அமெரிக்கா சீனாவுக்கு இடையில் 2025 இல் போர் வெடிக்கும்

தைவான் மீது படையெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்க விமானப்படை தளபதியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தைவான் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவை, சீனா தொடர்ந்து சீண்டி வருவதும் அமெரிக்காவை போரில் இறங்க வைக்கும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

போரை விரும்பும் சீனா தனி நாடாக விளங்கும் தைவானை நெடுங்காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. எப்படியாவது தைவானை சீனாவுடன் இணைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தைவானுக்கு பக்கபலமாக இருப்பதால் அந்நாட்டை நெருங்க சீனா தயக்கம் காட்டி வந்தது.

தைவான் விவகாரம் ஒருபுறம் இருக்க, இந்தியாவையும் அவ்வப்போது சீனா சீண்டி வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான லடாக், அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் அந்நாட்டு இராணுவம் பல முறை முயற்சி செய்தது. ஆனால், இந்திய இராணுவத்தினரின் தீரத்திற்கு முன்னால் சீனப்படையினரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. லடாக்கிலும் சரி, அருணாச்சலப் பிரதேசத்திலும் சரி, தொடர்ந்து இந்தியாவிடம் குட்டு வாங்கி ஓடுவதே சீனாவுக்கு வாடிக்கையாகி விட்டது.

அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை இந்நிலையில், தைவான் மீது போர் தொடுக்க சீனா முயற்சித்தால் அதற்கு முன்னதாக எங்கள் இராணுவத்தை சீனா எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா சமீபத்தில் பகிரங்கமாக எச்சரித்திருந்தது.  

இந்த சூழலில், அமெரிக்க விமானப்படை தளபதிகளில் ஒருவரான ஜெனரல் மைக் மினிஹான், தனது தலைமை தளபதிக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித விவரங்கள் இப்போதுதான் வெளியாகியுள்ளன. அதில் அவர், “நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம். ஆனால், என் உள்ளுணர்வு ஒன்றை சொல்கிறது. அது, அமெரிக்கா – சீனா இடையே 2025-ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய பயங்கரமான போர் நடக்கும் என்பதுதான்” எனக் கூறியுள்ளார்.