இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அரசியல் தஞ்சம் பெற்று வாழும் வரதர் இந்திய படைகளுடன் கப்பலேறிய பின்னர் இதற்கு முன்னரும் சில தடவைகள் இலங்கை வந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவு முக்கியத்துவத்தை தமிழ்த்தேசிய அரசியலும், ஊடகங்களும் அவருக்கு வழங்கவில்லை. அப்படியானால் இப்போது மட்டும் ஏன்? இதன் பின்னணி என்ன?
திடீரென்று கடந்த சில தினங்களாக மாகாணசபை தேர்தல் ‘மந்திரம் ‘ கொழும்பு அரசியலிலும், தமிழ்த்தேசிய அரசியலிலும் சற்று சத்தமாக ஓதப்படுகிறது.
வரதராஜப்பெருமாளின் மீள் வருகை ஒரு தற்செயல் நிகழ்வல்ல. காலக்கணக்கு பார்த்து நகர்த்தப்படுகின்ற ஒரு காய்நகர்வு. இலங்கையின் இன்றைய தேசிய, பூகோள அரசியல் சூழலில் இந்த அனைத்து தமிழ்த்தரப்பு அரசியலும் புதுடெல்கியின் நிகழ்சி நிரலின் அடிப்படையில் இயக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் வலுக்கிறது.
1. 2023 இல் அன்றைய யாழ்ப்பாண தமிழரசு எம்.பி. சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்பித்த தனிநபர் பிரேரணை கிடப்பில் கிடக்கின்ற நிலையில் தற்போது, இ.சாணக்கியன் எம்.பி. இந்த தனிநபர் பிரேரணையை தனது பெயரில் மீண்டும் சமர்ப்பித்துள்ளார்.
2. என்.பி.பி. அரசாங்க பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை சபைகள் அமைச்சர், மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
3. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இலங்கை வந்து அவரின் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். சகா சுரேஷ் பிரேமச்சந்திரனை சந்தித்திருக்கிறார்.
4. தமிழ்த்தேசிய கட்சிகள் பலவும் மாகாணசபை தேர்தலை விரைவில் நடாத்தவேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை கோரியுள்ளன.
5. செம்மணி தோண்டப்படுகிறது, புலிகளின் குருக்கள் மடம் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தை கோரியிருக்கிறது. புலிகளின் மற்றைய கொலைகளும் பேசப்படுகின்றன.
6. அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழரசு, முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த உறவு கிழக்குமாகாண சபையை இணைந்து கைப்பற்றுவதற்கான நகர்வு என்று கூறப்படுகிறது.
7. செப்டம்பரில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், சர்வதேச விசாரணை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன மீண்டும் பேசப்படும்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வடக்குக்கு சென்ற எல்லா பிரதான வேட்பாளர்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு தீர்வை ‘பிடி கொடுக்காமல்’ விற்பனை செய்தனர்.
அநுரகுமார திசாநாயக்க தாங்கள் மாகாணசபைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அது இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்றாலும் அரசியல் அமைப்பு மாற்றம் செய்யப்படும்வரை இருக்கின்ற மாகாணசபைக்கு தேர்தல் நடாத்தப்பட்டு அவை இயங்க வழிசமைக்கப்படும் என்று கூறினார்.
ஆனால் இப்போது அநுரவின் அமைச்சர் புதிய புரளியை கிளப்பி எல்லை நிர்ணயம் பற்றி பூச்சுற்றுகிறார்.
வரதராஜப்பெருமாளின் வருகையும், தமிழ்த்தேசிய கட்சிகளின் நகர்வும், ஜெனிவாவில் இலங்கைக்கு இந்திய அணியின் ஆதரவு தேவைப்படுவதும் அதிகாரப்பகிர்வு கோரிக்கையை முன்னெடுப்பதற்கான சரியான காலம் என்பதை இந்தியா கணக்கு பார்த்து வரதராஜப்பெருமாளுக்கு ஊடாக காயை நகர்த்துகிறது.
