சொத்துக்குவிப்பு வழக்கும்… பன்னீரின் செழிப்பும்! ( பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை- பாகம் 2 )

பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி எப்பொழுதும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அதனால் சசிகலாவின் அக்கா மகன் தினகரனை கட்சிக்கு கொண்டு வந்து 1999 ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைத்தார் சசிகலா. முதலில் தினகரனை எதிர்த்து திமுக சார்பில் கம்பம் செல்வேந்திரன் போட்டியிட்டார். அப்போது பன்னீர் பெரியகுளம் நகராட்சி சேர்மன். அவர் செல்வேந்திரனின் மூலம் கட்சிக்கு வந்தவர் என்பதால் அவருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்று பயந்த சசிகலா முதலில் தேர்தல் வேலைகளை பன்னீருக்கு கொடுக்க தயங்கினார்.

அவரின் சந்தேகத்தை அறிந்த பன்னீர் கடன் வாங்கி தினகரனுக்கு தேர்தல் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் வேலைகள் தொடர்பான கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் தினகரன் முன்பு உட்காரமல் நின்று கொண்டே இருப்பாராம். தினகரனின் மனதையும் அந்த பணிவை வைத்தே கரைத்தார். ஆமாம்… பன்னீரின் பணிவில் தினகரன் திக்குமுக்காடிப்போனார்.

தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். பன்னீரும் தினகரனின் தீவிர ஆதரவளாராக மாறினார். தேனி நகரில் எம்.பி அலுவலகம் போட்ட தினகரனுக்கும் வழக்கம்போல மீன் குழம்பும் நாட்டுக்கோழி குழம்பும் பார்சல் அனுப்ப தொடங்கினார். அதுமட்டுமின்றி தினகரனை எல்லாவகையிலும் கவனித்துக்கொண்டார். அதன் பிறகு பன்னீர் இல்லாமல் தினகரனுக்கு தினசரி விடியாது என்றாக மாறியது. பிறகு பன்னீர் செய்த முதல் வேலை தினகரனின் எம்.பி அலுவலகத்தை பெரியகுளத்தில் தன் வீட்டின் அருகே அவரின் முதல் வெற்றி.

பன்னீரின் அரசியல் பயணம் ஆரம்பம்

பெரியகுளத்துக்கு தினகரன் போன அந்த தினம்தான் அதிமுகவில் பன்னீரின் வெற்றிப்பயணம் தொடங்கியது எனலாம். பன்னீரும் அவரின் தம்பி ராஜாவும் தினகரனை தங்கள் பணிவாலும் அன்பாலும் குளிப்பாட்டினார்கள். தினகரனால் அவர்களை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. இதற்கு இடையில் 2001 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் வந்தது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடமுடியவில்லை. அப்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு பன்னீரின் பெயரை தினகரன் பரிந்துரை செய்தார். பன்னீரின் சதுரங்க வேட்டை ஆரம்பமானது.

அப்போது திமுக வேட்பாளர் அபுதாஹிர். அவரை பன்னீர் செமையாக கவனிக்க, தேர்தல் பணிகளில் திமுக பக்கம் சுணக்கம். பன்னீர் எளிதாக வென்றார். தேர்தல் முடிவு வந்த அடுத்தநாளே அபுதாஹீர் அதிமுகவில் இணைந்து கொண்டார். இன்றும் அந்த அபுதாஹிர்தான் பன்னீரின் நிழல். பன்னீரின் ப்ராப்பர்ட்டியை இவர்தான் நிர்வாகம் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் யார் முதல்வர் என்று தமிழகமே திகைத்து நின்றபோது பன்னீரை சசிகலாவிடம் அழைத்துச்செல்கிறார் தினகரன். சசியிடமும் பன்னீர் அதே பணிவுகாட்ட அவரும் ‘வாட் ய மேன்’ என அசந்துபோனார். பிறகு நிறைய விஷயங்கள் பேசப்பட்டது. ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அன்று பத்தடி தள்ளி நின்று சாஷ்டாங்கமாக ஜெயாவின் காலில் விழுந்த பன்னீரின் பணிபு அப்ரோச் ஜெயலலிதாவுக்கு பிடித்துபோனது. அன்று குனிந்த பன்னீர் இதுவரை நிமிரவே இல்லை. அப்படிப்பட்ட பன்னீரா தனக்கு எதிராக அணி திரட்டினார் என்பதைத்தான் ஜெயாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

‘அவ்வளவும் நடிப்பா கோப்பால்’ என்ற அந்த மொமன்ட்தான் ஜெயாவின் உச்சபச்ச கோபம். அந்த கோபம்தான் பன்னீரை இன்று தலைமறைவாக சுற்ற வைத்தது.

