இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

லண்டன் SOAS ஆய்வு நிறுவனத்தில் மருத்துவ மானிடவியலில் எம்.ஏ. பட்டமும், திரைப்படம், வீடியோ பயிற்சியில் பி.ஏ. சிறப்புப் பட்டம் பெற்ற இவர் ‘விபவி’ இலக்கிய விருது. சிறந்த சிறுகதைக்கான ‘சுபமங்களா’ இதழின் பரிசு, அக்கரைப்பற்று எழுத்தாளர்களால் வழங்கப்பட்ட கலைவாணி விருது, லில்லி தேவசிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது போன்ற இலக்கிய விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.

மட்டக்களப்பில் கோளாவில் என்ற அழகிய கிராமத்திலிருந்து முதன் முதலாக படிப்பதற்கு வெளியில் சென்ற பெண் இவர்தான் எனக்கூறும் ராஜேஸ் பாலா யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதிப்பாடசாலையில் பயின்றுகொண்டிருந்த வேளை எழுத்தாளர் நந்தி விரிவுரையாளராக அமைந்தமை தனக்கு இலக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்ததாகக் கூறுகின்றார்.

யாழ்ப்பாணத்த்தில் அவரது கணவர் பாலசுப்ரமணியம் அவர்களின் தொடர்பால் முற்போக்கு இலக்கியங்கள் அவருக்கு அறிமுகமாகின. சாதியக் கொடுமையால் எரிகாயங்களுக்கு இலக்காகிப் பரிதாபமாய் இறந்துபோன ஒரு கொடுமையை மையமாக வைத்து ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சிறுகதை செ.யோகநாதன் நடாத்திய ‘வசந்தம்’ என்ற பத்திரிகையில் பிரசுரமாகிருந்தது. டொமினிக் ஜீவா நடாத்திய மல்லிகையிலும் ‘எழில்நந்தி’ என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்திருக்கின்றார்.

‘கோடை விடுமுறை’ என்ற அவரது முதல் நாவல் ‘அலை’ வெளியீட்டினரால் பிரசுரம் பெற்று தனக்கு எழுத்துலகில் ஒரு அந்தஸ்த்தைத் தேடித் தந்தது என்று கூறும் ராஜேஸ்வரி லண்டன் முரசு என்ற என்ற சஞ்சிகையில் தனது சிறுகதைகளையும், தொடர் நாவல்களையும் பிரசுரித்து சதானந்தன் தனது இலக்கிய வளர்ச்சியை ஊக்கப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களையும் தன்னை ஊக்கப்படுத்திய முக்கிய ஆளுமைகளில் ஒருவர் என்று ராஜேஸ்வரி கூறுகின்றார்.

இலங்கையின் இன ஒடுக்குதலிலிருந்து தப்பிää இங்கிலாந்தில் வாழ நேர்ந்த தமிழ் இளைஞர்களின் கருத்து நிலைப்பாட்டிலிருந்து ஒரு அரசியல் நாவலாக ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவலை எழுதினார். 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து லண்டனிற்கு வந்து குவிந்த தமிழ் அகதிகளின் மூலம் அவர் அறிய நேர்ந்த பிரச்சினைகளை முன்வைத்து அவர் எழுதிய அரைகுறை அடிமைகள், சுற்றி வளைப்பு போன்ற அவரது படைப்புக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

லண்டனில் வாழும் தமிழ் அகதிகளின் யதார்த்தமான பிரச்சினைகளை மையப்படுத்தி ‘வளர்மதியும் வோஷிங்மெஷினும், ‘ரோசா லக்சம் பேர்க்வீதி;’ போன்ற கதைகள் பெரிதும் சிலாகிக்கப்பட்டன. இலங்கையில் தமிழ் இயக்கங்களிடையே நடைபெற்ற சகோதரப் படுகொலைகளையும், இயக்கங்களின் வன்முறைகளையும் பின்னணியாகக் கொண்டு ‘ஒரு சரித்திரம் சரிகிறது’, ‘நேற்றைய சிநேகிதி’, ‘இரவில் வந்தவர்’, ‘ஆனா ஆவன்னா’, ‘அட்டைப்பட முகங்கள்’ போன்ற சிறுகதைகளை எழுதியிருந்தார்.

