ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார்

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! பெருமைமிக்க தாய்மார் களே! தோழர்களே! உயர்திரு. பி.சி. ஜோஷி அவர்களே! வணக்கம்.

கம்யூனிஸ்ட்கட்சி நமது நாட்டில் அளவுக்கு வளரவில்லை. நாட்டில் எந்த எந்த சொத்தைக் கொள்கை யினைக் கொண்ட கட்சிகள் எல்லாம் தலை தூக்கி ஆடுகின்றன. உன்னத கொள்கையுள்ள கட்சி வெற்றி காணாதது ஏன்? மிகவும் உன்னதமான கொள்கையினைக் கொண்ட கட்சி, உலகில் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் முடிந்த முடிவான பொது உடைமைத் தத்துவத்தைக் கொண்ட கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால் என்ன ஜாதகம்?

கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர். கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள்பற்றோ, மதப்பற்றோ, சாஸ்திரப்பற்றோ, ஜாதிப்பற்றோ, நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருக்கக்கூடாது. லட்சியப் பற்று, வளர்ச்சிப்பற்று மட்டும்தான் இருக்கவேண்டும்.

நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்ன மாறுதல் பண்ணியது என்று சொல்ல முடியவில் லையே! இராமாயணத்திலும், பாரதத்திலும் பழைய இலக்கியங் களிலும் நம்பிக்கை வைப்பவர்கள் எப்படி கம்யூனிட்டாக முடியும்?

விபூதியும், நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசம் பேசுபவர் கள் எப்படி உண்மை கம்யூனிஸ்டாக முடியும்? கம்யூனிஸ்டுகளுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்டுக்கு நாட்டுப்பற்றுதான் எதற்கு? அவனுக்கு நாடே கிடையாதே, அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்ட்டுக்கு கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்கவேண்டும்?

நமது நாட்டு பத்திரிகைகாரர்கள் பெரிதும் அயோக்கியர்கள் ஆனபடி யால் 100க்கு 5 பேர்கள் கூட யோக்கியர்களாக இல்லை.
இவர்கள் கம்யூனிச எதிர்பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்களே ஒழிய கம்யூனிச தத்துவத்தினை பிரசாரம் செய்வதில்லையே?
நண்பர் பாலதண்டாயுதம் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார்.

எப்படி நேற்று இராஜாஜியைக் கூப்பிட்டுவிட்டு வம்பிலே மாட்டிக் கொண்டார்களோ அதுபோல அவர் எழுதியுள்ள புத்தகத்தில் என்னையும் எதிர்த்துத் தாக்கி வம்பிலே மாட்டிக் கொண்டார். இந்த புத்தகத்தில் 50ம் பக்கத்தில் “பகுத்தறிவின் பெயரால் நமது பண்டைய தமிழ் இலக்கியங்களை வெறுக்கும் போக்கு ஒன்று தமிழகத்தில் நிலவி வருகின்றது” என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி இவர் குறிப்பிட்டுத் தாக்கியதானது என்னைத்தானே ஆகும்?

மேலும் கூறுகின்றார் “வாழ்வும் சமயமும் பிரிக்க ஒண்ணாத வரையில் பின்னிக் கிடக்கும் இந்த நாட்டில் சமயநூல்களை ஒதுக்கித் தள்ளமுடியாது” என்று! இவர் இப்படி என்னைத் தாக்கியது பற்றி எனக்குக் கவலை இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தி வரலாமா? இலக்கியமும் மதமும் இவர்களுக்கு என்ன அழுகின்றது? இதுகள் பற்றிய எண்ணம் உங்களுக்கு இருக்கலாமா?

தோழர்களே! நான் சவால்விட்டே கேட்கின்றேன் நமக்கு என்ன அய்யா யோக்கியமான இலக்கியம் உள்ளது? இராமாயணமும், பாரதமும், சிலப்பதிகாரமும் வெங்காயமும் எந்த முறையில் மக்களுக்குத் தேவையான இலக்கியமாகும்? அதில் கம்யூனிசத்துக்கு ஆன படிப்பினை என்ன இருக்கிறது?

கம்யூனிஸ்ட்டுகள் இதுகளை கையில் தொடலாமா? “வாழ்வில் பின்னிக் கிடக்கும் சமய நூல்களை விலக்க முடியாது” என்கின்றார். விலக்கமுடியாது என்றால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் என்னத் திற்கு இருக்கின்றீர்கள்?

தமிழ்நாட்டில் இன்ன புலவன் பகுத்தறிவுவாதி, மனித சமுதாய வாழ்வுக்கு ஏற்றாற்போல் இலக்கியம் பண்ணினான் என்று கூற முடியுமா? சும்மா வீதிக்குவீதி பாரதிவிழா, பாரதியைப் பற்றிய பேச்சு என்று கொண்டாடுகின்றார்களே அந்த பாரதி என்ன அதிசயமான கருத்தைப் பாடினான்? பார்ப்பான் என்கின்றதினால் அவனுக்கு பெருமை அளிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

கம்யூனிஸ்ட்களாகிய உங்களிடம் பெரிய திட்டம் உள்ளது. சமுதாயத்துறையில் உயர்வு தாழ்வு நீக்குவது; பொருளாதாரத் துறையில் ஏழைப் பணக்காரனை ஒழிப்பது என்பது; உயர்சாதிக் காரன் கடவுள்தான் என்னை உயர்சாதிக்காரனாகப் படைத்தார் என்கின்றான். பணக்காரன் எனக்குப் பணம் கடவுள் கொடுத்தார், நீ என்னடா கேட்பது என்கின்றான்.

