அரசு தரும் அழுத்தம் மின்சாரக் கதிரையைவிடக் கொடுமையானது! மகிந்த புலம்பல்!

மின்சார நாற்காலியில் இருந்து தப்பினாலும் தற்போது அதனை விட பன்மடங்கு அதிகமான அழுத்தங்களுக்கு தான் உள்ளாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று(திங்கட்கிழமை) உடற்பயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மின்சார நாற்காலிக்கு அனுப்புவதை விட மனரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் போதுமானது. மின்சார நாற்காலிக்கு கொண்டு சென்றது போல்தான் இதுவும். அது ஒருமுறைதான். இது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் தண்டனை. எனினும், ஒரு போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன். அவ்வாறு துரோகியானதும் இல்லை. 58 இலட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. அதற்கு பிறகு வாக்களித்த 48 லட்சம் வாக்காளர்களுக்கும் நான் துரோகியாகவில்லை. ஆனால் துரோகியானது யார் என்பதே கேள்வி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அந்த கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. மக்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை கோரியுள்ளதுடன் அதற்கான தலைவர் ஒருவரையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். ” எனத் தெரிவித்தார்..