‘இந்தியா டுடே’ என்ற சஞ்சிகையில் தொடர்ச்சியாக ‘விருந்தினர் பக்கம்’ என்ற பிரிவில் எழுதி வந்திருக்கிறார். கோவை ஞானி ராஜேஸ்வரியின் இலக்கிய முயற்சிகளுக்கு எப்போதுமே உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். தமிழகத்தில் அவரது நூல்களை வெளிக்கொணர்வதில் செ.கணேசலிங்கன் அவர்கள் பல உதவிகள் செய்துள்ளார்.

இவரது இலக்கியப்படைப்புகளில் மனிதநேயம், ஜனநாயகப் பண்புகள் ஆகியவற்றையே முன்னெடுத்துவரும் ராஜேஸ்வரி குறுகிய இனவாதத்தையும், பிராந்திய வாதத்தையும் மேவி இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேலும், மேலும் தமிழ் மக்கள் அழிவுப்பாதையில் செலுத்தி விடாமல் அவர்கள் வலிமையான கௌரவம் மிகுந்த சமூகத்தினராக வளர்த்து எடுக்கவேண்டும் என்ற நோக்கிலுமே எழுத்துக்கள் உருவாக் வேண்டும் என்பதில் உறதியாக இருந்திருக்கிறார்.

இலக்கியத்திலும் வாழ்விலும் நேர்மையாகச் செயற்படுவதை தத்துவமாக்கிக் கொண்டவர் ராஜேஸ்வரி;. புகலிடத்தில் தாங்கள் சொகுசுடன் வாழ்ந்துகொண்டு, நடைமுறைக்கு ஒத்துவராத ஈழத்தமிழர்களுக்கு மேலும் துயரங்களை ஏற்படுத்துகின்ற வெற்றுக் கோஷங்களை முன்வைப்பவர்கள் வியாபித்துக்கிடக்கும் இன்றைய சூழலில், சரியான கருத்துக்களையும் நடைமுறை வேலைத் திட்டங்களையும் செயற்படுத்துவது நம்முன் உள்ள பெரும் சவாலாகும். இதனை எழுத்தாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், அறிவு ஜீவிகளும் எதிர்கொண்டாகவேண்டும் என்பது அவரது தீர்க்கமான கருத்தாகும்.

பெண்ணிய எழுத்துக்கள் குறித்து ராஜேஸ்வரி அவர்களின் கருத்துக்கள் சற்று வித்தியாசமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ‘திருவள்ளுவரிலிருந்து வைரமுத்துவரை எல்லோரும் பெண்களைத் தங்கள் பாதிப்புரியவர்கள் என்றுதான் படைக்கிறார்கள். கம்பரும், கண்ணதாசனும் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பெண்களின் கொங்கைகளையும், கொவ்வை இதழ்களையுமே கண்டார்கள்.

குழந்தைப்பேற்றின் வேதனையையும், மாதவிடாயின் நோவும் மறைக்கப்பட்ட விஷயங்களாகவே இருந்தன. மேலைநாட்டு ஆண் எழுத்தாளர்களும் இதைத்தான் செய்கிறார்கள். தமிழின் சிறந்த நாவல்கள் எனப்படும் ‘அம்மா வந்தாள்’ ‘பள்ளி கொண்ட புரம்’ போன்ற கதைகளில் வரும் சோரம் போன பெண்களைத்தான் ஆண் எழுத்தாளர்கள் படைக்க முடிந்தது. இம்மாதிரியான படைப்புக்கள் ஒரு விதத்தில் ஆண்களின் இச்சையைத்தான் காட்டுகின்றது. பெண்மையின் ஒரு பகுதியை பற்றிய அதாவது உடம்பைப் பற்றிய கதைகளை மட்டுமே விவரித்துக் காட்டுகிறது.