2001 செப்டம்பரில் பன்னீர் முதல்முறையாக முதல்வரானார். ஆனால் முதல்வருக்கான கார், நாற்காலி… என அனைத்தையும் தவிர்த்துவிட்டு பன்னீருக்கு என்று எல்லாமே தனித்தனியாக கொண்டு வரப்பட்டது.

‘ச்சே… இவ்வளவு தன்மையான ஒரு மனிதரா? ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு விசுவாசியா?’ என்று தமிழகமே வியந்தது. ‘அதிகாரம், ஆடம்பரத்தை பன்னீர்தான் பவ்வியமாக ஒதுக்கினார்’ என்று தமிழகம் நினைத்தாலும் உண்மை அதுவல்ல. பன்னீர் என்ன சாப்பிடணும், எப்படி பேசணும், என்ன மாதிரி ஆடை அணியணும், எப்படி உட்கார வேண்டும்… என அனைத்தும் சசிகலா, தினகரன் அணியால் முடிவுசெய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டார். பன்னீரின் குடும்பத்தில் இருந்து யார் சென்னைக்கு வந்தாலும் கண்காணிக்கப்பட்டார்கள். அதனால் தனது உறவினர் யாரையும் தனது பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவே தயங்கினார் பன்னீர்.

ஆறுமாதகாலம் முதல்வராக இருந்தார் பன்னீர். அந்த ஆறு மாத காலத்தில் ஏகப்பட்ட நெருக்கடிகளை சந்தித்தார். ஆனால் அது குறித்து அவர் யாரிடமும் வாயை திறக்கவே இல்லை. இதனால் மேலிடம் பன்னீரின் விசுவாசத்தை நம்பியது. அதன் பரிசாக பன்னீருக்கு பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை என்று பத்துத் துறைகள் கொடுக்கப்பட்டன.

அப்போது பன்னீரின் பணிவு பலருக்கு வசதியாகிவிட்டது. அதைப் பயன்படுத்தி கோடி கோடியாய் ஒதுக்க ஆரம்பித்தனர். அப்படி சம்பாதித்த பணத்தை வைத்து அவர்கள் லண்டன், மலேசியாவில் சொத்துக்களாக மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.

நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயும் என்பதுபோல அவர்களின் காட்டில் அடைமழை என்றால் பன்னீரின் காட்டிலும் தூறல்கள் கூடவா விழாமல் இருக்கும். அந்தத் தூறல்களை எப்படி சேகரிப்பது என்று தவித்தபோதுதான் பன்னீரின் உறவுகள் பலர், அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் என்ற பெயரில் உள்ளே வந்தனர்.

தனது மூத்த மகன் ரவீந்திரநாத் குமாருக்கு, ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கந்தசாமி வீட்டில் சம்பந்தம் செய்தார். மகளை கோவில்பட்டியில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்த செல்லப்பாண்டியன் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்கள் மூலம் பன்னீருக்கு பெரும் உறவு பலம் கிடைத்தது.

சொத்துக்குவிப்பு வழக்கும் – பன்னீரின் செழிப்பும்

பன்னீர் செல்வம் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை முதல்வர், பிறகு அமைச்சர்… என இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெரியகுளம் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு மதுரைக்கு மாறி பிறகு சிவகங்கைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் பெங்களூரூவில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நோக்கி நகர்ந்தது. இதற்கு இடையில் பன்னீரின் மேல் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் அடிஷனல் அட்வகேட் ஜெனரலாக இருக்கும் பன்னீரின் சம்பந்தி செல்லப்பாண்டியன் மூலம் கடுமையாக ‘வாதாடி’னார். அந்த வழக்கில் இருந்து பன்னீர் விடுதலையானார்.

