யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முடக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் வகையில், இன்றுத் திங்கட்கிழமை (31) பல்கலைக்கழகத்தின் வாயில் கதவுக்கு பூட்டுப் போட்டு, எவரையும் உள்ளே செல்லாதவாறு மாணவர்கள் தடைவிதித்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக ஊழியர்கள் எவரும் உட்செல்ல முடியாமல் வாயில் கதவில் நிற்கின்றனர்.

கடந்த 21ஆம் திகதி அதிகாலை கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

இவர்களின் மரணத்துக்கு நீதி வேண்டியே மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முடக்கும் நடவடிக்கையைச் செய்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்றப் பின்னர், அனைத்துப் பீடங்களின் கல்வி சார் செயற்பாடுகளை மாணவர்கள் பகிஸ்கரிப்புச் செய்திருந்தனர்.

எனினும், கல்விசார ஊழியர்கள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இன்றுத் திங்கட்கிழமை முதல் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் வகையில், பல்கலைக்கழக நுழைவாயில் கதவுகள் இரண்டையும் மாணவர்கள் பூட்டுப் போட்டு பூட்டியுள்ளனர்.