பெண்களின் உடம்பு, சமயம், சமுதாயம் என்ற அமைப்புகளைப் பிரதிபலிப்பதற்காக ஆண்களால் ஆசிக்கப்படுகின்றது. பெண்களின் உடம்பு உயிரியல் ரீதியாகவும் (Sex) சமூகவியல் ரீதியாகவும் (Gender) பகுக்கப்படுகின்றது’ என்று கூறுகின்றார். அத்தோடு மேலை நாடுகளில் இன்று பெண்ணிய எழுத்தாளர்கள் பலர் பெண்களைப் பற்றியும் பெண்களுக்காகவும் எழுதுகிறார்கள். இந்தியாவிலும் இலங்கையிலும் விழிப்புணர்வு கொண்ட பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணிய எழுத்துலகில் மாற்றங்கள் வருவதற்குக் காரணமாக மிச்சேயில் பூக்கோவும், ஃபிராய்டும் எங்களிடம் பிறக்க எத்தனையோ வருடங்கள் பிடிக்கும்.

இன்று பெண் எழுத்தாளர்கள் தங்களுக்குப் போடப்படும் தடைகளைத் தாண்டி,எழுப்பப்படும் கிண்டல்களைச் சட்டை செய்யாது ஆரோக்கியமான ஒரு எழுத்துச் சூழலை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எழுத எத்தனையோ இருக்கின்றன. எங்களிடமிருந்து ஒரு சீமொன்டிபூவா, ஜேமன் கிறியா, எமிலி மார்ட்டின், டொனா ஒரலேய், அஞ்சலா டேவிஸ், ஒரு ரோணி மொறிஷன் பிறக்க வேண்டும். பெண்களுக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. அதை ஆண்கள் நிழலாக்கலாம். ஆனால், அதனை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பெண் எழுத்துக்களை எழுதியாகவேண்டும் என்கிறார் ராஜேஸ்வரி.

இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட ராஜேஸ்வரி ஆங்கிலத்திரைப்படங்கள் வழியாக திரைப்படத்துறைக்கள் ஆகர்ஷிக்கப்பட்டேன் என்கிறார். லண்டனில் 1985ஆம் ஆண்டில் நடைபெற்ற சுரங்கத்தொழிலாளர்கள் நடாத்திய நீண்ட போராட்டத்திற்கு எதிராக அப்போதைய பிரதமர் மார்கிரட் தாச்சர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளுக்க எதிரான போராட்டத்தில் தான் தீவிர ஈடுபாடு காட்டியதாகவும், அந்த அடக்குமுறைகளை அவர் வீடியோவில் பதிவு செய்ததாகவும். அதை அவதானித்த டேவிற் றேர்னர் என்ற திரைப்படக்க கலைஞர் அவரைத் திரைப்படத் துறையில் நுழையுமாறு ஊக்கப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றார்.

அவர் பயின்ற திரைப்படக் கல்லூரியில் அத்திரைப்படப் பயிற்சியைப் பெற்ற முதல் ஆசியப் பெண்ணாக ராஜேஸ்வரி திகழ்ந்திருக்கிறார். அத்திரைப்படக் கல்லூரியின் அதிபர் ப்ரசித் கையம் நிறைய உற்சாகம் கொடுத்ததை நன்றியுடன் நினைவுகூரும் ராஜேஸ்வரி தனது பயிற்சி நெறிக்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் தமிழகம் சென்றபோது பாலுமகேந்திரா உட்பட்ட பல்வேறு திரைப்படக் கலைஞர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

ஈழத்தில் தமிழ் அகதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘Escape From Genocide ’ என்ற விவரண ஆவணப்படத்தை 1986ஆம் ஆண்டிலும், ‘Private Place’ என்ற திருமண வாழ்வில் பாலியல் வன்முறை தொடர்பான 16MM என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். மூன்று குழந்தைகளுடன் தனித்த ஒரு தாயாக லண்டனில் வாழ்க்கையைக் கொண்டு நடாத்தும் போராட்டத்தில் எனது திரைப்பட ஆர்வத்தை பலியிட நேர்ந்தது என்கின்றார் ராஜேஸ்வரி.

இவருடைய முகநூல் நட்பு இரண்டு நாள் முன்னர் கிடைத்தது. இவரைப் பற்றி Iravi.com இல் படித்து அறிந்து கொண்டேன். இவருடைய முகநூல் நட்பு பெருமைக்குரியது.