ஒரு வகையில் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் மாகாணசபை தேர்தலுக்கான ஒரு திகதியை அல்லது வாக்குறுதியை அநுர அரசிடம் இருந்து பெறுவதற்கு இது பொருத்தமான காலம் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அநுர அரசாங்கம் இந்த அழுத்தத்தை சீன அணியைக் கொண்டு எவ்வாறு சமாளிக்கப்போகிது என்பதும் மற்றொரு கேள்வியாகும்.
கொழும்பை இந்தியப் பக்கம் தள்ளுவதா? சீனப் பக்கம் தள்ளுவதா? என்பதை தீர்மானிக்கும் பந்து அமெரிக்காவிடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் இருக்கிறது. அதேவேளை கொழும்பு வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் “மூன்றாவது” தரப்புக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்பி சகா விஜயஹேரத்துடன் கை குலுயிருக்கிறார்.
” ….இறுதித் தீர்வுக்கான முயற்சி ஒரு புறம் நடக்கட்டும்.அது சமஷ்டியா? அல்லது அதற்கும் மேலானதா? எல்லாத் தமிழ்த்தரப்பும் செயற்படட்டும். ஆனால் அதற்கிடையில் இருக்கின்ற மாகாணசபை முறைமையை முழு அளவில் நடைமுறைப்படுத்தச் செய்வதற்கான ஒரு சமாந்தர முயற்சியே இது……”. வரதராஜப் பெருமாளின் வருகைக்கான காரணத்தையும், அதன் பின்னணியையும் தெளிவாக விளங்கிக்கொள்ள அரசியல் அகராதி எதுவும் மேலதிகமாகத் தேவையில்லை.
உண்மையில் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாகாணசபைக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது இல்லை. அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் படிப்படியாக கொழும்பால் மீளப்பெறப்பட்டு விட்டன.
இன்னும் காலம் கடத்தினால் “கோவணத்தையும்” இழந்த கதைதான் என்பதை வரதர் சொல்லாமல் சொல்லியுள்ளார். முதலில் இருக்கின்ற அடித்தளம் காப்பாற்றப்படவேண்டும். அதற்கு மேல் கட்டி எழுப்புவதெல்லாம் பிறகு பார்க்கலாம் என்பது வரதர் வாதம்.
சரிதான். ஈழப்பிரகடனம் செய்து அதில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாகவும், சுயவிமர்சனமாகவும், குற்ற உணர்வாகவும் இவை இருக்கமுடியும்.
ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் சகா சுரேஷ்பிரேமச்சந்திரனைச் சந்தித்தபோது வரதருக்கு சுரேஷ் அளித்த பதில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததாக இருப்பது அரசியல் வேடிக்கை.
“….. ஏற்கனவே ஈ.பி.ஆர்.எல்.எப். இன் வேலைத்திட்டத்திற்குள் இந்த விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருப்பதாக..” சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு போடு போட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டு திண்ணையில் படுத்து தூங்கியபோது சமஷ்டிக்கு வேட்டியை மடித்துக்கட்டியவர், சிவாஜிலிங்கம் அணியில் இன்னும் தீவிரமாக பேசியவர் இப்போது ‘வேலைத்திட்டம் ‘ பற்றி வரதருக்கு வகுப்பெடுத்துள்ளார்.
கதிரைகளுக்காக சேர்வதும், பிரிவதும் அறிக்கை விடுவதுமாக 2009 க்கு பின்னர் அரசியல் செய்த ஈ.பி.ஆர்.எல்.எப். அதற்கு முன்னர் புலிகளின் அரசியலையே நியாயப்படுத்தியது, கோரிக்கையாக்கியது. இப்போது வேலைத்திட்டமாம்…வேலைத்திட்டம்.
தமிழ்த்தேசிய பாராளுமன்ற சக்திகளை ஒன்றிணைப்பதில் தனக்கு இருக்கக்கூடிய பெரிய தடை தமிழரசும், தமிழ்க் காங்கிரஸும் என்பதை வரதர் அடையாளம் கண்டுள்ளார்.
அதனால்தான் தான் அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை என்ற முன் நிபந்தனையை தனக்கு தானே அவர் விதித்துள்ளார். இதன் மூலம் தமிழ்த்தேசிய ‘கதிரைகள் ‘ தன் மீது அலர்ட்டாக மாட்டார்கள் என்று வரதர் நம்புகிறார்.
