தமிழர் பிரச்சினையை கை கழுவுகிறதா இந்தியா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தும் இடம்பெற்றிருக்கவில்லை. இது இந்திய ஊடகங்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக புதுடில்லியைத் தளமாக கொண்ட ஆங்கில ஊடகங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஏனென்றால், எப்போதெல்லாம், இலங்கை அரசாங்கத் தலைவர்களை, இந்திய அரசாங்கத்தின் தலைவர்களும், அமைச்சர்களும் சந்திக்கின்றனரோ, அது தொடர்பாக வெளியிடப்படும் கூட்டறிக்கைகளிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும், இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக குறிப்பிடத் தவறவிடப்படுவதில்லை. 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அனைத்து இன மக்களும் கெளரவமாகவும் நீதியாகவும், சமத்துவமாகவும் வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வந்திருக்கிறது.

இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே இருந்து வந்தாலும், இம்முறை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பயணத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் அதுபற்றி எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் பற்றியும் கூட அதில் ஏதும் கூறப்பட்டிருக்கவில்லை. இதனால், இலங்கையின் தேசியப் பிரச்சினை, போருடன் தொடர்புடைய மற்றும் போருக்குப் பிந்திய விவகாரங்கள், தமிழர்களின் உரிமையுடன் தொடர்புடைய விவகாரங்களில் இருந்து இந்தியா ஒதுங்கிக்கொள்ள முனைகிறதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கைக்கு இம்முறை மேற்கொண்ட பயணத்தின் போது, சில விடயங்கள் திட்டமிட்டோ எதேச்சையாகவோ தவிர்க்கப்பட்டன என்பது உண்மை. சுஷ்மா சுவராஜ். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதன் பிரதான நோக்கம், ஒன்பதாவது இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பது தான். ஆனாலும், அவர் அனைத்து தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவதற்கும் யாழ்ப்பாணம் செல்வதற்கும் முன்னதாகத் திட்டமிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியுடன் புனரமைக்கப்படும் துரையப்பா விளையாட்டரங்கை, அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. அதற்காக, அவசர அவசரமாக விளையாட்டரங்கைப் புதுப்பித்தல் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், கடைசியில் சுஷ்மா சுவராஜ் யாழ்ப்பாணப் பயணத்திட்டத்தை கைவிட்டார். வடக்கு, கிழக்கு, மலையக, அரசியல் பிரதிநிதிகளுடனும் சுஷ்மா சுவராஜ் பேச்சுக்களை நடத்தியிருந்த போதிலும், கூட்டறிக்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்த எந்தக் கருத்தும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த இரண்டு விடயங்களும் தவிர்க்கப்பட்டதற்கு ஏதேனும் உள்ளக காரணங்கள் இருக்கலாமோ? என்ற வினாக்கள் இருக்கவே செய்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சுஷ்மா சுவராஜ் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அதில் அவர் பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும், விரிவான எந்த தகவல்களும் கசிய விடப்படவில்லை. இந்தியா நினைத்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று மொட்டையான ஒரு கருத்தைக் கூறியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

அவர் அவ்வாறு கூறியதன் அர்த்தம், இந்தியா இன்னமும் அத்தகையதொரு முயற்சியில் இறங்கவில்லை என்பதையா அல்லது இந்தியா மனது வைத்தால் எல்லாம் நடந்து விடும் என்பதையா? என்ற கேள்வி இருக்கிறது. எவ்வாறாயினும், எதற்காக தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்படவில்லை? என்ற கேள்வியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் போது, இரா.சம்பந்தனின் இந்தக் கருத்தை சாதாரணமானதொன்றாகப் புறக்கணிக்க முடியவில்லை.

இந்தச் சூழலில், இந்தியா இப்போது இலங்கையிலும் இலங்கையிடமும் எதனை எதிர்பார்க்கிறது? என்றக் கேள்விக்கான விடை தேடல் ஒரு வேளை சுஸ்மா சுவராஜின் பயணத்தின் மௌனத்துக்கான காரணத்தை புலப்படுத்தக் கூடும். சுஸ்மா சுவராஜ், இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் முக்கிய நோக்கம் இருதரப்பு உறவுகளை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்வதாகும். சீனாவுடன் மீண்டும் உறவுகளை வலுப்படுத்த எத்தனிக்கும் கொழும்பை தன்பக்கம் இழுத்து வைத்துக் கொள்வது தான் புதுடில்லியின் இப்போதைய முதற்தெரிவாக இருக்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் சீனாவுக்குச் செல்லவுள்ளார். அதைவிட அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் சீனா செல்லவுள்ளார். இதற்குப் பின்னர், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் திட்டங்கள் அனைத்தும் மீளத் தொடங்கப்படவுள்ளன. அதைவிட சீனாவின் புதிய முதலீடுகள், திட்டங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. சீனாவின் உதவிகளைப் புறக்கணித்துச் செயற்பட முடியாது என்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ள நிலையில் தான், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த பயணம் இடம்பெறவுள்ளது.

