சர்வ தேச பெண்கள் தினம்

அது இன்று வரை சில மாற்றங்கள் நடைபெற்றாலும் பலதும் வேறு வடிவங்களில் தொடரும் அவலங்களுடனேயே தொடர்கின்றது.

ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளை கொழு கொம்மாக பிடித்து எழுந்தும்தான் வந்திருக்கின்றாள் பெண்.

இதற்குள் எத்தனை அடக்குமுறைகள். கலாச்சாரம் பண்பாடு மத நம்பிக்கை குலப்பெருமை என்று கூறிக் கொண்ட ஒடுக்கு முறைகள். ஆனாலும் அவள் தனது உரிமைகளுக்காக போராடிக்கொண்டு தொடர்ந்து பயணப்பட்டதே மனித குல வரலாறு.

போராட்டங்களினால் கிடைத்த உரிமைகளின் அடிப்படையில் சாதித்தவர்கள் நிரூபித்தவர்கள் பலர். அவர்களில் நாம் வாழும் சூழலில் சிலரை இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் பேசுவோம்.

இங்கு பேசப்படும் பெண்களை ஒரு குறியீட்டு பாத்திரங்களாக எடுத்துக் கொள்ளுங்கள். இவர்களைப் போல் பல்வேறு பெண்களும் பல்வேறு மட்டத்திலும் இந்த சமூக ஒடுக்கு முறையையும் ஆண்மேலாதிக்க முறையையும் வர்க்க ஒடுக்கு முறையையும் உடைத் தெறிந்து வெளியே வந்துள்ளார்கள்.

மற்றைய எதனையும் விட தாய்மையாக உணரும் அந்த தன்மையே பெண்களை ஆண்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறந்த பண்பாக என்னால் பார்க்கப்படுகின்றது.

இறக்கி வைக்க முடியாத சுமையாக அதனை பாரமாக எடுத்துக் கொள்ளாது சுமந்து பெற்ற பின்பு மார்பிலும் தோழிலும் மடியிலும் சுமக்கும் அந்த தாய்மை உணர்வு மகத்தானது. உயர்வானது.

சிலருக்கு இறக்க முடியாத சுமையாக இருப்பதற்கான மகப் பேறு வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் மனதால் மற்றைய எல்லாவற்றையும் சுமக்கும் அந்த தாய்மையை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். இதற்குள் திருநங்கைகளும் அடக்கம்.

இந்த சுமைகளை அவர்கள் அக மகிழ்ந்துதான் செய்தே வந்திருக்கின்றனர். இதனை நாம் எமது இணையாள் தாய் தங்கை தமக்கை மகள் என்று பலரிடமும் கண்டுதான் வருகின்றோம்.

இதற்கு அடுத்தாக குடும்பம் அது சார்ந்து சமூகம் என்ற வகையில் நிறைவேற்று அதிகாரி என்ற பட்டம் பெறாத சிறந்த நிர்வாகியாக திகழ்வதுவும் எம் தாய் உள்ளங்கள்தான்… பெண்கள் தான்…

ஊதியம் என்றும் அங்கிகாரம் என்று வரும் போது இந்த சமூகம் இந்த பெண்களின் நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கும் ஊதியம் கௌரவம் என்னவோ ஆண்களை விட மிகக் குறைவுதான். இந்த சமநிலையற்ற தன்மை உடைக்கப்பட வேண்டும்.

வெற்றி பெற்ற எல்லா ஆண்களுக்கும் முன்னால்(பின்னால் அல்ல) ஒரு பெண் வழிகாட்டியாக திசை அறி கருவியாக இலக்கை காட்டி நகர்த்தும் நபராக இந்தப் பெண்ணே அதிகம் இருக்கின்றார்

ஏன் நெறிப்படுத்தும் கடிவாளத்தையும் இந்த பெண்தான் அதிகம் செய்கின்றார்கள்.

கடைக் கண்ணால் மாத்திரம் இல்லை கடமையினாலும் வசியம் பண்ணும் இலாவகத்தை தெரிந்திருக்கும் மரபணுவைக் கொண்டவளே பெண். இந்த கடைக் கண் பார்வையிற்குள் மகிழாதவர்களும் உண்டோ.

