‘ஆவா’ தொடர்பில் பொலிஸார் ஆவல்

யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துக்கு நாமே காரணம் என்று தெரிவித்துள்ள “ஆவா” என்ற குழுவினர் பற்றிய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், பல்வேறான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இச்சம்பவத்தின் போது, தாக்கியவர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரத்ன நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார்.

அரச புலனாய்வு சேவைப்பிரவைச் சேர்ந்த பொலிஸார் இருவர், இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டுக்கு இலக்காகி, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இளைக்கப்பட்ட கொடூரத்துக்கு பதிலடியாகவே, இந்த வாள்வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்டதாக, “ஆவா” என்ற குழுவினரால் யாழ்ப்பாணத்தில் பதாதைகள் வெளியிடப்பட்டுள்ளன. எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ சட்டதை கையிலெடுக்க விடமாட்டோம் என்று யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.