தங்க வாயிலை நோக்கி நகர்வதை தடுக்கும் ‘இலஞ்ச பேய்’

இலங்கையில் லஞ்சம் தொடர்பான முக்கிய சட்டமாக 1954ஆம் ஆண்டின் இலஞ்ச ஒழிப்பு சட்டத்தை அடையாளம் காணலாம். அதைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது,

இதன் மூலம் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நிறுவப்பட்டது.தற்போதைய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, லஞ்சம் என்பது ஏதாவது ஒன்றைச் செய்ததற்காகவோ அல்லது செய்யாமல் இருந்ததற்காகவோ வெகுமதியாக வழங்கப்படும் தூண்டுதல் அல்லது பரிசு என வரையறுக்கப்படுகிறது.

அதாவது, அது ஒரு தொகை பணமாகவோ, அசையும் அல்லது அசையாச் சொத்தாகவோ, வேலையாகவோ, ஒப்பந்தமாகவோ, பாலியல் சலுகைகளாகவோ அல்லது வேறு ஏதேனும் சாதகமான சலுகையாகவோ இருக்கலாம்.

வாகனங்களை உடனடியாக பதிவுசெய்து மாற்றுவதற்காக ஒரே நாளில் பொதுமக்களிடம் கிட்டத்தட்ட 4 மில்லியன் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப்

புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் துறையின் நாரஹேன்பிட்ட கிளையின் பிரதி ஆணையர் உட்பட மூன்று பேர், கொழும்பு பிரதம நீதிமன்ற நீதவான் தனுஜா லக்மாலி வெள்ளிக்கிழமை (23) உத்தரவின் பேரில், ஜூன் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காணி விவகாரத்தில் சுமுகமாகத் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக, இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பது முதல், விளையாட்டுத்துறை உள்ளிட்ட சகல முறைகளிலும் இலஞ்சத்துக்குக் குறைவே இல்லை. இலஞ்சம் கேட்பதும் குற்றம் கொடுப்பதும் குற்றமாகும். எனினும், தங்களுடைய அவசர வேலைகளை ​இழுத்தடிக்காமல் இலகுவாக செய்து முடித்துக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுக்கின்றனர்.

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை, ஏப்ரல் 9ஆம் திகதியன்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,   இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அன்றி ஒரு மனிதாபிமான கடமையாகும்.

ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.பாலியலை இலஞ்சமாகக் கேட்டவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரச திணைக்களங்களில், ‘இலஞ்ச கொத்து’ இருப்பதாகவும், இலஞ்சத்தை வாங்கி, பிரித்துக்கொள்கின்றனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆகையால், இலஞ்சம் வாங்குவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். என்பதுடன், இலஞ்சம் கொடுக்கக்கூடாது என்பது தொடர்பில் மக்களுக்கு​தெளிவூட்டவேண்டும். இலஞ்சத்தை ஒழிக்கவும் வேண்டும்.