அவளுக்கு இந்த சமூகம் கொடுக்க வேண்டிய அங்கீகாரம் அவளும் ஒரு உணர்வுள்ள ஜீவன் என்பதாகும். அவர் ஒரு போகத்துக்குரிய சதப் பிண்டம் அல்ல… மாறாக பொருந்தி வாழும் தாயுள்ளம் கொண்ட தலமைத்துவப் பண்புள்ள ஒருவர் என்பதாகும்.

இதனை தமது வாழ்வில் வெளிப்படுத்திய சிலரை பற்றி கதைகளை…. செய்திகளை பார்போம்…

கேரளா மலப்புரம் மாவட்ட ஆட்சியர்(கலெக்டர்) ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை.

பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை.

பேச்சு தொடர்பு மொழியாக ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார், ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன.

அப்போது குழந்தைகள் ஆட்சியரிடம்; சில கேள்விகளை கேட்டனர்.

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர். நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள்.”

“வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?”

ஒரு மெல்லிய பெண் பார்வையாளர் எழுந்து நின்றாள்.

‘கேள், குழந்தை…”

‘மேடம், ஏன் முகத்துக்கு மேக்கப் போடக்கூடாது?”

கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது. மெல்லிய நெற்றியில் வியர்வை வழிந்தது. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது.

பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள். மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார். பிறகு குழந்தையை உட்காருமாறு சைகை செய்தார்.

குழந்தை குழப்பமான கேள்வியைக் கேட்டது. இது ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத ஒன்று. அதற்குப் பதில் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல வேண்டும்…..

மெதுவாக பேச ஆரம்பித்தார்…..

‘என்னுடைய கதைக்காக உங்கள் பொன்னான பத்து நிமிடங்களை ஒதுக்க நீங்கள் தயாராக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.’

‘தயார்’

‘நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் பிறந்தேன்.”

கலெக்டர் சற்று நிதானித்து பார்வையாளர்களை பார்த்தார்.

“‘மைக்கா’ சுரங்கங்கள்(Mica Mining) நிறைந்த கோடெர்மா மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தேன். என் அப்பாவும் அம்மாவும் சுரங்கத் தொழிலாளர்கள். எனக்கு மேலே இரண்டு சகோதரர்களும் கீழே ஒரு சகோதரியும் இருந்தனர். மழை பெய்தால் கசியும் ஒரு சிறிய குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம்.”

“வேறு வேலை கிடைக்காததால் எனது பெற்றோர் சொற்ப கூலிக்கு சுரங்கத்தில் வேலை செய்தனர். அது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது.”

“எனக்கு நான்கு வயதாக இருக்கும் போது, என் அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் பல்வேறு நோய்களால் படுத்த படுக்கையாக இருந்தனர். சுரங்கங்களில் உள்ள கொடிய மைக்கா தூசியை சுவாசிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் சகோதரர்கள் நோயால் இறந்துவிட்டனர்.”

ஒரு சிறு பெருமூச்சுடன் கலெக்டர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீரை துடைத்தார்.

“பெரும்பாலான நாட்களில் எங்கள் உணவில் தண்ணீர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகள் தான். எனது சகோதரர்கள் இருவரும் கடுமையான நோய் மற்றும் பட்டினியால் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டனர். என் கிராமத்தில் பள்ளிக்கூடம் என்று ஒன்று இல்லை.

பள்ளிக்கூடம், மருத்துவமனை அல்லது கழிவறை கூட இல்லாத கிராமத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மின்சாரம் இல்லாவிட்டாலும்…?”

‘ஒரு நாள் நான் பசியுடன் இருந்தபோது, என் தந்தை என்னை, இரும்புத் தாள்களால் மூடப்பட்ட ஒரு பெரிய சுரங்கத்திற்கு இழுத்துச் சென்றார். அது புகழ்பெற்ற மைக்கா சுரங்கம். இது ஒரு பழங்கால சுரங்கம். கீழே உள்ள சிறிய குகைகள் வழியாக ஊர்ந்து சென்று மைக்கா தாதுக்களை சேகரிப்பது எனது வேலை. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. என் வாழ்நாளில் முதல்முறையாக ரொட்டி சாப்பிட்டு வயிறு நிரம்பினேன். ஆனால் அன்று நான் வாந்தி எடுத்தேன்.’

