கிழக்கு மக்களின் அங்கீகாரமின்றி வடக்குடன் கிழக்கை இணைக்கக் கூடாது!

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடையமாக தமிழர் பேரவை பேசிக்கொண்டிருக்கிறது. கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் கிழக்கு மாகாண மக்களின் அங்கீகாரமின்றி வடக்குக் கிழக்கு இணைக்கக் கூடாது என்பதை புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன் மொழிய வேண்டும் என பேராசிரியர் டொக்டர் எம்.ஏ.எம்.சித்தீக் தெரிவித்தார். கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்துக்குமான சபை ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் “உத்தேச அரசில் யாப்பும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிமை (14-02-2016) காலை தொடக்கம் மாலை வரை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துவத்துக்குமான சபையின் தலைவர் டொக்டர் ஏ.எல்.எம்.நஸீரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பேராசிரியர் டொக்டர் எம்.ஏ.சித்தீக் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, தமிழர் பேரவையின் வரைவிலே அவர்கள் முஸ்லிம்களை அரசில் குழும்மங்களாகக் கணித்து முஸ்லிம்கள் முன்வைக்கின்ற ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு கலந்தாலோசிக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருக்கின்ற ஒற்றுமையின்மை மிகவும் வெட்கப்படக் கூடிய ஒன்றாக இருப்பதைக் காண்கின்றோம்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே இருக்கின்ற பிரதேசவாதம் எங்களுக்கு மிகவும் இழிவான நிலையை ஏற்படுத்தும் என நினைக்கின்றேன். காரணம் கல்முனை மாநகர சபை விடையத்தில் கூட சாய்ந்தமருது பிரிந்து போகவேண்டும் மருதமுனை பிரிந்து போகவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இது ஆரோக்கியமான விடையமல்ல. தமிழ் மக்களிடம் வடக்குத் தமிழர், கிழக்குத் தமிழர் என்ற பிரிவினை இருந்தாலும் வடக்குக் கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதில் அவர்கள் ஒற்றுமைப்பட்டு உறுதியாக இருக்கின்றார்கள்.ஆனால் கல்முனை மாநரசபை விடையத்தில் கூட முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட முடியாமல் இருக்கின்றது.

இதனால் கல்முனை மாநகரத்தின் ஆட்சியை நாங்கள் இழக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இவ்வாறான போக்கு முஸ்லிம் சமூகத்தில் இருக்கும்வரை அரசியலிலே அதிக இழப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமை ஏற்படவேண்டும் அந்த ஒற்றுமை அரசியல்வாதிகளிடம் பிரதிபலிக்கவேண்டும். இல்லையேல் வடகிழக்கு இணைந்தால் முஸ்லிம் சமூகம் பின்தள்ளப்படும் என்ற அச்சம் இருக்கின்றது என்றார். இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக பொது மற்றும் சர்வதேசச் சட்டத்துறை சட்டபீட சிரேஷ்ட விரிவரையாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம்.ஹக்கீம்,டொக்டர் வை.எல் .எம்.யூசுப்,சட்டத்தரணி யூ.எம்.நிஸார் ஆகியோர் உரையாற்றினார்கள்.

அஷ்செய்க் இஸட். எம்.நதீர் நிகழ்வை நெறிப்படுத்தினார் சகல துறைகளையும் சார்ந்ததாக எழபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 01. “புதிய அரசியல் யாப்பும் முஸ்லிம்களும்.” என்ற விடயம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் வெளிப்படையாக மேற்கொண்டதாகத் தெரியவரவில்லை. ஏனைய சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த கட்சிகள் இதற்காக சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களையும் துறைசார்ந்த நிபுணர்களையும் கொண்ட குழுக்களை அமைத்து தமக்கான முன்மொழிவுகளை வரைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவரும் இச்சந்தர்பத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்துவருவதானது மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை மீறும் செயல் என்பதை இச்சபை வருத்தத்துடன் தெரிவிக்கினறது.

02. முஸ்லிம் அரசியல் கட்சிகள், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் எத்தகைய தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பத்திலும் அம்மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புக்களினதும், புலமையாளர்களினதும் ஆலோசனைகளை அவசியம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். 03. கிழக்கு மாகாணம், வரலாறு நெடுகிலும் இருந்தது போல தனது தனித்துவமான இயல்பையும் இயற்கையையும், சமய, கலை, கலாச்சார விழுவியங்களையும் பேணும் வண்ணம் தொடர்ந்தும் தனியான ஒரு மாகாணமாகவே இருத்தல் வேண்டும். 04. கிழக்கு மாகாணத்தின் எல்லைகள் 1978 ஆம் ஆண்டின் யாப்பிற்கமைய உறுதிப்படுத்தப்பட வேண்டும். 05. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழித்துவிடாமல் அரசியல் யாப்பின் 19ஆம் திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.

06. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் “கிழக்கிலங்கை முஸ்லிம் மஜிலிஸ்” என்ற பெயரில் புதியதொரு அமைப்பு உருவாக்கப்படும். அதில் கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் சார்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிருவாகிகள் உள்வாங்கப்படுவர். 07. உத்தேச அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பில் அம்பாரை மாவட்டத்திற்கான மக்களின் கருத்துக்களை திரட்டும் குழுவினரின் பெப்ரவரி 27,29 ஆம் திகதிகளின் அமர்வுகள் கரையோர பிரதேச இடங்களிலும் நடாத்தப்படல் வேண்டும்.

(பேராசிரியர்.எம்.ஏ.எம்.சித்தீக்)