இந்த கடவுளை கம்யூனிஸ்ட் வெளுக்க வேண்டாமா? கடவுளாவது வெங்காயமாவது எல்லாம் பித்தலாட்டம் என்று மக்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டாமா? தெலுங்கிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள். ” நேசேவாடுக்கு கோந்திப்பில்ல. எந்துக்கு” என்று நெசவாளி நூலை பிணைந்துக் கொண்டே போகின்றதும் குரங்குக்குட்டி அறுக்கின்றதுமாகத்தானே இருக்கும்.

அதுபோல உங்கள் கொள்கைக்கும் இராஜாஜிக்கும் என்ன சம்பந்தம்? என்னத்திற்காக அவரை வம்பிலே அழைத்தீர்கள்? அப்படி வந்தவர் உங்கள் இலட்சியங்களைப் பற்றி உங்களைப் பற்றி நாலு நல்ல வார்த்தைதான் மனதார கூறுவாரா? இதுகளைப் பார்க்க வேண்டாமா?

நான் கம்யூனிஸ்ட் தலைவர்களை ரொம்பக் கேட்டுக் கொள்ளு கின்றேன். கம்யூனிஸ்ட்டுக்களாகிய நீங்கள் பெரிய தியாகிகள் பல லாப நஷ்டங்கள் எல்லாம்பட்டு உள்ளீர்கள். இதுகளுக்குப் பலன் வேண்டாமா?
தோழர்களே! செத்துப் போகும் நிலையில் இருந்த காங்கிரஸ் இன்று தலை எடுத்து நிமிர்த்து நிற்கின்றதே! காமராஜர் வந்தார் நிலைத்துப் போய்விட்டது. உங்கள் இயக்கம் வளர்ச்சி அடையாத தற்குக் காரணம் சரியான பிரசாரம் இல்லாததேயாகும். நீங்கள் இனியேனும் நாத்திகப் பிரசாரம் பண்ணனும். ரஷ்யாவில் கம்யூ னிஸ்ட்டுக்கள் பாதிரிகளையெல்லாம் வெட்டவில்லையா? நாம் நமது நாட்டுப் பாதிரிகளான பார்ப்பனர்களை வெட்டாவிட்டாலும் அவர்களை மக்களை மக்களாக மதித்து நடக்கச் செய்ய உணர்த்த வேண்டாமா இவர்களின் புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டாமா?

இன்றைக்கு நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். எதற்காக, அது கொண்டுள்ள கொள்கையில் இருந்து தப்பாகப் போகாமலி ருப்பதற்கு ஆகும். இன்றைக்கு காங்கிரசில் உள்ளவர்களில் கால்வாசிப்பேர்களுக்குத்தான் சமதர்ம உணர்ச்சி இருக்கின்றது. 3/4 பாகம்பேருக்கு அது வெறுப்பாகவே இருக்கும். இந்த 3/4 பாகப் பேர்களையும் வெளியாக்கி காங்கிரசைச் சுத்தப்படுத்த நாமும் ஒத்து ழைத்தால்தான் முடியும். கம்யூனிசம் சமதர்ம அஸ்திவாரத்தில் தானே எழுப்பப்படவேண்டும்?

நீங்கள் ஒரு தடவைதான் சட்டசபையை விட்டுவிடுங்களேன்: கட்சிப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்குங்களேன். சட்டசபைக்கு நின்று இரண்டொருவர் போய் என்னதான் சாதித்து விடமுடியும்?
எனக்கு என்னமோ சட்டசபைக்குப் போகின்றது பிடிக்கவில்லை. கொள்கையினை எடுத்துச் சொல்லவாவது போகவேண்டும் என்பீர் கள். எந்தக் கொள்கையினை எந்த மந்திரி முன்பு எடுத்துச் சொல்லி வெற்றிபெற்றீர்கள்?

நான் சட்டசபைக்குப் போகவில்லை. எனக்கு நாட்டில் மரியாதை இல்லையா செல்வாக்கு இல்லையா? எங்கள் கட்சிதான் சட்ட சபைக்கு போகாததினால் அழிந்து போய் விட்டதா?

நான் இராமாயணத்தைக் கொளுத்தியவன், கீதையை கொளுத்தி யவன், இராமன் படத்தை எரித்தவன், பிள்ளையார் சிலையை வீதிக்கு வீதி போட்டு உடைத்தவன்தானே அய்யா? எனக்கு நாட்டில் என்ன மரியாதை கெட்டுவிட்டது. நீங்கள் என்னை எவ்வளவோ பயன் படுத்திக்கொள்ளலாம். மக்கள் மனதில் மூடநம்பிக்கைகள், முட்டாள் தனமான பற்றுக்கள் குடிகொண்டு இருப்பது நீங்கப் பாடுபட வேண்டும். மக்களை எல்லாம் இந்த உன்னதக் கொள்கைக்குப் பக்குவம் உடையவர்களாக ஆக்கவேண்டும்.

விடுதலை 02.02.1966