‘நான் ஒன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் நான் விஷ தூசியை சுவாசிக்கக்கூடிய இருட்டு அறைகளில் மைக்காவை முகர்ந்து கொண்டிருந்தேன்.’

‘ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்தால் ஒரு ரொட்டியாவது கிடைக்கும். பசி மற்றும் பட்டினியால் நான் ஒவ்வொரு நாளும் மெலிந்து நீரிழப்புடன் இருந்தேன். ஒரு வருடம் கழித்து என் சகோதரியும் சுரங்கத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சம் நல்லா வந்தவுடனே அப்பா, அம்மா, அக்கா மூவரும் சேர்ந்து உழைத்து பசியில்லாமல் வாழலாம் என்ற நிலைக்கு வந்தோம்.’

‘ஆனால் விதி வேறொரு வடிவில் நம்மை ஆட்கொள்ளத் தொடங்கியது. ஒரு நாள் கடும் காய்ச்சலால் வேலைக்குப் போகாமல் இருந்தபோது திடீரென மழை பெய்தது. சுரங்கத்தின் அடிவாரத்தில் தொழிலாளர்கள் முன்னிலையில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களில் என் அப்பா, அம்மா மற்றும் சகோதரி.’

அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது .

பார்வையாளர்கள் அனைவரும் மூச்சு விடக்கூட மறந்தனர். பலரது கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தது.

‘எனக்கு ஆறு வயதுதான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறுதியில் அரசு அகத்தி மந்திர்(அரசின் இலவசக் கல்விப் பாடசாலை) வந்தடைந்தேன். அங்கு நான் படித்தேன். என் கிராமத்தில் இருந்து முதலில் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டவள் நான். இறுதியாக இதோ உங்கள் முன் மாவட்ட ஆட்சியர்..’

‘இதற்கும் நான் மேக்கப் பயன்படுத்தாததற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.’

பார்வையாளர்களை பார்த்துக்கொண்டே அவர் தொடர்ந்தாள்.

‘அந்த நாட்களில் இருளில் ஊர்ந்து நான் சேகரித்த மைக்கா முழுவதையும் ஒப்பனை பொருட்களில் பயன்படுத்துவதை அப்போதுதான் உணர்ந்தேன். மைக்கா என்பது ஃப்ளோரசன்ட் சிலிக்கேட் (Fluorescent Silicates) கனிமத்தின் முதல் வகை’

‘பல பெரிய அழகுசாதன நிறுவனங்கள் வழங்கும் மினரல் மேக்கப்களில், 20,000 இளம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் பல வண்ண மைக்காக்கள் மிகவும் வண்ணமயமானவை. ரோஜாவின் மென்மை உங்கள் கன்னங்களில் பரவுகிறது, அவற்றின் எரிந்த கனவுகள், அவர்களின் சிதைந்த வாழ்க்கை மற்றும் பாறைகளுக்கு இடையில் நசுக்கப்பட்ட அவர்களின் சதை மற்றும் இரத்தம்.’

‘மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மைக்கா(Mica) இன்னும் சுரங்கங்களில் இருந்து குழந்தை கைகளால் எடுக்கப்படுகிறது. நம் அழகை அதிகரிக்க…?’

‘இப்போது நீங்கள் சொல்லுங்கள்.’

‘நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது?’

‘பட்டினியால் இறந்த என் சகோதரர்களின் நினைவாக நான் எப்படி வயிறு நிரம்ப சாப்பிட முடியும்?’

‘எப்பொழுதும் கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கும் என் அம்மாவின் நினைவாக நான் எப்படி விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிவது?’

