தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்

முழு மேற்குலகும், தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கிறது என்று, கடந்த பத்தாண்டுகளாக எமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மேற்குலகு இதுவரை தமிழ் மக்கள்தொடர்பில், எவ்வாறு நடந்து வந்துள்ளது? குறிப்பாக, 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், என்று விசாரித்தால், இந்தப் புளுகுகள் ஊசிமுனை பட்ட சவர்க்காரக் குமிழ் போல்ச் சிதறிவிடும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து, மக்களிடையே நல்லெண்ணத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தவோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவோ வேண்டி, ஜெனீவாத் தீர்மானத்துக்குப் பின்னிருந்து, அமெரிக்கா முழு மூச்சாகச் செயற்படவில்லை. இது இப்போதாவது விளங்க வேண்டும்.

தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரவே, ஜெனீவா அரங்கேறுகிறது என்று நம்புவோர்களின் அறியாமையை விட, நம்பச் சொல்வோரின் அயோக்கியத்தனம் ஆபத்தானது.

தமிழ்த் தேசியவாதம், இன்னமும் தன்னுடைய பழைய சுவடுகளிலேயே தொடருகிறது; கட்சிகள் வேறானாலும் கொள்கைகள் வேறென்று சொல்லப்பட்டாலும் தலைவர்கள் வேளைக்கொன்று பேசினாலும், அடிப்படையில் ஒரு மாற்றமும் இல்லாமல், ஒரு பழைமைவாத, இந்திய, மேற்குலக விசுவாசம் கொண்ட, குறுகிய தேசியப் பார்வையிலிருந்து விடுபட இயலாமல் அது திணறுகிறது.

அதன் இருப்பை, இயலுமாக்குகிற சிங்களப் பேரினவாதத்தின் வர்க்க அடிப்படை என்ன என்றோ, அதற்கு ஆதாரமாக இருப்பது எது என்றோ, பழைமைவாதத் தமிழ்த் தேசியவாதிகள் கவனிக்க ஆயத்தமாக இல்லை.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை, பேரினவாதம் இன்று திட்டவட்டமாக மறுக்கிறது. தமிழரின் அடையாளம், இந்த நாட்டுக்குரியதல்ல என்று சொல்லுமளவுக்குப் பேரினவாதம் போயுள்ளது.

கல்வித்துறை முதற் கொண்டு, பல்வேறு ஊடகங்கள் மூலமும் தொல்லியல் ஆய்வுகள் என்ற பேரிலும் தமிழர்கள், அந்நியர்கள்; அவர்கள் இந்த மண்ணுக்குரியவர்கள் அல்ல என்ற சிந்தனை, சிங்கள மக்கள் மத்தியில் வலுவூட்டப்பட்டு வருகிறது.

அதை எதிர்கொள்வதற்கான ஆர்வமோ, ஆற்றலோ, அக்கறையோ கூடத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளிடம் போதியளவில் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்த் தலைமைகள், இன விடுதலையைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், அது முழுச் சமூகத்தினதும் விடுதலையைப் பற்றியதாக இருந்ததில்லை.

உண்மையில், தமிழ்ச் சமூகத்துக்குள் இருந்து வரும் பல சமூகக் கொடுமைகளையும் அநீதிகளையும் பற்றிப் பேசுவது, தமிழரின் ஒற்றுமைக்குக் கேடானது என்று தான் நமக்குச் சொல்லப்பட்டு வந்துள்ளது.

தமிழ் மக்களின் ஒன்றுமையைப் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால், தமிழ் மக்கள் நடுவே பண்பாட்டின் பேராலும் மரபின் பேராலும் பெண்கள் மீதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதும் ஆதிக்கமும் அடக்குமுறையும் தொடருகின்றன. அவற்றைப் பற்றிப் பேசுவற்குத் தடை விதிப்பதன் மூலமும் அவை இல்லாமல்ப் போய்விட மாட்டாது.

வட்டுக்கோட்டை முதல் முள்ளிவாய்க்கால் வரையான வரலாற்றை மனந்திறந்து பேசுவதற்கு, எல்லாத் தமிழ்த் தேசியவாதிகளும் அஞ்சுகின்றனர். அவ்வாறு பேசுவது, தமிழ்த் தேசியவாத அரசியலின் எழுபதாண்டு வெறுமையை அம்பலப்படுத்துமென அவர்கள் அறிவார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தேடும் ஆற்றலின்மையை, மக்களிடமிருந்து மறைக்கவும் தமிழ் மக்களின் அரசியலைத் தமது குறுகிய வரையறைகளுக்குள் கட்டுப்படுத்தவும் நாடகமாடுகிறார்கள். அதன் பகுதிகளே ‘நல்லாட்சிக்கு ஆதரவு’, ‘ஜெனீவா மீதான நம்பிக்கைகள்’ ஆகும்.

பாதீட்டுக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்துள்ளது. இதற்கான அடிப்படை என்ன? நல்லாட்சியின் நான்கு ஆண்டுகளில் சொல்லும்படியான மாற்றம், தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ளதா?

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? அதற்காகப் பயன்தரத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவா? தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டுள்ளதா?

விலைவாசி உயர்வு, நேற்றைய எண்ணெய் விலை உயர்வு போன்ற விடயங்கள், தமிழ் மக்களை மட்டுமன்றி இலங்கையின் உழைக்கும் மக்கள் அனைவரையும் பாதிக்கின்றது.

இவை குறித்துத் தமிழ்ப் பிரதிநிதிகளின் மௌனம் எதைச் சொல்கிறது? அவர்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்?

தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள் உள்ளன. அவை தொடர்ந்தும் அச்சமின்றியும் கேட்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால், இன்னமும் எத்தனை காலத்துக்கு ஏமாற்றப்படப் போகிறோம் என்பதைத் தமிழ் மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

இன்று தலைமுறைகள் தாண்டியும் ஓடுக்கப்படும் சமூகமாகத் தமிழ் மக்கள் இருப்பதற்குப் பதில் கூறவேண்டியவர்கள் யார்?

எமது, எதிர்காலச் சந்ததிக்காகவாவது கேள்வி கேட்கும் விமர்சிக்கும், விமர்சனத்தை ஏற்கும் சமூகமாக நாம் மாற வேண்டும். அது நிகழாவிடின், தமிழ் மக்களின் விடிவு என்றென்றைக்கும் சாத்தியமானதல்ல;
கேள்விகளில் தொடங்குவோம்.

(Tamil Mirror)