அதைவிட, அண்மையில் இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதியும், பிரதமரும் வாழ்த்துக்களைக் கூறியிருந்தனர். அதிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் விருப்பம் வெளியிட்டிருந்தனர். இவ்வாறாக, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளும் ஏனைய உறவுகளும் மீண்டும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்ற சூழலில் தான், சுஸ்மா சுவராஜின் பயணம் இடம்பெற்றிருந்தது.

சுஸ்மா சுவராஜின் இந்தப் பயணத்தின் போது, முக்கியமான இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழுவின் 9ஆவது கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார். அதில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் 27 விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடக்கம், முதலீடு, வர்த்தகம், பொருளாதார அபிவிருத்தி, விஞ்ஞான தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், உதவிகள் என்று பரந்துபட்ட ரீதியில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

கூட்டத்தின் முடிவின் இரண்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அதில் ஒன்று, வடக்கில் 27 பாடசாலைகளை புனரமைப்பதற்கான உதவியை வழங்குவது. இரண்டாவது, மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்துக்குத் தேவையான கருவிகளை வழங்குவது. இவையிரண்டும் வடக்கு, கிழக்கு மக்களுக்காக அவர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்ட உதவிகள் போலவே தெரியும். தமிழ் மக்களின் நலன்களின் மீது இந்தியா அக்கறை கொண்டிருக்கிறது என்பது போலவே, இந்த உதவிகள் வெளிக்காட்டியிருந்தன.

ஆனால், இந்த கூட்டத்தில் இரண்டு நாடுகளின் நலன்களையும் உறுதிப்படுத்துவது குறித்தே பிரதானமாக ஆராயப்பட்டது. முடிவுகள் எடுக்கப்பட்டன. மிகக்கவனமாக, இந்தியாவின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கையும், இலங்கை மீதான பிடியை விட்டு விடக்கூடாது என்பதற்காக இந்தியாவும் இந்த விடயத்தில் இணைந்திருந்தன. திருகோணமலையில், பொருளாதார முதலீட்டு வலயம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய அபிவிருத்தி என்று வடக்கு கிழக்கின் கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களைச் சுற்றி இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தும் இருநாடுகளினதும் வர்த்தக, பொருளாதார, பாதுகாப்பு நலன்களையும் வாய்ப்புகளையும் மையப்படுத்தியதாகவே இருந்தன. இப்படியானதொரு நிலையில், இருதரப்பு உறவுகளுக்குள் சிக்கலான விவகாரங்களை செருகிக் கொள்வதற்கு இந்தியா விரும்பவில்லை போலவே தெரிகிறது. தமிழ்நாட்டில் மே மாதம் வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தி பா.ஜ.க. அரசாங்கம் காய்களை நகர்த்தும் வாய்ப்புகளுக்கும் அப்பால், இலங்கையை கைக்குள் வைத்திருப்பதற்கான வாய்ப்புகளுக்கே புதுடில்லி முன்னுரிமை கொடுத்திருப்பதாகவே தோன்றுகிறது.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், தமிழர் பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் குரலின் வீரியம் தொடர்ச்சியாகவே குறைந்து வந்து கொண்டிருப்பதை அனைவராலும் அவதானித்திருக்க முடியும். முன்னர், மஹந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அடிக்கடி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையாவது வலியுறுத்தி வந்த புதுடில்லியிடம் இருந்து இப்போது அப்படியான கருத்துகள் வெளியாவதே அரிதாக உள்ளது.

சுஸ்மா சுவராஜின் பயணத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூட, இந்த விவகாரம் மிக நாசூக்காக தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. அதாவது இலங்கை அரசாங்கத்துக்கு சங்கடம் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனது நலன்களை அடைய முனைகிறது இந்தியா. “முன்னாள் ஆட்சியாளர்களைப் போலல்லாது, இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையுடனான தனது பொருளாதார உறவை தமிழர்

பிரச்சினை என்ற குறுகிய அலைக்கற்றையின் வழியாக நோக்கவில்லை” என்று அண்மைய கட்டுரை ஒன்றில், கேணல் ஹரிகரன் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது இந்தியாவுக்குப் பிரதானமாகத் தேவைப்படுவது தமிழர் பிரச்சினைக்கான தீர்வல்ல. இலங்கையுடனான நிலையான உறவும், இலங்கை மூலம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களையும் வர்த்தக, பொருளாதார நலன்களையும் உறுதிப்படுத்திக் கொள்வது தான். அந்த இலக்கை சுஸ்மா சுவராஜின் பயணம் எட்டியிருப்பதாகவே தெரிகிறது. அதனால் தான், இதற்கு முன்னர் இந்தியா முன்னுரிமை கொடுத்த, தமிழர் பிரச்சினை சார்ந்த விடயங்கள் இப்போது மறைநிலைக்கு வந்திருக்கின்றன.

ஹரிகரன்