வாய் திறக்காமல் தலையை உயர்த்தி, சிறு புன்னகையுடன் அவள் வெளியே சென்றபோது பார்வையாளர்கள் அனைவரும் அறியாமல் எழுந்து நின்றனர். அவர்கள் முகத்தில் இருந்த மேக்கப் அவர்கள் கண்களில் இருந்து வழியும் சூடான கண்ணீரில் நனைய ஆரம்பித்தது.

ஃபேஸ் பவுடர்(Face Powder), க்ரீம்(Cream), லிப்ஸ்டிக்(Lip Stick) நிறைந்த பெண்களைப் பார்த்து சிலர் வெறுப்படைந்தால் அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அதிக தரமான மைக்கா(Mica) இன்றும் ஜார்க்கண்டில் வெட்டப்படுகிறது.

20,000க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு வேலை செய்கின்றனர். சிலர் நிலச்சரிவாலும், சிலர் நோயாலும் புதையுண்டுள்ளனர்.

இங்கு இந் பெண் ஆட்சியாளரை இந்த பெண்கள் தினத்தில் சமூகத்தின் தலமைத்துவத் தயாக பெண்ணாக பார்கின்றேன்.

இனி…

2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வருகின்றது. தேர்தல்களை நடத்தி நிர்வாகங்களை ஏற்படுத்தி மக்களுக்கான சேவைகளை தொடரலாம் என்ற ஒரு ஜனநாயக இடைவெளி ஏற்படுகின்றது.

கொழும்பு மாநகர சபையிற்கு அடுத்தாக யாழ் மாநகரசபை அதிகம் கவனத்தை பெறும் மாநகர சபை. அதற்கான தேர்தல் நடைபெறுகின்றது. அதன் அடிப்படையில் யோகேஸ்வரி என்பவர் யாழ் மாநகர மேயராக தெரிவு செய்யப்பட்டு மாநகர சபை பதவிக்காலம் முடியும் வரை கிடைத்த உரிமைகளுக்கு அடிப்படையில் நிர்வாகத்தை செய்து முடிகின்றார்.

எம்மத்தியில் இருந்து உருவாகி சமூக முன்னேற்றத்திற்காக குடும்பத்திற்கு அப்பால் தன்னை நிரூபித்தவர் இவர்.

இவரது கால கட்டத்தில்தான் வடக்கு கிழக்கு என்று மூன்று பெண் ஜீ ஏ கள் யுத்தத்தினால் அழிவுற்ற பிரதேசங்களை மீள் கட்டுமானம் செய்வதில் தமது திறமைகளை நிரூபித்தும் இருந்தனர்.

இவ்விடயங்களுக்குள் இருக்கும் அரசியலுக்கு அப்பால் அவர்களின் செயற்பாடுகளைப் பாருங்கள். இந்த பெண் ஆளுமைகளை அவர்களின் தலமைப் பண்புகளைப் பாருங்கள். சமூக அககறையைப் பாருங்கள்.

அண்மையில் தமிழ் நாட்டில் நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல்களில் பெண்களுக்கு 50 வீதம் என்ற பிரநிதித்துவம் ஒதுக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலின் பின்பு மாநகரம், பேரூராட்சி, நகராட்சி என்று பல சபைகளின் தலைவர்களாக பெண்கள் தெரவு செய்யப்பட்டுள்ளனர்… நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பாக சென்னை மாநகரத்தின் மாநகர (மேயராக) தாயாக ஒரு பெண் அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரியா ராஜன் தெரிவாகியிருப்பது என்றாக நகர்ந்து செல்கின்றது.

உலகத்தில் பல நாடுகளின் பெண் தலைவர்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் விளையாட்டு வீராங்கனைகள் சதாரண உழைப்பாளிகள் என்று பல பெண்கள் இருந்தாலும் எமக்கு அருகில் இருக்கும் இந்த பெண் ஆளுமைகளை இவ்வருட பெண்கள் தினத்தில் ஒரு குறியீட்டுச் செயற்பாட்டாளராக எடுத்து…

பெண்களின் உரிமை சார்ந்த ஆளுமை சார்ந்த விடயங்களை இந்த பெண்கள் தினத்தில் பாராட்டி உள்வாங்கி ஆதரவு கொடுத்து முன்னெடுத்துச் செல்வோம்.