சாந்தன்.

கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட –
‘ராஜிவ் கொலையாளிகள்’ என்று சட்டம் சொல்லுகிற –

‘அப்பாவி நிரபராதித் தமிழர்கள் ‘ என்று சில நல்லவர்கள் ஜாங்கிரி கொடுத்துக் கொண்டாடுகிற –

ஏழுபேரில் ஒருவனான அதே சாந்தன்!

சென்னையில் பதினான்கு பேருடன் கொல்லப்பட்ட போராளிக்குழுவின் தலைவர் பெயர் பத்மநாபா.

இபிஆர்எல்எப் என்றழைக்கப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா!

இன்றைக்கு -நவம்பர் 19 –
பத்மநாபாவின் பிறந்தநாள் என்பது –
எப்போதும் என் ஞாபகத்திலிருக்கிறது.