அதன் பிறகு பன்னீருக்கு நெருக்கமான வக்கீல்கள் இரண்டு நபர்கள், தினசரி பெங்களூருவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தன்மையை நோட்டமிட்டனர். அதன்பிறகு அந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்தும் அப்பாவியான பன்னீர் மீண்டும் அடேங்கப்பா முதல்வரானார்.

அரியணை ஏறியதும் ஆட்டம்

சொத்துக்குவிப்பு வழக்கில், 2014 செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதாவை அடைத்ததும், தமிழகமே திக்கு முக்காடிப்போனது. பெரும்பாலான உயர் அதிகாரிகள், அனைத்து துறைகளின் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என்று அனைவரும் பெங்களூருவில் முகாமிட்டனர். மாலை ஆறு மணிக்கெல்லாம் சிறைச்சாலையின் வாசலில் ஜெயலலிதாவை சிறையில் அடைத்த சோகத்தில் கதறி அழுது கொண்டே இருந்தனர். அந்த இரவில் அடுத்த முதல்வர் யார் என்கிற பேச்சு வந்த பொழுது ஜெயலலிதா மட்டும் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து இருந்தார். அது மீண்டும் பன்னீரை முதல்வராக ஆக வேண்டும் என்று. ஆனால் அந்த முடிவில் சசிகலாவுக்கு விருப்பம் இல்லை.

அதற்கு இடைப்பட்ட நேரத்தில், அந்த இரவில், பன்னீர்செல்வம் பெங்களூருவில் இருந்த அவரது அறையில் விடியும்வரை தூங்கவே இல்லை. ஏனெனில் பன்னீருடன் போட்டியில் கரூர் செந்தில்பாலாஜி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் என்று லிஸ்ட் இருந்தது. இதற்கிடையில் பன்னீர் செல்வத்தினை மீண்டும் முதல்வராக ஆக்கியதில் சசிகலாவின் குரூப்பில் இருந்தே ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ஜெயலலிதாவால், ஏகமனதாக பன்னீர் தேர்வானார். கடந்த முறை பன்னீர் முதல்வராக இருந்தபொழுது ஒதுங்கி இருந்த அவரின் சொந்தங்கள் இந்த முறை அனைவரும் சென்னையை நோக்கி நகர்ந்தனர். பல்வேறு அதிகார மையங்களாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

மணல் ராஜா

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மணல் குவாரிகள் தமிழகம் முழுவதும் உள்ளன. கொள்ளிடம், பாலாறு, காவேரி என்று 10க்கும் மேற்பட்ட ஆறுகளில் அளவுக்கு மீறிய மணல்களை அள்ளி கர்நாடகா, கேரளா என்று பக்கத்து மாநிலங்களுக்கு ‘பேக்’ செய்து அனுப்பியவர்கள் நாளடைவில் கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் துறைமுகம் வழியாக ஆற்று மணலை அள்ளி அனுப்பினார்கள். பன்னீரின் நெருங்கிய உறவுதான் அதை மேற்பார்வையிட்டது. மணல் கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த மணல் விவகாரம், வில்லங்க நிலம், கொடுக்கல் வாங்கல், பணியிட மாற்றம், அரசு வேலை வாங்கித் தருவது என்று சென்னையில் தனியாக கோலாச்சியது அந்த நெருங்கிய உறவு. சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணியிட மாற்றம் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கான நபர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் தராமல் இழுத்தடித்தது… என பன்னீரின் ‘உறவு’ மீது ஏகப்பட்ட புகார். அவருக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையம் எதிரே உள்ள சிங்கப்பூர் ஹோட்டலில் நிரந்தர அறை உண்டு. அங்கு உட்கார்ந்து தனிக்காட்டு ராஜாவா வலம் வந்து கொண்டு இருந்தார். இது போக பெரியகுளம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல், சாலைகள் போடாமலே போட்டதாக கணக்கு எழுதியது, கண்மாய்களை தூர் வாரியதாக கணக்கு எழுதியது என்று எல்லாமே அந்த உறவின் அதிகார துஷ்பிரயோகம்தான் என்கிறார்கள்.