ஆனால் வரதராஜப் பெருமாளின் இந்த முயற்சிக்கு அவரின் கடந்த கால அரசியல் ஒரு தடையாக அமையாது என்று அடித்துச்சொல்ல முடியாது. இது அவரின் முயற்சி மீதான மிகப்பெரிய பலவீனமாகவும், நம்பிக்கையீனமாகவும் அமையும்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தாலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் குறுந்தமிழ்த்தேசிய தீவிர வாதத்தாலும் அவர் மிக விரைவாக ‘இந்திய கைக்கூலியாக’ அடையாளப்படுத்தப்பட அதிககாலம் பிடிக்காது.
அது மட்டுமின்றி வரதரின் பயணத்தில் குறுக்கே கட்டை போடக்கூடியவர்கள் கஜேந்திரகுமாரும், சுமந்திரனும்.
‘ஒரு நாடு இரு தேசம்’ கஜேந்திரகுமார் மாகாணசபை தேர்தல் நடந்தால் போட்டியிடுவோம் ஆனால் இப்போதைக்கு அவசியமில்லை என்று நழுவலாம்.
சுமந்திரன் பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களுக்கு இதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்கவில்லை. எனவே அதிகாரப்பகிர்வு வடிவத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்று சட்டவாதம் செய்யலாம்.
இவர்கள் இருவரது அணுகுமுறையும் ஒனறில் ஒன்று தங்கியிருக்கும் சதுரங்கம் என்பதால் வரதருக்கு பெரும் சவாலாக அமைய வாய்ப்புண்டு. வழிக்கு கொண்டு வரவேண்டியது இந்தியாவின் பொறுப்பு.
“இருப்பதை பலப்படுத்தும்” என்ற முக்கிய இலக்கில் அதிகாரப்பரகிர்வை நோக்கி நகர்வதே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இன்றிருக்கின்ற ஒரேவழி. வடக்கு -கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்பன எல்லாம் வெறும் மண்குதிரைகள் . ஆனால் கஜேந்திரகுமார் குமார் இந்த மண்குதிரையில் ஏறினால் அதற்கு போட்டியாக சுமந்திரனும் ஏறமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவர்களின் கடந்த கால கதிரை அரசியல் இதையே தமிழ்த்தேசிய அரசியில் மீதப்படுத்தி இருக்கிறது.
இறுதியாக ஒரு விடயம். இது சமூக ஊடகங்களில் வெளியானது. இதைப்பதிவிட்டவர் வரதர் – சுரேஷ் சந்திப்பில் பங்குபற்றிய நடராஜா கமலாகரன்.
“அன்று தோழர் நாபாவோடு தோழர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசையும் அது திறம்படச் செயற்பட்டதையும் நான் அதில் உறுப்பினராக இருந்து மக்கள் பணிபுரிந்ததையும் மறந்திடவும் கூடுமோ?”
நாபாவை துணைக்கழைப்பது உங்கள் கதிரை அரசியலால் அவரை அவமதிப்பது.
ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். மாகாணசபை ஆட்சியில் உங்கள் “மக்கள் பணி”யை வடக்கு கிழக்கு மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் ஒன்றும் ஞாபகமறதி நோயாளர்கள் அல்ல.
இவ்வாறான புனைவுகளின் மூலம் மக்களோடு விளையாடாதும், வரதரின் முயற்சிக்கு குறுக்கே நீங்களே தடையைப் போடாமல் சும்மா இருப்பதே சுகம்.
நீங்கள் நினைப்பது போன்று தமிழ், முஸ்லீம் மக்கள் உங்களை எப்படி மறந்திட முடியும்? மாகாணசபை வரதர் ஆட்சியின் வண்டவாளங்களையும், அந்த அடாவடித்தன அரசியல் பயணித்த தண்டவாளங்களையும் மக்கள் மறக்க அவர்கள் நீங்கள் கப்பலேறிய பின்னரும், 2009 பின்னரும் பிறந்தவர்கள் அல்ல.
மாகாணசபை சபை மூலமாக அதிகாரப்பகிர்வு அடிப்படை கட்டமைப்பை தக்க வைக்க அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். புலிகளுக்கு பின்னால் போன அனைவரும் செய்ய வேண்டிய பிராயச்சித்தம்.