தவறான முடிவுகளால் தள்ளாடும் மக்களும் திவாலாகும் நாடும்

இவ்வாறான நிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் மக்கள் மீது, சர்வதேச நாணய நிதியத்தை மேற்கோள் காண்பித்து வரி விதிப்பனவு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பில் நேரடியாக தாக்கம் செலுத்தும் பல முக்கிய பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், 18 வயது பூர்த்தி செய்த அனைவருக்கும் வரிக் கோவை ஒன்றை திறப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்தது. நாட்டின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் வரி செலுத்துவது முக்கியமானது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோவையை ஆரம்பித்து, அதனை பேணச் செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் ஒரு பக்கம் வரவேற்கத்தக்கதாக அமைந்திருந்தாலும், வரி செலுத்தும் மக்களுக்கு உகந்த சேவை கிடைக்கின்றதா என்பது கேள்வியாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக, பொது மக்களுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். அத்தியாவசிய தேவையான மருந்துப் பொருட்களைக் கூட வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரிக் கோவை பதிவு செய்யும் முறைமை மக்களை பாதிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். நீண்ட வரிசைகளில் காத்திருக்கச் செய்து இந்த முறைமையை மேற்கொள்ளாது, எரிபொருள் QR முறைமைக்கு மக்களை பதிவு செய்தமை போன்று, இலகுவாக இந்த கோவைக்கு மக்களை பதிவு செய்து கொள்ளக் கூடிய வசதிகள் காணப்பட வேண்டும்.

வரி செலுத்தும் மக்கள் மீது அதிகாரத்திலுள்ளவர்கள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு எதிரான குரல் எழுப்புபவர்கள் மீது அதிகாரத்தைப் பிரயோகத்து அவர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், அண்மையில் கைது செய்யப்பட்ட யுடியுபர் ப்ரூனோ திவாகர.

மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர், தமது வரப்பிரசாதங்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளதுடன், பொது மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், வரி விலக்களிப்புகளுடனான தமக்குரிய சொகுசு சுகபோக வாழ்க்கையிலிருந்து விடுபட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோவை திறப்பு என்பது தொடர்பான தீர்மானத்தின் காரணமாக, நாட்டிலிருந்து புத்திஜீவிகள் மற்றும் இளம் வயதினர் வெளியேறும் நிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.