“ஜோதிடரும் தவெக செய்தித்தொடர்பாளருமான திரு. ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தமிழக அரசின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்று ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் செய்தி வெளியான வேகத்தில், “ஜோதிடர் என்று குறிப்பிட வேண்டாமே!” என்று ‘அன்பு வேண்டுகோள்’ விடுக்கப்பட்டதாக தெரிகிறது.
சென்ற அரசை சீரழித்ததில், அதிகாரிகளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஓர் அரசு ஊழியரின் கடமை என்ன, அந்தப் பொறுப்புக்கான மிடுக்கு என்ன எனும் எல்லா வரையறைகளையும் கடந்து, கட்சிக்காரர்களையும் தாண்டி அரசியல் சாயத்துடன் செயல்பட்ட அரசு இயந்திரத்தின் மீதான கோபத்தையும் சேர்த்துதான் மக்கள் 2026 தேர்தலில் காட்டியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு தேர்தல் முடிவும் அதிகாரத்தில் இருந்த அரசியலர்கள் மீது மட்டுமல்ல; அரசு அதிகாரிகள் மீதான சமூகத்தின் எண்ணத்தையும் சேர்த்தே பிரதிபலிக்கிறது.
மக்கள் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பரிசீலிக்கிறார்கள்; நீங்களும் பரிசீலிக்க வேண்டும். ஆட்சியின் நல்ல விஷயங்களை ஊடகங்கள் கவனத்துக்கு கொண்டுசெல்வதும், அரசுக்கும் ஊடகங்களுக்கும் பாலமாக செயல்படுவதும்தான் உங்களுடைய பணி.
அரசுக்கு சங்கடம் தரும் எந்தச் செய்திகளும் ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக்கொள்வதும், ஊடகங்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் ‘நிர்வகிக்கலாம்’ என்று பராமரிப்பதும் அல்ல.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடங்கி இளைஞர் அஜித் குமார் அடித்தே பிணமாக்கப்பட்ட விவகாரம் வரையிலான செய்திகளைத் தடுக்க கடந்த காலத்தில் ஊடகங்களுக்கு நீங்கள் கொடுத்த அழுத்தம் என்றைக்கோ ஒரு நாள் முழுக் கதையும் வெளியே வந்துதான் தீரும்.
நிச்சயமாக நேரம் வாய்க்கையில், ஒவ்வொரு பெயருடன் நான் எழுதுவேன்.வெகுஜன ஊடகங்களில் செய்திகளை நீங்கள் தடுக்கத் தடுக்கத்தான் சமூகவலைதளங்களில் அதே விஷயங்கள் பல கட்டுக்கதைகளும் சேர்ந்து, வதந்திகளாக பரவி ஆட்சியாளர்களை குழியில் தள்ளுகிறது.
இப்படித்தான் ஒரு முதல்வரே தன் தொகுதியில் தோற்கடிக்கப்படும் நிலையை நீங்களும் சேர்ந்தே உருவாக்கினீர்கள். இப்படிதான் இரு பெரும் கட்சிகளை அடுத்தடுத்து கீழே சாய்த்துவிட்டிருக்கிறீர்கள்.
ஆட்சிக்கு வந்திருப்பது ஒரு புதிய கட்சி. பிழைத்துப்போகட்டுமே; கெட்ட செய்திகளும் அரசின் காதில் விழட்டுமே!
ஊடகங்களுக்கு, குறைந்தபட்சம் ‘புதிய தலைமுறை’க்கு, செய்திகள் வெளியீட்டுக்கு தாராளமாக தொடர்புகொள்ளுங்கள்; இன்ன செய்தியை வெளியிட வேண்டாம் என்பதற்கு தயவுசெய்து தொடர்புகொள்ளாதீர்கள்!
இதுநாள் வரை நீங்கள் ஓர் அரசு அலுவலருக்கான மிடுக்கோடும், கண்ணியத்தோடும் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனதற்கு ஒருவேளை இங்கே ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த அமைப்பு சார்ந்த சூழலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
இப்போது ஒரு புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. இனியேனும் சூழலை கண்ணியமானதாகவும், பொறுப்பானதாகவும் மாற்றலாமே!
– சமஸ்