சினிமாவும் ரவீந்திரநாத்தும்

பன்னீரின் மூத்தமகன் ரவீந்திரநாத்துக்கு சினிமா மீது அதிக ஆர்வம். சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறார். படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமம் வாங்கியும் வெளியிடுகிறார். தவிர முக்கியமான திரையரங்குகளை வாங்கி அதை புதுப்பிக்கவும் செய்கிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு போவதுபோல மும்பைக்கு போனவரை உளவுத்துறை விசாரித்தபோது, மும்பையில் அவர் தனியாக சில தொழில்கள் செய்வதும் மலேசியா, சிங்கப்பூரில்…ஹோட்டல்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் முதலீடு செய்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

தவிர ஒரு சொத்தை வாங்கினால் அதை ரிஜிஸ்டர் பண்ணாமல் அப்படியே ஈடு கடனாக வேறு ஒருவரின் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு, கடன் வாங்கியது போல கணக்கு காட்டி அந்த சொத்தின் உரிமையாளர்களை வைத்தே அந்த சொத்துக்களை கவனித்து வரச்சொல்லி அதில் வரும் லாபங்களை மட்டும் வாங்கிக்கொள்வாராம். யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் இந்த ரூட்டில்தான் ரவீந்திரன் சொத்துக்களை வாங்கியதாக சொல்கிறார்கள்.

பினாமி சுனாமிகள்

தேனியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் மூவரணிதான் முக்கியமான பினாமிகள். ஐந்து ஆண்டுகளில் 7000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை வேலைகள் அனைத்தும் இவர்கள்தான் பார்த்தது வந்தனர். இன்டர்நேஷனல் பள்ளியும் நடத்தி வருகிறார்கள். அடுத்து அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒருவரும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறையில் நடக்கும் ஒப்பந்தங்களை அதிகமாக எடுத்து வேலை செய்தார்.

இதேபோல பி.ஆர்.பிக்கு நெருக்கமானவர்களுடனும் பன்னீர் நெருக்கம் காட்டினார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அடுத்து இவருக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர் ஒருவர் 800 கோடிகளுக்கு மேல் கேரளாவில் ஏலக்காய் எஸ்டேட் வாங்கி இருக்கிறார். அந்த பைல்கள் அனைத்தும் கார்டனுக்கு போய் இருக்கிறது. ஏற்கெனவே நாம் பார்த்த அபுதாஹிர் என்பவரின் மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவரின் மூலம் அங்கு முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அபுதாஹிருக்கு நெருக்கமானவர்கள் பலரும் ஊட்டியைச் சேர்ந்தவர்கள். அங்கு சில சொத்துக்கள் கைமாறி இருக்கின்றன. மூணாறில் டீ எஸ்டேட்கள் வாங்கப்பட்டுள்ளதற்கு பின்னால் இவர் உள்ளதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இப்படி 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு பன்னீரின் வளர்ச்சி கிடுகிடுவென இருந்தது. அவரின் உறவினர்கள், நண்பர்கள் பலர் ஏற்றம் பெற்றனர். இவை அனைத்தும் அரசல் புரசலாக கார்டனுக்கு அவ்வப்போது உளவுத்துறையின் மூலம் அறிக்கைகளாக வரும். ‘நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பாயத்தானே செய்யும்’ என்று அமைதியாக கவனித்து வந்தது கார்டன். ஆனால் தலைமைதான் பணிவின் டார்கெட் என்று தெரியவந்தபோதுதான் கார்டன் விழித்துக்கொண்டது. அதன்பிறகு பன்னீர் ஓரங்கட்டப்பட்டது, சோதனைகள், விசாரணைகள், ஜெயலலிதாவை சந்தித்து ஒப்புதல் வாக்குமூலம் வாசித்தது என அனைத்தும் ஊர் அறிந்தது.

ஜெயலலிதா-பன்னீரின் இந்த ஆடுபுலி ஆட்டத்தை பின்னால் இருந்து இயக்கும் சசிகலாவோ கோவில்கோவிலாக தனக்கும் இந்த சம்பவங்களுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் பக்திப்பயணம் போய்க்கொண்டு இருக்கிறார்.

(Vikatan)